வெளி நாடுகளில் இந்தியர்கள்

எனக்குத் தெரிந்ததை சொல்கிறேன். பூங்கொத்துக்களோ போர்வாளோ எதுவாகினும் அனுப்பி வையுங்கள்.

இந்தியர்கள் வெளிநாடுகளுக்கு வந்ததும் விநோதமாக நடந்து கொள்கிறோம்.

என் அனுபவத்தில் சில எடுத்துக்காட்டுகள்…

புதிதாக என்னை பார்க்கும் நம்மவர்கள் முதலில் கேட்கும் கேள்விகள்:

தமிழ்நாடா கேரளாவா?
எவ்வளவு சம்பளம்?
வீட்டு வாடகை எவ்வளவு?
இங்க எப்படி வாய்ப்பு கிடைச்சது? (இது தமிழன்)

ஒரு சிலர் கொஞ்ச நேரம் கழித்து “ஆமா, உங்க பேர் என்ன சொன்னீங்க?” என்பார்கள். “நான் எங்கேடா சொன்னேன்” என்று நினைத்தபடி ‘அறிமுகம்’ செய்து கொள்வேன். ஒரு சிலர் கடைசி வரை பெயரைக் கேட்பதே இல்லை. நேரம் மிச்சம்.

எனக்குத் தெரிந்த மட்டில் 80% பேர் இப்படித் தான் இருக்கிறார்கள்:

ஜப்பானியர்களிடம் போய் “தமிழும் தெலுங்கும் ஏறக்குறைய ஒரே மாதிரிதான். ஸ்க்ரிப்ட் தான் வேறு” என்று விளக்குகிறார்கள்.

உணவகத்தில் “மன்னிக்கவும், உணவு தயாராக கொஞ்சம் நேரமாகும்” என்று சொன்னால் “பரவாயில்லை, இதைத்தான் நாங்கள் Indian Punctuality என்று சொல்வோம். Take your own time” என்று மானத்தை ஏலம் விடுகிறார்கள்.

நம் மொழி தெரிந்தவர்கள் நாலு பேர் சேர்ந்து விட்டால் போவோர் வருவோரை எல்லாம் கிண்டல் செய்கிறார்கள் – அவர்களுக்கு நம் மொழி தெரியாது என்பதால்.

என்னைப் போல் இளிச்சவாயன் மாட்டிக்கொண்டால் “நான் IIT ல ஆறு மாசம் இருந்தேன், IISC ல அரை ப்ராஜெக்ட் பண்ணினேன்” என்று அள்ளி விடுகிறார்கள்.

ஃபிரெஞ்சுக்காரர்கள் ரொம்ப சோம்பேறிகள் என்று டச்சுக்காரர்களிடமும் ஜப்பானியர்களுக்கு சுட்டுப் போட்டாலும் ஆங்கிலம் வராது என்று ஃபிரெஞ்சுக்காரர்களிடமும் ஆங்கிலேயர்கள் வீடிழந்து நாடிழந்து பிச்சை எடுக்கப் போகிறார்கள் என்று சீனாக்காரர்களிடமும் உலக அரசியல் பேசுகிறார்கள்.

ஒரு இத்தாலியப் பெண் என்னோடு ரொம்ப நெருங்கி பழகிட்டா… இப்போ அவ அவங்க நாட்டுக்கு போறா…. ஒரே அழுகை… நான் என்ன செய்ய…. என்று பீதியைக் கிளப்புகிறார்கள்.

முத்தமிடும் காதலர்களை முறைத்துப் பார்ப்பதோடு நில்லாமல் சில நேரங்களில் அவர்களுக்குத் தெரியாமல் புகைப்படமும் எடுத்து தனக்குத் தெரிந்த இந்தியர்களிடம் காட்டி “அங்கே இதெல்லாம் ரொம்ப சாதாரணம்” என்று பெருமை பீற்றிக்கொள்கிறார்கள்.

சிலர் ஒருசில ஆண்டுகள் இங்கே இருந்துவிட்டால் மனதளவில் இந்த நாட்டவர்களாகவே மாறி விடுகின்றனர். உலகமே ஒரு குக்கிராமமாக மாறிவிட்ட இந்நாளில் இதில் வியப்பேதும் இல்லை. ஆனால் வேர்களை மறந்து விட்ட மரங்கள் எவ்வளவு உயரம் வளருமோ தெரியாது.

சரி அது ஒரு புறம் இருக்கட்டும். பார்வோ என்ற ரயில் நிலைய நிழற்குடையில் யாரோ கிறுக்கி வைத்திருந்தார்கள்.

கிறுக்கல்கள்

இங்கும் விஷமிகள் இருக்கத்தான் செய்கிறார்கள் என்று காட்ட புகைப்படம் எடுத்துக் கொண்டேன்.

வெளியே வந்ததும் தான் தெரிந்தது அந்த விஷமிகளின் இந்திய விலாசம்.

இந்தியரின் கைவண்ணம்

மணல் மன்னர்கள்

மணலுக்கும் நமக்கும் எப்போதும் ஒரு வித சிநேகிதம் உண்டு. பள்ளிக்கூட நாட்களில் சுடும் மணலில் மண்டியிட்டவர்கள் மன்னிக்கவும். மற்றபடி நீளம்/உயரம் தாண்டுதலில் நாம் விழும் தளமாகட்டும், கபடி ஆட்டக் களமாகட்டும், கடற்கரை காதலாகட்டும்,  நிலச் சரிவு தடுப்புச் சுவர்கள் ஆகட்டும், மணலுக்கும் நமக்கும் எப்போதும் ஒரு வித சிநேகிதம் உண்டு. நிறைவேறாத கனவுகளை மணல் கோட்டைகள் என்கிறோம். வெறும் பேச்சிலேயே ஏவுகணை விடுபவர்களை மணல் கயிறு திரிக்கிறான் என்கிறோம். அதி நவீன சிலிக்கான் சில்லுகளுக்கு இன்னும் மணலையே சார்ந்திருக்கிறோம்.

பல துறைகளிலும் பல விதங்களில் பயன்படும் மணலைக் கொண்டு சிற்பங்கள் செய்தால் எப்படி இருக்கும்? எண்ணம் எவனுக்கு முதலில் வந்தது என்று தெரியவில்லை. பல நாடுகளிலும் இது ஒரு பிரபல கலையாக மாறி வருவது உண்மை.

அப்படி ஒரு மணல் சிற்ப கண்காட்சிக்கு அண்மையில் (உண்மையில் சற்று தொலைவில்) செல்ல நேர்ந்தது. அங்கு கண்டவற்றைப் பகிர்கிறேன்.
ஒரு நாட்டைப் பற்றி ஓரிரு சிற்பங்களின் மூலம் எடுத்துக் கூறுவது கடினம். “டூர் ஒப் தி வேர்ல்ட்” என்ற தலைப்பில் ப்லாக்கன்பர்க் நகரில் நடை பெற்ற மணல் சிற்ப கண்காட்சியில் பன்னாட்டுக் கலைஞர்கள் நாற்பது நாடுகளின் பண்பாட்டை பிரதிபலிக்கும் முகமாக அழகிய சிற்பங்களை உருவாக்கி உள்ளனர்.
எடுத்துக்காட்டாக, கியூபா நாட்டைக் குறிக்க சே குவேரா உருவத்தையும் அந்நாட்டு இசைக் கருவி வாசிக்கும் இருவரையும் காட்டியிருந்தார்கள். அமெரிக்கர்கள் ஹாலிவுட், லாஸ் வேகாஸ், ரஷ்மோர் மலைக் குன்று, விடுதலை தேவதை சிலை என்று அமர்க்களப் படுத்தியிருந்தார்கள். ஜப்பானியர்களோ தங்களது சுமோ வீரர்களையும் ஹோண்டா இரு சக்கர வாகனத்தையும் மணலிலே செய்து வைத்திருந்தார்கள். 

 
 நமது இந்தியாவைக் குறிக்க காளி, விநாயகர், மற்றும் சிதார் வாசிக்கும் பெண் ஆகிய உருவங்களை வைத்திருந்தனர். காந்தி, தஞ்சை கோபுரம், கேரளா படகுப் போட்டி, சுதந்திரப் போர் போன்றவற்றை வைத்திருக்கலாம். தாஜ் மகால் வடிவத்தை அழகாக அமைத்திருந்தனர்.
வெறும் சிற்பங்களை வரிசைப் படுத்தி வைப்பதோடு நில்லாமல் தக்க ஒளி அளவையும் வைத்திருந்தார்கள். வெளியே ஏழு உலக அதிசயங்களையும் அமைத்திருந்தார்கள். கின்னஸ் புத்தகத்தில் இடம் பெரும் நோக்குடன் மிக நீளமான கண்காட்சியாக இதை அமைத்திருந்தார்கள்.

நான் இழப்பவை…

நான் இழப்பவை…
 
காலை செய்தித்தாள்
வாயாடி பண்பலை வானொலி
வெள்ளிக்கிழமை சாயங்காலக்
கோயில் ஒலிபெருக்கி
 
தேர் திருவிழாவில்
மாடிப் பெண்கள்
 
முதல் நாள் முதல் காட்சி நெரிசல்
கன்னி  கழியாத தேர்தல் வாக்குறுதிகள்
 
பழைய காகிதத்துக்கு மாம்பழம்
பக்கத்து ஊருடன் பந்தயக்  கிரிக்கெட்
 
நேற்றைய மழையின் காளான் தேடல்
 
நள்ளிரவில்
தானாக ஊளையிட்ட 
வங்கி அலாரம்
 
சில்லரை கேட்டு 
சத்தம போடும் நடத்துனர்
 
மகளிர் இருக்கைக்குப் போராடும் உரிமைவாதிகள்
 
அவசர ஊர்தியைத் துரத்தும் 
இருசக்கர ஆசாமிகள்
 
தண்டீஸ்வர வீதியில் சந்தன வாசனை
  
சாலையோர புளியமர நிழலில் தர்பூசணி
 
கரவொலி கேட்கும் வரை நில்லாத
தொலைக்காட்சித் தர்க்கங்கள்
 
நன்கொடை கேட்டு கதவு தட்டல்கள்
 
படிக்கட்டில் தொங்கல் பயணம்
டீக்கடை அரசியல்
 
வாழை இலையில் 
ஆந்திர மதிய உணவு
 
உதட்டுச் சாயம் வழியாக 
ஆங்கிலக் கலப்புத் தமிழ்
 
இறுதி ஊர்வல நடனங்கள்
 
இரண்டாம் ஆட்டம் முடிந்து வருகையில்
நாய்களின் துரத்தல்
 
சுதந்திர தினக் கவிதைகள்
தீபாவளிப் பட்டிமன்றங்கள்
 
கழிப்பிடக்   கெட்ட வார்த்தைகள்
கடற்கரைக் காதலர்கள்
 
தெண்டுல்கர் மீதான திட்டல்கள்
 
சனிப் பெயர்ச்சிப் பலன்கள்
 
எந்த வானிலை அறிக்கையிலும்
வராத மழைகள்
 
வீட்டுப் பின்புறம் மலர்ந்த
திடீர் பூக்கள்
 
போர்வையைப் பகிர்ந்திடும்
செல்லப் பூனைக்குட்டி
 
அம்மா அடுக்கிக் கொண்டே போகும்
அழகு தோசைகள்
 
புறப்படும் நாட்களில்
அப்பாவுடன் உரையாடல்கள்
 
இனிய தமிழ் பாடல்கள்
  
மற்றும் நீ…
 
 

புதிய பயணம்

அயல் நாடு செல்வது வெகு இயல்பாகி விட்டது. மக்களும் முற்காலதைக் காட்டிலும் இப்போது திறந்த மனதோடும் தன்னம்பிக்கையுடனும் எத்தகைய பயணத்துக்கும் தயாராக உள்ளனர். செல்பவர் ஒருவரே ஆயினும் அவரை வழியனுப்ப வண்டி கட்டிக் கொண்டு வருபவர்களை எல்லாம் பார்க்கும்போது
 மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கும் உசிலம்பட்டி பேருந்து நிலையத்துக்கும் பெரிய வேறுபாடு இல்லை.

என் நான்கு நண்பர்கள் – சங்கர், சந்தோஷ், சரவணன், மற்றும் தனா என்னை வழியனுப்ப வந்திருந்தனர். அழுகையை அடக்கியவாறே பெற்றோருடனும் உற்றாருடனும் தொலைபேசியில் உரையாடிவிட்டு  இவர்களிடமும் விடை பெரும் போதுதான் சற்று தனிமையை உணர்ந்தேன்.

தொடர்ச்சியாகப் பல பாதுகாப்பு சோதனைகளையும் விசாரணைகளையும் தாண்டி கை விரல்களைக் கடித்துக் கொண்டிருந்த கைப்பை நாடாவைக் கடிந்தபடி விமானத்தில் நுழையத் தயாரானேன். வெள்ளைக்காரர்கள் எல்லாம் பொறுமையாய்க் காத்திருக்கையில் நம்மாட்கள் பொது அறிவிப்பைப் பொருட்படுத்தாமல் நகர பேருந்தில் ஏறுவதைப் போல் முண்டியடித்துக் கொண்டு இருந்தனர்.

கடைசியில் போய் நிம்மதியாக ஏறிக் கொள்ளலாம் என்று பார்த்தால் மீண்டும் ஒரு பாதுகாப்பு சோதனை என்றார்கள். எனக்குப் பின்னால் வந்தவர்கள் எல்லாம் இப்போது என் முன்னே நின்றார்கள். பரவாயில்லை. நம் இடம் நமக்கு தானே என்று என்னை நானே தேற்றிக் கொண்டேன். விமானத்தில் படிக்கட்டு வழியாக ஏறுவோம் (தமிழ் படங்களின் தாக்கம்) என்று நினைத்து சென்றால் ஏதோ ஓர் அறைக்குள் செல்வது போலிருந்தது. எது விமான தளத்தையும் விமானத்தையும் இணைக்கும் தடம், எது விமானத்தின் உட்புறம் என்று அப்போது எனக்கு சத்தியமாகத் தெரியவில்லை. 
 
பணிப்பெண்கள் எதிர்பார்ப்பை வீணடிக்கவில்லை. மிகுந்த பொருமைசாளிகளாய் இருந்தனர். எண்ணியபடியே எனக்கு சன்னலோர இருக்கை கிடைத்தது. இருளில் ஒளிரும் மின்விளக்குகளின் அரவணைப்பில் சென்னை எப்படி காட்சி அளிக்கிறது என்று பார்க்கலாம் என்றால் பக்கத்துக்கு இருக்கையில் இருந்த போலந்து நாட்டுப் பெண் ஐரோப்பிய யூனியன் அரசியலையும் தனது இந்தியக் காதலையும் விவரித்துக் கொண்டிருந்தாள். அதுவும் சுவாரஸ்யமாகத் தான் இருந்தது. அவள் பேசிக் கொண்டே இருந்தாள் – பணிப்பெண் ஒருத்தி வந்து “கொஞ்சம் மெதுவாகப் பேசுங்கள், அனைவரும் உறங்குகிறார்கள், ப்ளீஸ்” என்று கூறும் வரை. அதன் பின்னும் அரை மணி நேரம் அவள் பேசிக் கொண்டு தான் இருந்தாள். அதற்குள்ளாக நான் என் முதல் வெளி நாட்டுப் பயணத்தையும் அங்கு என் வாழ்க்கை எப்படி இருக்கும் என்றும் யோசிக்கத் தொடங்கி இருந்தேன்.
 
இது வரை உடனிருந்தோர் என்னிடம் இருந்து விலகுகிறார்களா, அல்லது நானே விலகி போகிறேனா என்று புலப்படவில்லை. எனக்குத் தெரிந்ததெல்லாம்…. எனக்குப் பிடித்ததை எனக்குப் பிடித்தபடி செய்யப் போகிறேன். என் இதயம் விரும்பும் இடத்துக்குப் போகிறேன். இதற்காக நான் பலவற்றை இழத்தல் தகுமா? அங்கு நான் விரும்பிய படி வாழ்வு இருக்குமா? கனவுகள் நனவாகுமா? நடக்கும் என்று தான் தோன்றுகிறது.
பார்ப்போம்.

யாருமற்ற ஓர் நாளில்…

எதிர் வீட்டில் அலறும் தொலைகாட்சி, அதில் கத்திப் பேசும் பேச்சாளர்கள், பாடுகிறேன் பேர்வழி என்று படுத்துபவர்கள், திரை வாய்ப்பின்றி சின்னத் திரையில் நடுவராகி மகிழ்ந்து கொள்ளும் முன்னாள் நடிகர்கள், வயதுக்கு மீறிய அறிவைக் காட்டத் துடிக்கும் சிறுவர் மற்றும் சிறுமியர் என்று ஒரு பெரிய கூட்டமே என்னைக் கொல்லத் தயாராக இருக்கிறது.

கீழ் வீட்டில் முழுகாமல் இருக்கும் பெண். அவள் காலில் அணிந்திருப்பது கொலுசா சலங்கையா அல்லது சில்லறை காசு மாலையா என்று தெரியாது. அனால் அவள் அதிகம் நடக்கிறாள் என்று மட்டும் தெரியும். எதிர் வீட்டுப் பெண்ணை அவள் கீழே இருந்தபடியே கூப்பிடும் போது ஊரே அதிரும். இவள் இங்கிருந்தபடியே அவளிடம் பேசும் போது பூகம்பத்தின் பின்னதிர்வைப் போலிருக்கும்.

இதில் பக்கத்துக்கு வீட்டுப் பாட்டி வேறு. எதிலோ எதையோ போட்டு நங் நங் என்று இடித்துக் கொண்டிருப்பாள். அவசரமாகக் கட்டப்பட்ட எங்கள் குடியிருப்பே சற்று ஆட்டம் காண்பது போலிருக்கும். அவள் மகன் செல்பேசியை எடுத்தான் என்றால் நம் காது கிழியாமல் வைக்க மாட்டான். ஏறக்குறைய ஒரு மன நல மையத்தின் சூழல்.

இரைச்சல் உலகம்

இவர்களை எல்லாம் நாடு கடத்தினால் என்ன? பலமுறை யோசித்தும் அதற்கான வழிமுறை தெரியாத போது தான் என்ன ஆனதோ தெரியவில்லை, எல்லோரும் சொல்லி வைத்தாற்போல் எங்கோ போய் விட்டனர்.

‘அப்படா! இன்றைக்கு நிம்மதி. இறைவனுக்கு நன்றி’.

இரைச்சலை விட நிசப்தம் கொடியது போலும். பழகிய சத்தங்களைக் கேட்காமல் செவிகளில் ஏதோ ஒருவித வெற்றிடம் உருவானதைப் போன்ற உணர்வு.

அப்போது தான் நினைத்துப் பார்த்தேன்.

எல்லோரும் நம்மைப் போலவே இருந்து விட்டால்?

இந்த உலகம் வெறுமையில் இறந்து விடும். சிரிப்புகள், சத்தங்கள், வேடிக்கைகள், கூச்சல்கள், குடிகாரர்களின் உளறல்கள், தெரு நாய்களின் குரைத்தல்கள், தொட்டி நிறைந்து வழியும் தண்ணீர், அதை நிறுத்த விரையும் சிறுமி, தூரத்து ரயில் சத்தம், பதினாலு வினாடியில் ஆடித் தள்ளுபடி விவரிக்கும் விளம்பரம், பழைய வானொலிப் பெட்டியின் இரைச்சல், நூறாவது முறை பார்க்கும்போதும் சிரிக்க வைக்கும் நகைச்சுவை, அதன் விளைவு, இன்னும் எத்தனையோ…

இவை எல்லாவற்றையும் இழக்கிறேன். மயான அமைதியில் மனம் குமுறுகிறது.

இரைச்சல்கள் இருந்து விட்டுப் போகட்டும். இல்லையேல் நாம் பலவற்றை இழக்க நேரிடும்.

இரைச்சல்களும் இசையே

இரைச்சல்களும் இசையே

சத்தங்களை நேசிப்போம். பூமிக்கு வெளியிலிருந்து பார்போருக்கு அது ஒருவித இசையாகக் கூட கேட்கலாம்.

சத்தங்களை நேசிப்போம்.

இணையப் பயணம்

தாய் மொழியில் எழுதுதல் தனி சுகம்.
இணையத்தில் தமிழ் பார்த்தலில் ஒரு பரவசம்.
தமிழில் என் இணையப் பயணம் இனிதே தொடங்குகிறது.