எனக்குத் தெரிந்ததை சொல்கிறேன். பூங்கொத்துக்களோ போர்வாளோ எதுவாகினும் அனுப்பி வையுங்கள்.
இந்தியர்கள் வெளிநாடுகளுக்கு வந்ததும் விநோதமாக நடந்து கொள்கிறோம்.
என் அனுபவத்தில் சில எடுத்துக்காட்டுகள்…
புதிதாக என்னை பார்க்கும் நம்மவர்கள் முதலில் கேட்கும் கேள்விகள்:
தமிழ்நாடா கேரளாவா?
எவ்வளவு சம்பளம்?
வீட்டு வாடகை எவ்வளவு?
இங்க எப்படி வாய்ப்பு கிடைச்சது? (இது தமிழன்)
ஒரு சிலர் கொஞ்ச நேரம் கழித்து “ஆமா, உங்க பேர் என்ன சொன்னீங்க?” என்பார்கள். “நான் எங்கேடா சொன்னேன்” என்று நினைத்தபடி ‘அறிமுகம்’ செய்து கொள்வேன். ஒரு சிலர் கடைசி வரை பெயரைக் கேட்பதே இல்லை. நேரம் மிச்சம்.
எனக்குத் தெரிந்த மட்டில் 80% பேர் இப்படித் தான் இருக்கிறார்கள்:
ஜப்பானியர்களிடம் போய் “தமிழும் தெலுங்கும் ஏறக்குறைய ஒரே மாதிரிதான். ஸ்க்ரிப்ட் தான் வேறு” என்று விளக்குகிறார்கள்.
உணவகத்தில் “மன்னிக்கவும், உணவு தயாராக கொஞ்சம் நேரமாகும்” என்று சொன்னால் “பரவாயில்லை, இதைத்தான் நாங்கள் Indian Punctuality என்று சொல்வோம். Take your own time” என்று மானத்தை ஏலம் விடுகிறார்கள்.
நம் மொழி தெரிந்தவர்கள் நாலு பேர் சேர்ந்து விட்டால் போவோர் வருவோரை எல்லாம் கிண்டல் செய்கிறார்கள் – அவர்களுக்கு நம் மொழி தெரியாது என்பதால்.
என்னைப் போல் இளிச்சவாயன் மாட்டிக்கொண்டால் “நான் IIT ல ஆறு மாசம் இருந்தேன், IISC ல அரை ப்ராஜெக்ட் பண்ணினேன்” என்று அள்ளி விடுகிறார்கள்.
ஃபிரெஞ்சுக்காரர்கள் ரொம்ப சோம்பேறிகள் என்று டச்சுக்காரர்களிடமும் ஜப்பானியர்களுக்கு சுட்டுப் போட்டாலும் ஆங்கிலம் வராது என்று ஃபிரெஞ்சுக்காரர்களிடமும் ஆங்கிலேயர்கள் வீடிழந்து நாடிழந்து பிச்சை எடுக்கப் போகிறார்கள் என்று சீனாக்காரர்களிடமும் உலக அரசியல் பேசுகிறார்கள்.
ஒரு இத்தாலியப் பெண் என்னோடு ரொம்ப நெருங்கி பழகிட்டா… இப்போ அவ அவங்க நாட்டுக்கு போறா…. ஒரே அழுகை… நான் என்ன செய்ய…. என்று பீதியைக் கிளப்புகிறார்கள்.
முத்தமிடும் காதலர்களை முறைத்துப் பார்ப்பதோடு நில்லாமல் சில நேரங்களில் அவர்களுக்குத் தெரியாமல் புகைப்படமும் எடுத்து தனக்குத் தெரிந்த இந்தியர்களிடம் காட்டி “அங்கே இதெல்லாம் ரொம்ப சாதாரணம்” என்று பெருமை பீற்றிக்கொள்கிறார்கள்.
சிலர் ஒருசில ஆண்டுகள் இங்கே இருந்துவிட்டால் மனதளவில் இந்த நாட்டவர்களாகவே மாறி விடுகின்றனர். உலகமே ஒரு குக்கிராமமாக மாறிவிட்ட இந்நாளில் இதில் வியப்பேதும் இல்லை. ஆனால் வேர்களை மறந்து விட்ட மரங்கள் எவ்வளவு உயரம் வளருமோ தெரியாது.
சரி அது ஒரு புறம் இருக்கட்டும். பார்வோ என்ற ரயில் நிலைய நிழற்குடையில் யாரோ கிறுக்கி வைத்திருந்தார்கள்.

கிறுக்கல்கள்
இங்கும் விஷமிகள் இருக்கத்தான் செய்கிறார்கள் என்று காட்ட புகைப்படம் எடுத்துக் கொண்டேன்.
வெளியே வந்ததும் தான் தெரிந்தது அந்த விஷமிகளின் இந்திய விலாசம்.

இந்தியரின் கைவண்ணம்
Like this:
Be the first to like this பதிவு.