லேசர் ஐம்பது : பாகம் 1

இனியவை நாற்பது, ஐந்திணை ஐம்பது, கார் நாற்பது, கமல் ஐம்பது என்பது போல லேசர் ஐம்பது எழுத வேண்டிய காலம் வந்து விட்டது.

லேசரின் வயது 50 (படம்: Physics World)

அதற்கு என்ன என்கிறீர்களா?

காரணம் இருக்கிறது.
  • இன்றைய நவீன பலசரக்குக் கடைகளில் நீங்கள் வாங்கும் இட்லி மாவு பாக்கெட்டின் மீது கடைக்காரர் ஏதோ ஒரு கருவியைக் காட்டுகிறார். பீப் என்று ஒரு சின்ன சத்தம், அதை தொடர்ந்து அதன் அருகில் உள்ள விலை காட்டியில் மாவின் விலை தோன்றுகிறது.
  • ஒரு திரைப் பட சி. டி. அல்லது டி.வி.டி. மென்தகட்டினை வாங்கி பிளேயரில் அதை நுழைத்ததும் துல்லியமான படம் பார்க்க முடிகிறது.
  • லேசர் சிகிச்சை என்கிறார்கள்
  • லேசர் ஒளியில் கலை நிகழ்ச்சி என்கிறார்கள்
  • சிறுவர்கள் கூட கையில் லேசர் வைத்திருக்கிறார்கள்

இந்த லேசர் என்பது என்ன? எப்படி வேலை செய்கிறது?

முதலில் கடைக்காரரிடம் இருக்கும் அந்த கருவியை நோண்டிப் பார்ப்போம்.

இந்த கருவி UPC பார் கோட் ரீடர் (UPC Barcode Reader) எனப்படுகிறது.

UPC குறியீடு

UPC என்பது ஒரு பொதுவான குறியீட்டு எண். ஒவ்வொரு பொருளுக்கும் அதற்குரிய எண் இருக்கும். கருப்பு வெள்ளை கோடுகளாக ஒரு ஸ்டிக்கர் ஒட்டியிருப்பர்களே, அது தான். இந்த கோடுகள் இந்த இட்லி மாவு தயாரிக்கப்பட்ட தேதி, விலை, என்று அதன் சரித்திரத்தையே சொல்லக் கூடியவை. அதைப் படிக்க இந்த லேசர் கருவியால் தான் முடியும்.

இந்த கருவியைத் திறந்து பார்த்தால் அதில் இருப்பது:

ஒன்றிற்குள் இன்னொன்றாக ஹீலியம் மற்றும் நியோன் வாயுக்கள் நிரப்பப் பட்ட இரண்டு கண்ணாடி குழாய்கள், பாசிடிவ் மற்றும் நெகடிவ் தகடுகள்,  மற்றும் பாதி ஒளியை மட்டும் ஊடுருவ விடக் கூடிய சிறு கண்ணாடி.

இது தவிர, 21 பாகங்களாக பிரிக்கப் பட்ட ஒரு சுற்றும் விழிச் சுடர் – இந்த சுற்றும் தகடு  தான் பிரதிபலிக்கப் பட்ட லேசர் ஒளியைப் பதிவு செய்து கணிப்பொறிக்கு அனுப்புகிறது.

கொஞ்சம் மின்சாரம் கொடுத்தால் போதும். ஹீலியம் அணுக்கள் தலை தெறிக்க ஓட ஆரம்பிக்கும். சோம்பேறி நியோன் அணுக்களையும் உசுப்பேத்தி விடும். நண்பர், நண்பருக்கு நண்பர், அவருடைய நண்பர் என்று ஃபேஸ்புக் நட்பு பெருகுதல் போல அணுக்களில் ஃபுட்போர்ட் அடித்துக் கொண்டிருக்கும் ‘valence’ எலெக்ட்ரான்கள் எல்லாம் சேர்ந்து ஒரு சங்கம் வைத்து விடுகின்றன.

வாலிப வேகத்தில் வெளியே வந்துவிட்ட இந்த எலெக்ட்ரான்கள் அப்பன் அடிக்க வரும் முன் வீட்டுக்கு ஓடி விடலாம் என்று சங்கத்தை கலைத்து விடுகின்றன. ஆனால் இந்த சிறு பிள்ளைகளின் வெள்ளாமை வீடு சென்று சேர்வதில்லை. மாறாக, ஆற்றல் மிக்க ஒளியாக மேற்சொன்ன ‘பாதி ஊடுருவி கண்ணாடி’ வழியாக லேசர் ஒளியாக வெளி வருகின்றன. இத்தனையும் அந்த ‘பீப்’ என்ற சத்தம் அடங்குவதற்குள்ளாக!

இட்லி மாவின் ஸ்டிக்கர் மேல் பட்ட இந்த லேசர் ஒளி பிரதிபலிக்கப் பட்டு அந்த சுற்றும் தகட்டின் 21 பாகத்தில் எதாவது ஒன்றின் மேல் நிச்சயம் படும். இந்த ஒளி மீண்டும் மின்சாரமாக மாற்றப்பட்டு கணிப்பொறிக்கு புரியும் மொழியில் அனுப்பப் படுகிறது. இட்லி மாவின் விலை உங்கள் பில்லில் சேர்க்கப் படுகிறது.

எனக்கென்னவோ இதெல்லாம் ஆச்சர்யமாகப் படவில்லை. பார் கோட், லேசர், கணிப்பொறி எல்லாம் சேர்ந்து செய்யும் வேலையை நொடியில் மனக் கணக்கில் செய்யும் அண்ணாச்சி தான் வியப்பூட்டுகிறார்.

விஷக் கதைகள் – 1

ஃபேஸ்புக்கில் விளையாட்டாக ஆரம்பித்தோம் – “உங்களைக் கொலை செய்ய காத்திருக்கும் 10 நண்பர்கள்” என்ற ‘பயன்பாட்டில்’. என் ஆருயிர் நண்பர்கள் இருவர் என்னை எப்படி விஷம் வைத்துக் கொள்வது என்று என்னுடனே கலந்தாலோசித்தனர். நல்ல வேடிக்கையாக இருந்தாலும் அடி வயிற்றைக் கொஞ்சம் கலக்கத் தான் செய்தது.

ப்ரூஸ் லீ, மைக்கேல் ஜாக்சன் போன்ற பிரபலங்கள் இறக்கக் காரணம் அவர்கள் உட்கொண்ட சிலவகை மருந்துகளே அவர்களுக்கு விஷமாக மாறியது தான் என்ற கருத்து ஒருபுறம் இருக்க, இந்த விஷம் என்பது முதலில் எப்போது தோன்றியிருக்கும் என்ற கேள்வி எழுந்தது.

சில நாட்களுக்கு முன் படித்த பழைய National Geographic (மே 2005) இதழில் வந்த கட்டுரை ஒன்று நினைவுக்கு வந்தது. மேலும் பாட்டி சொன்ன புராணக் கதை, நெப்போலியன் வரலாறு, நந்தா திரைப் படம், ‘நஞ்சிருக்கும் தோலுரிக்கும்’ என்கிற இரட்டுற மொழிதல் பாடல் என்று நினைவுகள் விஷம் போல பரவத் தொடங்கி விட்டன. முதலில் கடவுளில் இருந்து ஆரம்பிப்போம்.

ஆலகாலம்
அசுரர், தேவர் என்ற இரண்டே ஜாதியினர் வாழ்ந்து வந்த காலத்தில், அமிர்தம் யாருக்கு என்பதில் கடும் போட்டி. ஆளுக்குப் பாதி என்ற ஒப்பந்தம் செல்லாது. முந்தியவருக்குப் பந்தி என்கிற ரீதியில் பாற்கடலைக் கடையத் தொடங்கி விட்டனர்.

முதலில் வந்ததோ அமிர்தம் அல்ல, ஆலகாலம் என்ற கொடிய விஷம். இந்த நஞ்சின் மூலப் பொருட்கள் என்னென்ன என்று இன்றளவும் டாக்சிகாலஜி நிபுணர்களால் சொல்ல முடியவில்லை. ஆனால் அந்த விஷம் உலக உயிர்கள் அனைத்தையும் அழிக்க வல்லது. இந்த சொல்யூஷனை வெல்ல ஒரே சொல்யூஷன் சிவன் தான் என்பதால் அவரிடம் சென்று அனைவரும் முறையிட்டனர்.

சிவனும் ஏதோ ரசம் குடிப்பது போல் இந்த விசத்தைக் குடித்து

நீலகண்டன், நஞ்சுண்டன்

விட்டார். சிவனுள் பாதியாம் பார்வதி மிக லாவகமாக சிவனது கழுத்தை அழுத்திப் பிடித்துக் கொண்டார். இதனால் விஷம் உள்ளேயும் இறங்காமல் வெளியேயும் போகாமல் அவரது தொண்டை பகுதியிலேயே நின்றுகொண்டது. ஆஸ்தான வைத்தியர் தனவந்திரி, இரவு முழுவதும் சிவனார் தூங்கக் கூடாது. அப்போது தான் விஷத்தின் தன்மை குறையும் என்று கூறியதும் கடவுளர் பலரும் சிவன் தூங்காதிருக்கப் பல நடன நிகழ்சிகள் நடத்தினர். இந்த ராத்திரியை நாம் இன்றளவும் சிவராத்திரியாகக் கொண்டாடுகிறோம்.

சரி டாக்சிகாலஜிக்கு வருவோம். ஆலகால விஷத்தால் சிவனின் உயிர் போகவில்லை. மாறாக, அவருக்கு இன்னும் இரண்டு பெயர் கிடைத்தது. நஞ்சினை உண்டதால் நஞ்சுண்டன் என்றும் நஞ்சின் தன்மையால் அவரது கழுத்து நீல நிறம் ஆனதால் நீலகண்டன் என்றும் பெயர் பெற்றார்.

இந்த விஞ்ஞான யுகத்தில் ஆலகாலத்தின் தன்மை அணு குண்டுகளுக்கும் ரசாயன, உயிரியல் ஆயுதங்களுக்கும், ஏன் மது பானங்களில் இருக்கும் ஆல்கஹாலுக்கும் இருக்கக் கூடும். எதற்கும் சிவனிடம் இப்போதே சொல்லி வைப்போம்.

(விஷம் பரவும்)

ஃபேஸ்புக்… க்ளிக்.. க்ளிக்…

ஃபேஸ்புக் என்றொரு விந்தை 

மக்கள் தொகையில் முதல் இரண்டு நாடுகளை நாம் அறிவோம். மூன்றாம் இடத்தில எந்த நாடு உள்ளது?  ஏறக்குறைய 310 மில்லியன் மக்களைக் கொண்ட அமெரிக்காவுக்கு மூன்றாம் இடம். 

ஃபேஸ்புக் மட்டும் ஒரு நாடாக இருந்தால் மக்கள் தொகையில் மூன்றாவது இடத்தை இந்நேரம் பிடித்திருக்கும். ஆம், இன்றைய அளவில் ஃபேஸ்புக் பயனர்களின் அதிகாரபூர்வ எண்ணிக்கை 500 மில்லியன். 

மக்கள் வெள்ளம்

 

2004 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப் பட்ட ஃபேஸ்புக் கடந்த 6 மாதங்களில் மட்டும் சுமார் 100 மில்லியன் உறுப்பினர்களை தன் வசம் ஈர்த்துள்ளது. கிராமத்தில் வதந்தி பரவுவது போல் ஒரு வேகம். 

இதில் அப்படி என்னதான் மக்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்? 

ஒவ்வொருவரும் தங்களது விருப்பு, வெறுப்பு, அவர்களின் அன்றாட நிகழ்வுகள், அரசியல் சார்பு அல்லது சார்பின்மை, என்று பல விஷயங்களைப் பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள். 

விட்டலாச்சார்யா படத்தில் வரும் மாயக் கண்ணாடியின் இன்றைய வடிவம் என்றே இதனை சொல்லலாம். 

என் ஃபேஸ்புக் நண்பர்களில் சிலர் புகைப் படங்களாகப் போட்டுத் தள்ளுகிறார்கள். சிலர் திங்கள் கிழமையே எப்போது வெள்ளிக் கிழமை வரும் என்று கேட்கிறார்கள். சிலர் தாங்கள் ரசித்த வீடியோ காட்சிகளைப் பதிவேற்றம் செய்கிறார்கள். 

ராசி பலன் பார்ப்பவர்களும் உண்டு. ஒரு சிலர் 50 வயதாகியும் FarmVille விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். 

நிஜ வாழ்க்கையில் நீங்கள் செய்ய முடியாத பல விஷயங்களை ஃபேஸ்புக்கில் செய்யலாம். அவை: 

  • பிறர் சுவற்றில் எழுதி விட்டு “It is the writing on the wall” என்று ஓடி விடுவது (முதுகு பழுத்து விடாது?)
  • யாரும் பார்க்காத நேரத்தில் ஒருவரைக் கிள்ளி வைப்பது
  • “நான் தண்ணீரே குடிப்பதில்லை – அதில் மீன்கள் உடலுறவு கொள்வதால்” என்பன போன்ற தத்துவங்களை உதிர்ப்பது (ஊரை விட்டே தள்ளி வைத்து விடுவார் நாட்டாமை)
  • ஒரு டப்பாவில் life box என்று எழுதி வைத்துக் கொண்டு பார்ப்பவரிடம் எல்லாம் “இதுல என்ன இருக்குனு பாரேன்” என்று சொல்வது
  • அலுவலக நேரத்தில் பாயிண்ட் வைத்து mafia கும்பலை அழிப்பது
  • மற்றும் பல

ஆனால் ஃபேஸ்புக்கில் பல நன்மைகள் இருக்கத் தான் செய்கின்றன: 

  • ஒரு ஊருக்கு/நாட்டுக்குப் போகும் முன்பாகவே அந்த இடத்தைப் பற்றிய விஷயங்களை சேகரிக்கலாம்
  • புத்தக விமர்சனம் செய்யலாம்/படிக்கலாம் (புத்தகம் படிக்கா விட்டால் என்ன?)
  • பழைய பள்ளி நண்பர்களைத் தேடிக் கண்டுபிடித்து “டேய் ராமசாமி, நீ இங்கயா இருக்க? சொல்லவே இல்ல…” என்று அளவளாவிக் கொள்ளலாம்
  • கல்வி நிறுவனங்கள் பற்றி சக மாணவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் (“மச்சி, ஃபிகர் எல்லாம் தேறுமா?”)
  • “மின்சாரத்தை மிச்சப் படுத்துவோம்”, “கார்பன் டை ஆக்சைடு அளவைக் குறைப்போம்” என்பது போன்ற இயக்கங்களில் சேர்ந்து நம்மால் முடிந்த வரையில் குரல் கொடுக்கலாம்
  • புதிய இடுகைகளை (blogs) நண்பர்களுக்குத் தெரியப் படுத்தலாம் (இந்த இடுகையை முடித்து நான் submit பொத்தானை அழுத்தியதும் தானாகவே ஃபேஸ்புக்கில் “எலேய், நம்ம பய புள்ள புது ப்லாக் எழுதிருக்குலே” என்று அறிவிக்கப் படும்)
  • எல்லாவற்றுக்கும் மேலாக விளம்பரம் செய்து கொள்ளலாம். நண்பரின் நண்பர் நமக்கும் நண்பர் என்பது தான் இங்கு விதி.

ஃபேஸ்புக்கில் என்னைக் கவர்ந்த நண்பர்களில் Alfy முக்கியமானவர். அதிக புகைப் படங்களை ஏற்றிய சாதனை விருதினை இவர் நிச்சயம் பெறுவார். Alfyயிடம் எனக்குப் பிடித்த விஷயம் எல்லா கருத்துகளுக்கும் பதில் அளிப்பதும் பிறர் கிண்டல் செய்தாலும் தனக்குப் பிடித்ததை செய்யும் தன்மையும் தான். 

ஃபேஸ்புக் அடிமைகள்
ஆனால் பல இளைஞர்கள் ஃபேஸ்புக் அடிமைகளாக மாறி (பச்சை மண்ணு?) மனோதத்துவ நிபுணர்களை நாடிச் செல்லும் நிலைக்கு வந்து விடுகின்றனர்.  நிஜ உலகத்தை விட இந்த உலகம் அழகானதாக, எளிதானதாக இருப்பதாக அவர்கள் நினைக்கிறார்கள். அமர்ந்த இடத்தில் இருந்தே அனைவருடனும் இணைந்து இருப்பது பெரிய விஷயம் தானே? பிடிக்காத மனிதர்களை ஒரு பட்டனை அமுக்கி காணமல் போகும் படி செய்யும் வசதி வேறெங்கு கிடைக்கும்?

சமூக வலை தளங்களில் அடுத்த புரட்சி வரும் வரை ஃபேஸ்புக் ஆதிக்கம் தான்.