மணல் மன்னர்கள்

மணலுக்கும் நமக்கும் எப்போதும் ஒரு வித சிநேகிதம் உண்டு. பள்ளிக்கூட நாட்களில் சுடும் மணலில் மண்டியிட்டவர்கள் மன்னிக்கவும். மற்றபடி நீளம்/உயரம் தாண்டுதலில் நாம் விழும் தளமாகட்டும், கபடி ஆட்டக் களமாகட்டும், கடற்கரை காதலாகட்டும்,  நிலச் சரிவு தடுப்புச் சுவர்கள் ஆகட்டும், மணலுக்கும் நமக்கும் எப்போதும் ஒரு வித சிநேகிதம் உண்டு. நிறைவேறாத கனவுகளை மணல் கோட்டைகள் என்கிறோம். வெறும் பேச்சிலேயே ஏவுகணை விடுபவர்களை மணல் கயிறு திரிக்கிறான் என்கிறோம். அதி நவீன சிலிக்கான் சில்லுகளுக்கு இன்னும் மணலையே சார்ந்திருக்கிறோம்.

பல துறைகளிலும் பல விதங்களில் பயன்படும் மணலைக் கொண்டு சிற்பங்கள் செய்தால் எப்படி இருக்கும்? எண்ணம் எவனுக்கு முதலில் வந்தது என்று தெரியவில்லை. பல நாடுகளிலும் இது ஒரு பிரபல கலையாக மாறி வருவது உண்மை.

அப்படி ஒரு மணல் சிற்ப கண்காட்சிக்கு அண்மையில் (உண்மையில் சற்று தொலைவில்) செல்ல நேர்ந்தது. அங்கு கண்டவற்றைப் பகிர்கிறேன்.
ஒரு நாட்டைப் பற்றி ஓரிரு சிற்பங்களின் மூலம் எடுத்துக் கூறுவது கடினம். “டூர் ஒப் தி வேர்ல்ட்” என்ற தலைப்பில் ப்லாக்கன்பர்க் நகரில் நடை பெற்ற மணல் சிற்ப கண்காட்சியில் பன்னாட்டுக் கலைஞர்கள் நாற்பது நாடுகளின் பண்பாட்டை பிரதிபலிக்கும் முகமாக அழகிய சிற்பங்களை உருவாக்கி உள்ளனர்.
எடுத்துக்காட்டாக, கியூபா நாட்டைக் குறிக்க சே குவேரா உருவத்தையும் அந்நாட்டு இசைக் கருவி வாசிக்கும் இருவரையும் காட்டியிருந்தார்கள். அமெரிக்கர்கள் ஹாலிவுட், லாஸ் வேகாஸ், ரஷ்மோர் மலைக் குன்று, விடுதலை தேவதை சிலை என்று அமர்க்களப் படுத்தியிருந்தார்கள். ஜப்பானியர்களோ தங்களது சுமோ வீரர்களையும் ஹோண்டா இரு சக்கர வாகனத்தையும் மணலிலே செய்து வைத்திருந்தார்கள். 

 
 நமது இந்தியாவைக் குறிக்க காளி, விநாயகர், மற்றும் சிதார் வாசிக்கும் பெண் ஆகிய உருவங்களை வைத்திருந்தனர். காந்தி, தஞ்சை கோபுரம், கேரளா படகுப் போட்டி, சுதந்திரப் போர் போன்றவற்றை வைத்திருக்கலாம். தாஜ் மகால் வடிவத்தை அழகாக அமைத்திருந்தனர்.
வெறும் சிற்பங்களை வரிசைப் படுத்தி வைப்பதோடு நில்லாமல் தக்க ஒளி அளவையும் வைத்திருந்தார்கள். வெளியே ஏழு உலக அதிசயங்களையும் அமைத்திருந்தார்கள். கின்னஸ் புத்தகத்தில் இடம் பெரும் நோக்குடன் மிக நீளமான கண்காட்சியாக இதை அமைத்திருந்தார்கள்.