ஃபேஸ்புக்கில் விளையாட்டாக ஆரம்பித்தோம் – “உங்களைக் கொலை செய்ய காத்திருக்கும் 10 நண்பர்கள்” என்ற ‘பயன்பாட்டில்’. என் ஆருயிர் நண்பர்கள் இருவர் என்னை எப்படி விஷம் வைத்துக் கொள்வது என்று என்னுடனே கலந்தாலோசித்தனர். நல்ல வேடிக்கையாக இருந்தாலும் அடி வயிற்றைக் கொஞ்சம் கலக்கத் தான் செய்தது.
ப்ரூஸ் லீ, மைக்கேல் ஜாக்சன் போன்ற பிரபலங்கள் இறக்கக் காரணம் அவர்கள் உட்கொண்ட சிலவகை மருந்துகளே அவர்களுக்கு விஷமாக மாறியது தான் என்ற கருத்து ஒருபுறம் இருக்க, இந்த விஷம் என்பது முதலில் எப்போது தோன்றியிருக்கும் என்ற கேள்வி எழுந்தது.
சில நாட்களுக்கு முன் படித்த பழைய National Geographic (மே 2005) இதழில் வந்த கட்டுரை ஒன்று நினைவுக்கு வந்தது. மேலும் பாட்டி சொன்ன புராணக் கதை, நெப்போலியன் வரலாறு, நந்தா திரைப் படம், ‘நஞ்சிருக்கும் தோலுரிக்கும்’ என்கிற இரட்டுற மொழிதல் பாடல் என்று நினைவுகள் விஷம் போல பரவத் தொடங்கி விட்டன. முதலில் கடவுளில் இருந்து ஆரம்பிப்போம்.
ஆலகாலம்
அசுரர், தேவர் என்ற இரண்டே ஜாதியினர் வாழ்ந்து வந்த காலத்தில், அமிர்தம் யாருக்கு என்பதில் கடும் போட்டி. ஆளுக்குப் பாதி என்ற ஒப்பந்தம் செல்லாது. முந்தியவருக்குப் பந்தி என்கிற ரீதியில் பாற்கடலைக் கடையத் தொடங்கி விட்டனர்.
முதலில் வந்ததோ அமிர்தம் அல்ல, ஆலகாலம் என்ற கொடிய விஷம். இந்த நஞ்சின் மூலப் பொருட்கள் என்னென்ன என்று இன்றளவும் டாக்சிகாலஜி நிபுணர்களால் சொல்ல முடியவில்லை. ஆனால் அந்த விஷம் உலக உயிர்கள் அனைத்தையும் அழிக்க வல்லது. இந்த சொல்யூஷனை வெல்ல ஒரே சொல்யூஷன் சிவன் தான் என்பதால் அவரிடம் சென்று அனைவரும் முறையிட்டனர்.
சிவனும் ஏதோ ரசம் குடிப்பது போல் இந்த விசத்தைக் குடித்து

நீலகண்டன், நஞ்சுண்டன்
விட்டார். சிவனுள் பாதியாம் பார்வதி மிக லாவகமாக சிவனது கழுத்தை அழுத்திப் பிடித்துக் கொண்டார். இதனால் விஷம் உள்ளேயும் இறங்காமல் வெளியேயும் போகாமல் அவரது தொண்டை பகுதியிலேயே நின்றுகொண்டது. ஆஸ்தான வைத்தியர் தனவந்திரி, இரவு முழுவதும் சிவனார் தூங்கக் கூடாது. அப்போது தான் விஷத்தின் தன்மை குறையும் என்று கூறியதும் கடவுளர் பலரும் சிவன் தூங்காதிருக்கப் பல நடன நிகழ்சிகள் நடத்தினர். இந்த ராத்திரியை நாம் இன்றளவும் சிவராத்திரியாகக் கொண்டாடுகிறோம்.
சரி டாக்சிகாலஜிக்கு வருவோம். ஆலகால விஷத்தால் சிவனின் உயிர் போகவில்லை. மாறாக, அவருக்கு இன்னும் இரண்டு பெயர் கிடைத்தது. நஞ்சினை உண்டதால் நஞ்சுண்டன் என்றும் நஞ்சின் தன்மையால் அவரது கழுத்து நீல நிறம் ஆனதால் நீலகண்டன் என்றும் பெயர் பெற்றார்.
இந்த விஞ்ஞான யுகத்தில் ஆலகாலத்தின் தன்மை அணு குண்டுகளுக்கும் ரசாயன, உயிரியல் ஆயுதங்களுக்கும், ஏன் மது பானங்களில் இருக்கும் ஆல்கஹாலுக்கும் இருக்கக் கூடும். எதற்கும் சிவனிடம் இப்போதே சொல்லி வைப்போம்.
(விஷம் பரவும்)
Like this:
Be the first to like this பதிவு.