தேர்தல் விறுவிறுப்பில் பலரும் குறுக்கெழுத்து 15-இல் பங்கேற்றீர்கள். அனைவரையும் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வென்று முதல்வர் பதவியைப் பிடித்திருப்பவர் திரு. நாராயணன் ராமய்யா அவர்கள். துணை முதல்வர் நண்பர் லோகேஷ். அமைச்சரவையில் இடம்பிடித்த மற்றொருவர் திரு. வைத்தியநாதன் அவர்களுக்கும் வாழ்த்துகள்.
சில விடைகளும் விளக்கங்களும்:
இடமிருந்து வலம்:
3. தான் போட்டியிட்ட தேர்தல்கள் எதனிலும் தோல்வியுறாத கலைஞர் கருணாநிதியின் இயற்பெயர் தட்சிணாமூர்த்தி.
9. ஓட்டு போடுவதால் ஏற்படும் குதூகலம் வாக்களிப்பு.
11. பாராளுமன்றம் சுருங்கியதால் எஞ்சியது வாற்கோதுமை (ஆங்கிலத்தில் barley) – பார்லி (பார்லிமெண்ட் என்பதன் சுருக்கம்.
மேலிருந்து கீழ்:
6. தமிழ் பிரச்சாரம் – பரப்புரை. தற்போது பல ஊடகங்களும் கட்சிகளும் இச்சொல்லை அதிகம் பயன்படுத்துகின்றன.
10 & 13. சத்தம் கூட்டி – ஒலி பெருக்கி – பேச்சாளரின் தாக்கத்தை அதிகரிக்கும் கருவி. பத்து மணி வரை மட்டுமே என்று கட்டுப்பாடு கொண்டுவந்த தேர்தல் ஆணையத்துக்கு நன்றி.
14. ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் நம்பிக்கையுடன் எதிர்பார்ப்பது – மாற்றம். மிஞ்சுவதோ பெரும்பாலும் ஏமாற்றம் (கவித கவித)
அடுத்த புதிரில் சந்திப்போம்.