தொழில் நிமித்தமாய் வெளியூர் சென்ற தலைவனிடமிருந்து ஒரு செய்தியும் வரவில்லை. போனவன் தன்னை விட்டு அப்படியே போய் விட்டானா என்று தலைவிக்கு மிகுந்த சந்தேகம். அவனை நினைத்து நினைத்து சோகக் கடலில் தத்தளிக்கிறாள்.
கணக்குப் புத்தகத்தில் மூழ்கியிருந்த தோழி,
“என்னடி, எதையோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறாய்? உடம்பு சரியில்லையா?” என்று கேட்டாள்.
“உடம்பு சரியாய் இருந்தால் என்ன, இல்லாவிட்டால் தான் என்ன?”
“ஓ! அவனை நினைத்து ஏங்குகிறாயா? வேலைக்காகத் தானே போயிருக்கிறான்? வந்து விடுவானடி, கவலைப் படாதே!”
“அது தான் கவலையே. போகும் போது ‘வேலை தான் முக்கியம்’ என்று சொல்லி விட்டுப் போனான். அப்போது எனக்குப் புரியவில்லை, அவனுக்கு நான் அவ்வளவு முக்கியம் இல்லை என்று.”
“வேலை முக்கியம் என்றான். சரி தான். அதன் பின், ‘உன் உயிர் நான் தான்’ என்றும் சொன்னான் அல்லவா?”
“ஏனடி அதை எல்லாம் இப்போது ஞாபகப் படுத்துகிறாய்? ‘இல்லின் கண் உறையும் மகளிர்க்கு, ஆடவர் உயிர்’ என்று கவிதை வேறு எழுதித் தந்தான். அவன் விவரமாகத் தான் இருந்திருக்கிறான். என் உயிராக இருந்தவன் போய் விட்டான். இங்கே நடைபிணமாக நான் இருக்கிறேன். எல்லாம் என் விதி.”
“இப்போது தான் distributive law of sets படித்துக் கொண்டிருந்தேன். பங்கீட்டு விதி என்று வைத்துக் கொள்ளேன். இந்த விதி உன் விதிக்கு ரொம்பவே பொருந்துகிறது.”
“நீ வேறு கண்ட விதியை எல்லாம் சொல்லி என்னைக் குழப்பாதே. ஏற்கனவே நான் போட்டிருந்த எல்லாக் கணக்கும் பொய்யாகி விட்டது.”
“அப்படி எல்லாம் சொல்லாதே. ஒரு சின்னப் படம் வரைந்து உனக்கு இதைப் பற்றி சொல்ல முயற்சிக்கிறேன்” என்று கூறி, தன் டேப்லெட்டில் மளமளவென்று ஏதோ வரைந்து விட்டு, எழுதியபடியே பேசத் தொடங்கினாள்.
“இந்தப் படத்தைப் பார். இதில் நீ தான் A. தலைவன் B. அவன் செய்யப் போயிருக்கும் வேலை C என்று வைத்துக் கொள்வோம். சமன்பாட்டின் இடது பக்கத்தில் பார்த்தால் A ஆகிய நீ தனித்து நிற்கிறாய். தலைவன் வேலையில் மூழ்கியிருக்கிறான். ஆனால், வலது பக்கத்தில் பார்! நீயும் அவனும் ஒன்றாக இருக்கிறீர்கள்.”
“போடி! என்னைச் சமாதானப் படுத்த ஏதேதோ சொல்லுகிறாய். இது நீயே கண்டுபிடித்த கணக்கு போலும்!”
“இல்லையடி, உண்மையிலேயே இது ஒரு கணித விதி தான். வினையே ஆடவர்க்கு உயிர் என்றானல்லவா? அதைத்தான் இங்கே (B ⋂ C) என்று எழுதி இருக்கிறன். தனிமையிலும் அவனை நினைத்து இருக்கிறாய் அல்லவா, எனவே A ஆகிய நீ தனித்திருந்தாலும் நினைவால் அவனுடன் இருப்பதால் A U (B ⋂ C) என்று எழுதினேன். புரிந்ததா?”
“ம்”
“இப்போது வலதுபுறம் பார். A என்ற காதலி நீயும் B என்ற காதலன் அவனும் (A U B) என்று சேர்ந்து இருக்கிறீர்கள். அதற்குக் காரணம் ‘மகளிர்க்கு ஆடவர் உயிர்’ என்றான் அல்லவா. அப்படியானால் உன் உயிரான அவன், உடலாகிய நீ இல்லாமல் ஏது? வினை தான் அவன் உயிர் என்றாலும் அது வாழ உடல் நீ வேண்டும் அல்லவா? அதனால் நிச்சயம் அவன் வருவான். அதைத்தான் இங்கே (A U C) என்று எழுதி இருக்கிறேன். என்ன, கணக்கு சரியாக வருகிறதா?”
“என்னவோ சொல்கிறாய். கணக்கு சரியாக வருகிறதோ இல்லையோ, உன் பேச்சில் நம்பிக்கை வரத்தான் செய்கிறது. அவன் வருவான் என்று நம்புவோமாக!”
“பேசிக் கொண்டே நீ என்னடி வரைந்து வைத்திருக்கிறாய்? வென் சித்திரம் போல் தெரிகிறது! விசித்திரமானவள் தான் நீ!”
“நீ சொல்லிக் கொண்டிருந்த பங்கீட்டு விதியை வென் சித்திரமாக வரைந்திருக்கிறேன். கணக்கு சரியாகத் தான் வருகிறது”.
“அது சரி, காதலன் உன்னைச் சந்திக்க வருவதில் எவ்வளவு நேரம் தாமதமாக வருகிறான் என்பதை தினமும் Excel-இல் அட்டவணை போட்டவள் தானே நீ! வாழ்க உன் காதல்!
பாடல் இதோ:
வினையே யாடவர்க் குயிரே வாணுதல்
மனையுறை மகளிர்க் காடவ ருயிரென
நமக்குரைத் தோருந் தாமே
அழாஅ றோழி யழுங்குவர் செலவே.
குறுந்தொகை 135.
பாடியவர்: பாலைபாடிய பெருங்கடுங்கோ.
விளக்கம்: வினையே – தொழில் தான்.
ஆடவர்க்கு உயிர் – ஆண்மக்களுக்கு உயிர் ஆகும்.
வாணுதல் – ஒளிபொருந்திய நெற்றியையுடைய
மனையுறை மகளிர்க்கு – இல்லின் கண் உறையும் மகளிர்க்கு
ஆடவர் உயிர் என – கணவன்மாரே உயிர் ஆவரென்று
நமக்கு உரைத்தோரும் தாமே – நமக்கு எடுத்துக் கூறியவரும் அத்தலைவரே
அழாஅல் – அழாதே
செலவு அழுங்குவர் – திரும்பி வருவார்.