இந்தப் பதிவில் குறுக்கெழுத்துப் புதிர்கள் எப்படி வடிவமைக்கப் படுகின்றன, கடினமான குறிப்புகளை எவ்வாறு அச்சு வேறு ஆணி வேறாகப் பிரித்து மேய்ந்து விடைகளைக் கண்டுபிடிப்பது என்பது பற்றி நான் அறிந்தவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
முதலில், குறுக்கெழுத்துப் புதிர்களை வைத்துக் கொண்டு இடியே விழுந்தாலும் அசராமல் பேனாவைக் கடித்துக் கொண்டிருப்பவர்கள் உண்மையில் அவ்வளவு அறிவாளிகளா?
அறிவுத்திறன் என்பதற்கு முழுமையான ஒற்றை விளக்கமோ அளவுகோலோ கிடையாது. கடினமான கணக்குகளை எளிதில் கையாளும் கணிதவியலாளர், புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் ஆராய்ச்சியாளர், வாதப் பிரதிவாதங்களைக் கேட்டு நடுநிலையுடன் தீர்ப்பு சொல்லக் கூடிய நீதிபதி, நோய்களை அவற்றின் தன்மைகளைக் கொண்டு அறிந்து தீர்க்கும் மருத்துவர், காட்சிப் பிழைகளைக் கொண்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் மாயாஜாலக்காரர், உடனடியாக புதிய ஒரு விடுகதையை உருவாக்கி நம்மிடம் விடை கேட்கும் பாட்டிகள் என்று அனைவரும் அவரவர் வழிகளில் அறிவுத்திறன் மிக்கவர்களே. அதே போலத் தான் குறுக்கெழுத்துப் பிரியர்களும்.
குறுக்கெழுத்துப் புதிர்களுக்கு விடை கண்டுபிடிப்பதால் ஒருவருக்கு அறிவுத் திறன் வளர்கிறது என்பதற்குச் சான்றுகள் இருப்பதாகத் தெரியவில்லை.
ஆனால் அறிவுத்திறன் மிகுந்தவர்களால் தான் குறுக்கெழுத்துப் புதிர்களுக்கு விடையளிக்க முடியும் என்பதை ஆய்வுகள் காட்டுகின்றன.
அண்மையில் நடந்த உளவியல் ஆய்வுகளில்[1] குறுக்கெழுத்துப் பிரியர்களின் தன்மைகள் பற்றி பல தகவல்கள் தெரிய வந்துள்ளன. அவற்றுள் சில:
1. இவர்களில் பெரும்பாலானவர்கள் உயர் கல்வி (பல்கலைக்கழக அளவில்) பயின்றுள்ளனர். அவர்களிலும் 10% பேர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர்.
2. குறிப்பாக STEM எனப்படும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதவியல் துறைகளில் பயின்றவர்கள் இதில் அதிகம்.
3. இசை, விளையாட்டு போன்ற பிற துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்களுடன் ஒப்பிடுகையில் இவர்கள் பயிற்சிக்காக அதிக நேரம் செலவழிப்பது இல்லை.
4. மேற்கண்ட துறைகளில் கிடைக்கும் அளவுக்கு குறுக்கெழுத்து ஜாம்பவான்களுக்கு மாபெரும் பரிசுகளோ புகழோ கிடைப்பதில்லை. அதே வேளை இவர்களுக்கு சாதிக்க வேண்டும் என்ற நிர்பந்தமோ மன அழுத்தமோ குறைவு. ஆனால் ஆர்வம் பிற துறையினரைக் காட்டிலும் கொஞ்சமும் குறைவதில்லை. எனவே தங்கள் தினசரி வாழ்வில் ஒரு சிறு பகுதியை இந்தப் புதிர்களுக்காகச் செலவிட்டு உடல் இளைப்பாறும் அதே நேரம் மன மகிழ்ச்சியையும் பெறுகின்றனர்.
“அப்படியானால் மொழியியல், கலை, போன்ற துறையினரால் குறுக்கெழுத்து விடைகளைக் கண்டுபிடிக்க முடியாதா என்ன? எங்கே, ஒரு புதிர் கொடு பார்ப்போம்!” என்று யாரும் சண்டைக்கு வர வேண்டாம். குறுக்கெழுத்து முனைவோருக்கான ஒரு பொதுவான இயல்பு அவர்கள் சிக்கல்களைத் தீர்க்க விரும்பும் problem solvers-ஆக இருப்பது தான்.
இவை எல்லாம் பெரும்பாலும் cryptic crosswords எனப்படும் சங்கேதக் குறிப்புகள் அடங்கிய குறுக்கெழுத்துப் பிரியர்களுக்கே பொருந்தும். வாரமலரில் வரும் ‘நன்றியுள்ள விலங்கு’, ‘நேருவின் விருப்பமான மலர்’ என்பன போன்ற புதிர்களுக்குப் பெரிய அறிவுத்திறன் தேவை இல்லை.
மாறாக,
சின்ன கோபாலனின் உயரம் கோபுரம் அளவில் பாதி (2)
என்ற குறிப்பை எடுத்துக் கொள்ளலாம். இந்தப் புதிரின் விடையை கூகிள் தேடல் மூலமாக நேரடியாக அறிய முடியாது (இந்தப் புதிருக்கான விடை உள்ள இணைய தளத்துக்குச் சென்று வேண்டுமானால் பார்த்துக் கொள்ளலாம்).
இதில் கோபாலன் என்பது முக்கியமான குறிப்பு. ‘சின்ன கோபாலன்‘ என்பதை அப்படியே அர்த்தம் கொள்ளாமல் கோபாலன் என்ற பெயரைச் சுருக்கினால் கோபால் அல்லது கோபு என்று வருகிறது. கேள்வியின் அடுத்த பகுதியில் ‘கோபுரம் அளவில் பாதி‘ என்ற குறிப்பைக் கவனியுங்கள். கோபுரம் – இதில் பாதி ‘கோபு‘ என்று எடுத்துக் கொள்ளலாம்.
எனவே, சின்ன கோபாலன் = கோபுரம் அளவில் பாதி = கோபு.
இன்னொரு எடுத்துக்காட்டு:
வணிகப் பொருளுடன் ஒன்றைச் சேர்த்ததும் தங்க மழை பொழியும் பூ கிடைக்கிறது! (6)
இதையும் கூகுள் செய்து பார்க்கவும்.
கணிதப் புதிர்களைப் போல் இத்தகைய சங்கேதக் குறிப்புகளையும் அலசி ஆராய்ந்து அவற்றில் மறைந்து இருக்கும் விடையை வெளிக்கொண்டு வரும் நுட்பம் கணிதவியல் திறன் கொண்டோருக்கு எளிதில் வசப்படுகிறது.
செயற்கை நுண்ணறிவுத் துறையில் கணினிகளுக்கு மொழியியல் நுட்பங்களை பயிற்றுவிக்கக் குறுக்கெழுத்துக் குறிப்புகளைப் பயன்படுத்துகிறார்கள்.
இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மனியின் சங்கேதக் குறிப்புகளை decode செய்யக் குறுக்கெழுத்து வல்லுநர்களை அன்றைய பிரிட்டிஷ் அரசாங்கம் பயன்படுத்தியது.
குறுக்கெழுத்துப் புதிர்களில் சங்கேதக் குறிப்புகளை அமைக்கப் பல்வேறு உத்திகள் உள்ளன. அவற்றுள் சில:
தமிழக அரசுக்குப் பெருமளவில் வருவாய் ஈட்டித் தரும் சரக்கு (2)
இந்தக் குறிப்பைக் கண்டதும் தமிழ்நாட்டில் பெரும்பாலானவர்கள் சரக்கென்று ‘மது’ என்று விடை சொல்லி விடுவார்கள் அல்லவா? நேரடிக் குறிப்புகள் இப்படித்தான் இருக்கும்.
‘உடைந்த’, ‘சிதறிய’, ‘குழம்பிய’, ‘கலைந்த’ என்பன போன்ற குறிப்புகள் வந்தால் Anagram Alert! என்று சுதாரித்துக் கொண்டு, அந்தக் குறிப்பில் உள்ள முக்கியமான சொல்லின் எழுத்துக்களை வேறு வேறு விதங்களில் வரிசைப் படுத்திப் பார்த்து விடை கண்டுபிடித்து விடலாம். எடுத்துக்காட்டாக,
ஈழத்தில் சீன யாத்திரீகர்களுடன் வந்த யாகப்பானையின் இரண்டாம் கடைசி மறைய, கலைந்தது ராஜராஜனின் கோலம் (6)
இதில் திறவுச்சொல் யாகப்பானையின். இதில் இரண்டம் கடைசி (கடைசியில் இருந்து இரண்டாவது எழுத்தான ‘யி’) மறைய, யாகப்பானைன் என்று மாறுகிறது. இந்த எழுத்துக்களை மாற்றி வரிசைப் படுத்திப் பார்த்தால் ‘யானைப்பாகன்‘ வருகிறது. (பொன்னியின் செல்வன் கதையில் ராஜராஜன் யானைப்பாகன் வேடத்தில் வருவதாக ஒரு காட்சி இருக்கிறது).
தின்பண்டம் வாங்கப் பதிப்பகத்தின் இயந்திரத்தைத் திருகு (3, 4)
இதில் தின்பண்டம் என்பது மையக் குறிப்பு. பதிப்பகத்தின் இயந்திரம் = அச்சு; திருகு = முறுக்கு. அச்சுமுறுக்கு (தின்பண்டம்).
இரண்டு வகையான பொருள் தரும் சொற்கள் அல்லது சொல் தொடர்கள் இருக்கும். ஆனால் இரண்டிற்கும் ஒரே சொல் தான் விடையாக வரும்.
பேச்சு வழக்கில் ‘டபுள் மீனிங்’ என்று நாம் சொல்கிறோம் அல்லவா?
ஜூன் 1 -ல் எதிர்பார்க்கப்படும் வாலிப சாரல்? (3,2 )
ஜூன் 1 -ல் எதிர்பார்க்கப்படுவது = பருவ மழை
வாலிப (பருவ) சாரல் (ஒரு வகை மழை) = பருவ மழை
இரட்டுற மொழிதல் என்ற இந்த வகையிலான இன்னொரு குறிப்பு:
இதற்கு மேல் சபை கூடினால் எல்லாம் தித்திப்பே (4)
இதற்கு மேல் (இனி) + சபை (அவை) = இனியவை
எல்லாம் தித்திப்பே = இனியவை
-
மறைந்திருக்கும் சொல்/சொற்கள்
நேச மாளிகை இருபுறமும் இடிகையில் நடுவில் நின்று தப்பிக்க முயற்சி செய் (3)
நேசமாளிகை – இதில் இருபுறமும் இடிய (இரண்டு பக்கங்களிலும் உள்ள எழுத்துக்களை நீக்க)
நேசமாளிகை = சமாளி
ஏழு நாட்களுக்கு ஒருமுறை தாழ்வார சந்தைக் கடந்தால் பல பொருள் வாங்கி வரலாம் (2,3)
பல பொருள் வாங்கும் இடம் சந்தை என்று கொள்ளலாம். தாழ்வார சந்தை – இதில் வார சந்தை என்னும் சொற்கள் பிளவுற்று இருக்கின்றன.
வடமொழி நீக்கியதால் பொன்னியின் செல்வன் மந்திரவாதியும் சூரியனே (4)
பொன்னியின் செல்வன் மந்திரவாதி = ரவிதாஸன். இதில் வடமொழி எழுத்தான ‘ஸ’ என்பதை நீக்கிவிட்டால்,
ரவிதாஸன் = ரவிதான் (சூரியன் தான்)
வேதமோதும் சிறுவனிடம் வேதம் இன்றி சண்டையிடு (2)
வேதமோதும் என்பதில் வேதம் போனால்,
வேதமோதும் – வேதம் = வேதமோதும் = மோது (சண்டையிடு)
ரத்தம் சொட்டாமல் இருக்க தலைகீழாய்ப் பிடித்துத் திருப்பு (3)
ரத்தம் = குருதி
‘திருப்பு’ என்கிற குறிப்பின் மூலம் பின்னிருந்து முன்னாக எழுத வேண்டும் என்று அறியலாம்.
குருதி (திருப்பினால்) = திருகு
எந்தப் பக்கம் இருந்து பார்த்தாலும் தெரிவது தெனாலிராமன் தான்!
தெனாலிராமன் ஒரு விகடகவி என்பதை அறிவோம். இடமிருந்து வலமோ வலமிருந்து இடமாகவோ எப்படி எழுதினாலும் விகடகவி விகடகவி தான்.
-
மேற்கண்ட உத்திகளைக் கலந்து தருவது
இத்தகைய குறிப்புகளில் மேற்கண்ட வகைகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட வகையான உத்திகள் கையாளப் பட்டிருக்கும். சொற்பிளவு, பிறழ்மொழி, எழுத்து நீக்கம் என்று மூன்று வகையான உத்திகளும் அடங்கிய ஒரு குறிப்பு:
கட்சித் தாவலில் குழப்பம் வர, தாவியவரில் ஒருவர் சொத்தை வரிவிலக்கு போகக் கணக்கிட்டால் புல்லும் பூண்டும் வருகிறது (6)
‘குழப்பம்’ என்றதும் இது பிறழ்மொழி (anagram) என்று தெரிகிறது. ‘வர தாவியவரில்’ என்பது இங்கே திறவுச்சொற்கள். இதில் வரிவிலக்கு போக (‘வரி’ எழுத்துக்கள் நீக்கப்பட்டால்),
வர தாவியவரில் = தாவரவியல் (புல்லும் பூண்டும் என்பது பல்வேறு தாவரங்களைக் குறிக்கிறது)
இது தவிர Themed Crosswords என்ற குறிப்பிட்ட கருப்பொருளை மையமாக வைத்து அமைக்கப்படும் புதிர்களும் உள்ளன. எடுத்துக்காட்டாக,
பொன்னியின் செல்வன் குறுக்கெழுத்து
இதில் பொன்னியின் செல்வன் புதினத்தைப் படித்தவர்கள், அல்லது அதன் கதைக்களம் மற்றும் கதை மாந்தர் பற்றி அறிந்தவர்கள் மற்றவர்களை விட எளிதாக விடைகளைக் கண்டுபிடிக்கக் கூடும்.
சுடோகு (sudoku) போன்ற விளையாட்டுக்களும் மூளைக்கு வேலை தரலாம். ஆனால், குறுக்கெழுத்து போல வராது. ஒரு கடினமான குறுக்கெழுத்துக் குறிப்பை வைத்துக் கொண்டு மண்டையை உடைத்துக் கொண்டிருந்து விட்டு, பின்னர் அதற்கான விடை தெரிந்தவுடன் “ஆஹா , எங்க கிட்டயேவா?” என்று பெருமையுடன், அந்தப் புதிரை உருவாக்கியவரின் திறனையும் பாராட்டும் அந்த அனுபவம் மன நிறைவையும் தன்னம்பிக்கையையும் தரும்.
சுடோகுவில் அது போல் ‘இந்த எடத்துல எப்புடி எட்டு போட்டேன் பாத்தியா?” என்று பெருமை பட்டுக்கொள்ள முடியாது.
எனவே, குறுக்கெழுத்துப் புதிர்கள் உங்கள் அறிவுத்திறனை வளர்க்கிறதோ இல்லையோ, நல்ல புதிர்கள் நிச்சயமாக உங்கள் மூளைக்கு வேலையுடன் சொல் வளத்தையும் சில (பல) சமயங்களில் புன்னகையையும் தரும்.
குறுக்கும் நெடுக்குமாக சிந்தித்துப் பார்த்து உங்கள் கருத்துக்களையும் எனக்குத் தெரியப்படுத்துங்கள். கட்டங்களை நிரப்பும் கட்டதொரையாக இடமிருந்து வலம் வாருங்கள்.