சேர, சோழ, பாண்டியர் என்ற மூன்று தமிழ் வேந்தர்களும் தமிழர் வரலாற்றில் ஒரு சில ஆட்சிக் காலங்களைத் தவிர எப்போதும் தமக்குள் போரிட்டு வந்தனர் என்பதை நாம் அறிவோம்.
இரண்டாம் கரிகாலன் (கி.மு. 60 முதல் கி.மு. 10 வரை), ராஜராஜ சோழன் (கி.பி. 985 முதல் கி.பி. 1014 வரை) ஆகியோர் நிர்மாணித்த சோழப் பேரரசு மற்ற இரு நாட்டையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தது. அதேபோல், கி.பி. 1280-இல் சடாவர்மன் சுந்தரபாண்டியன் அமைத்த பாண்டியப் பேரரசில் சோழ நாடு அடங்கி விட்டது. மற்ற காலங்களில் எல்லாம் மூன்று வேந்தர்களும் அவரவரது எல்லைகளுக்கு உள்ளேயே ஆண்டு வந்தனர். அவ்வப்போது மற்ற நாடுகளின் மீது படையெடுத்து, தமக்கு இருந்த படை வலிமையைப் பொறுத்து மற்ற இருவரிடம் வெற்றியோ தோல்வியோ அடைந்து வந்தனர்.
இவ்வாறு, எதிரும் புதிருமாகவே இருந்து வந்த இந்த மூன்று மன்னர்களின் வரலாற்றில் ஒரு அரிய நிகழ்வைப் பதிவு செய்துள்ளார் ஒளவையார்.
சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும், சேரமான் மாரி வெண்கோவும், பாண்டியன் கானப்பேர் தந்த உக்கிரப் பெருவழுதியும் ஒரே இடத்தில் நட்புடன் கூடி இருக்கின்றனர். ‘இராசசூயம் வேட்ட’ சோழ மன்னன் பெருநற்கிள்ளி ஒரு யாகம் நடத்துகிறான். அந்த நிகழ்ச்சியில், விருந்தாளிகளாகச் சேரனும் பாண்டியனும் வந்திருக்கின்றனர். இதைக் கண்ட ஒளவையார், பெரும் மகிழ்ச்சி அடைந்து மூன்று மன்னர்களையும் வாழ்த்திப் பாடுகிறார். இந்த நிகழ்வு புறநானூற்றின் 367-ஆவது பாடலாக அமைந்துள்ளது.
நாகத் தன்ன பாகார் மண்டிலம்
தமவே யாயினும் தம்மொடு செல்லா;
வெற்றோர் ஆயினும் நோற்றோர்க்கு ஒழியும்;
ஏற்ற பார்ப்பார்க்கு ஈர்ங்கை நிறையப்
பூவும் பொன்னும் புனல்படச் சொரிந்து,
பாசிழை மகளிர் பொலங்கலத்து ஏந்திய
நாரறி தேறல் மாந்தி, மகிழ் சிறந்து,
இரவலர்க்கு அருங்கலம் அருகாது வீசி,
வாழ்தல் வேண்டும், இவண் வரைந்த வைகல்;
வாழச் செய்த நல்வினை அல்லது,
ஆழுங் காலைப் புணைபிறிது இல்லை;
ஒன்று புரிந்து அடங்கிய இருபிறப் பாளர்
முத்தீப் புரையக் காண்தக இருந்த
கொற்ற வெண்குடக் கொடித்தேர் வேந்திர்;
யான் அறி அளவையோ இவ்வே; வானத்து
வயங்கித் தோன்றும் மீனினும், இம்மெனப்
பரந்து இயங்கும் மாமழை உறையினும்,
உயர்ந்து மேந்தோன்றிப் பொலிக, நும் நாளே!
- புறநானூறு 367
ஒளவையார்
விளக்கம்:
“தேவலோகம் போன்ற நாடாக இருந்தாலும், வேந்தன் இறக்கும் போது அவனுடன் அந்த நாடு செல்வதில்லை. அடுத்து வரும் வலியவன் கைக்கு மாறிவிடும்.
இரந்து வரும் அந்தணர்க்குக் கைநிறைய பூவும் பொன்னும் வழங்கி, பொன் கலத்தில் நாரால் வடிகட்டிய கள்ளினை அருந்தி, ஏழைகளுக்கு இல்லையென்று சொல்லாமல் உதவி செய்து, மகிழ்ச்சியுடனும் சிறப்புடனும் நீங்கள் வாழ்க. உங்கள் இறப்பிற்குப் பிறகு வேறு எதுவும் உங்களுடன் வரப் போவதில்லை. நீங்கள் செய்த நல்ல செயல்களால் மட்டுமே நீங்கள் மக்கள் மனங்களில் வாழ்வீர்கள்.
இரு பிறப்பு (தாய்வழி பிறப்பு, பின்னர் ஞானப் பிறப்பு ஆகியன) கொண்ட அந்தணர் வளர்க்கும் மூன்று வகை வேள்வித் தீயைப் போல (ஆகவனீயம், தட்சிணாக்கினி, காருகபத்தியம் என்பவை) நீங்கள் மூன்று பேரும் காட்சி அளிக்கின்றீர்கள்! வெண்கொற்றக் குடையையும் கொடி கட்டிய தேர்களையும் உடைய வேந்தர்களே, நான் அறிந்த வாழ்க்கை நெறி இதுவே. வானில் இருக்கும் விண்மீன்களையும் பூமியில் பொழியும் மாமழையையும் விட உங்களது வாழ்நாட்கள் சிறந்து விளங்குவன ஆகுக!”
காலம்: இந்த நிகழ்ச்சி கரிகால் வளவனின் காலத்திற்குப் பிறகும் சிலப்பதிகாரம் எழுதப்பட்ட காலத்திற்கு முன்பாகவும் நிகழ்ந்திருக்க வேண்டும். அதாவது கி.மு. முதல் நூற்றாண்டுக்கும் கி.பி. இரண்டாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில்.
பாடலில் நாம் அறியும் மற்றொரு செய்தி: சங்க காலத்திலேயே தமிழ் மன்னர்கள் தமது ஆட்சி நிலைக்க வேள்விகள் செய்துள்ளனர். அதற்கு கைம்மாறாக, அந்தணர்க்கு நிலமும் பொன்னும் வழங்கி இருக்கின்றனர். இன்றைக்கும் (2019-இல்) கூட தலைமைச் செயலகத்தில் நள்ளிரவு யாகங்கள் நடப்பதாகக் கேள்வி. நடக்கட்டும்.