இன்றைய சமூக சிந்தனையாளர்களில் தவிர்க்க முடியாதவர் அருந்ததி ராய். அவரது The God of Small Things புதினத்தில் நமது சமூகத்தில் நிலவும் சாதியியல் உள்ளிட்ட பல இயல்புகளையும் படம்பிடித்துக் காட்டியிருப்பார். காஷ்மீர் பற்றிய அவரது கருத்துகள் சர்ச்சைக்குரியவை; ஆனால் சிந்திக்கத் தக்கவை என்றே நினைக்கிறேன். கடந்த நவம்பர் 12, 2019 அன்று நியூ யார்க்கில் அவர் ஆற்றிய “இந்தியா: ஒரு முடிவின் நிமித்தங்கள்” (“India: Intimations of an Ending”) என்ற தலைப்பிலான உரை The Nation தளத்தில் இடம்பெற்றுள்ளது. இதில் NRC என்கிற தேசிய குடிமக்கள் பதிவேட்டின் வரலாறு மற்றும் விளைவு பற்றியும் விவரித்துள்ளார். பெரிய கட்டுரை. இதில் அசாம் பற்றிய பகுதியை மட்டும் என்னால் முடிந்த வரை மொழிபெயர்த்துள்ளேன். காஷ்மீருடன் ஒப்பிடுகையில் அசாம் பற்றிய நமது புரிதல் குறைவு என்றே உணர்கிறேன்.
தற்சமயம் பெரிதும் விவாதிக்கப்பட்டு வரும் NRC வெறும் இந்து-முஸ்லிம் தகராறு என்பது போல் சித்தரிக்கப்பட்டு வருகிறது. எதற்காக இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது என்பதைப் பற்றி நாம் அறிந்திடாமல் எந்தப் பக்கத்துக்கும் ஆதரவாகவோ எதிராகவோ வாதாடுவதில் பயனில்லை என்றே கருதுகிறேன். இதன் மூலம் அசாமின் வரலாற்றை ஓரளவுக்கு நான் அறிந்து கொண்டேன்.
இந்திய இறையாண்மையைக் காக்கக் கம்பு சுற்றிக் கொண்டு வருபவர்கள் இது மொழிபெயர்ப்பு என்பதை முதலில் அறிவதுடன் முழுவதையும் படித்துவிட்டு, முடிந்தால் மூலத்தையும் படித்துவிட்டு வருவது நலம்.
கட்டுரை இதோ:
அசாம் ஒரு எல்லைப்புற மாநிலம். அதற்கென்று தனித்துவமான வரலாறு உண்டு. அந்த வரலாறெங்கும் பல்வேறு தரப்பினரின் உரிமைகோரல்கள், மக்களின் இடப்பெயர்வுகள், போர்கள், படையெடுப்புகள், மாறிக்கொண்டே இருக்கும் எல்லைகள், பிரிட்டிஷ் காலனியாக்கம் என்று பல வடுக்கள். எழுபது ஆண்டுகள் தேர்தல் மக்களாட்சியாலும் இந்த வடுக்களைப் போக்க முடியவில்லை.
தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) என்பதன் தேவை அசாமின் இந்தத் தனித்துவமான வரலாற்றால் முக்கியத்துவம் பெறுகிறது. 1826-இல் ஆங்கிலேயர்களிடம் தோற்ற பர்மா (இப்போதைய மியான்மார்), அசாம் என்கிற பகுதியைப் பிரிட்டிஷாரிடம் தாரைவார்த்தது. அப்போது அசாம் என்பது அடர்ந்த காடுகளையும், குறைவான மக்கள்தொகையையும் கொண்டிருந்தது. போடோ, கச்சாரி, மிஷிங், லாலுங், அஹோமிய இந்துக்கள், அஹோமிய முஸ்லிம்கள் என்று நூற்றுக்கணக்கான இனக்குழுக்கள் இப்பகுதியில் வாழ்ந்து வந்தனர். ஒவ்வொரு குழுவினரும் தமக்கே உரிய மொழி அல்லது வட்டார வழக்கு, பண்பாடு ஆகியவற்றைக் கொண்டிருந்தனர். ஆதலால், ஒட்டும்மொத்த இந்தியாவைப் போலவே, பல்வேறு தரப்பினரும் வாழும் பகுதியாக இருந்து வந்தது அசாம். இந்த ஏற்பாட்டைச் சற்றே மாற்றினாலும்கூட வன்முறை வெடிக்கும் நிலை இருந்தது. இந்நிலையில், 1837-இல் இத்தகைய வன்முறைக்கு வித்திடப்பட்டது. அசாமின் புதிய முதலாலிகளான ஆங்கிலேயர்கள், வங்காள மொழியை (Bengali) அப்பகுதியின் அலுவல் மொழியாக்கினார்கள். அதாவது, எல்லா நிர்வாக மற்றும் அரசுப் பதவிகளும் படித்த, வங்க மொழி பேசும், உயர்நிலை இந்துக்களுக்குச் சென்றன. 1870-இல் அசாமிய மொழிக்கும் அலுவல் மொழி அந்தஸ்து கொடுக்கப்பட்ட போதிலும், அசாமியர்களுக்கும் வங்காளிகளுக்கும் இடையேயான அதிகாரப் போட்டி இன்னும் கடுமையானதாகவே மாறியது. 150 ஆண்டுகள் கழிந்தும் இந்தப் பகை இன்றளவும் தொடர்கிறது.
19-ஆம் நூற்றாண்டின் மத்தியில், அசாமின் நிலவளமும் பருவநிலையும் தேயிலைச் சாகுபடிக்கு உகந்ததாக இருப்பதை ஆங்கிலேயர்கள் அறிந்தனர். அசாமிய பூர்வகுடிகளுக்கோ இந்தத் தேயிலைத் தோட்டங்களில் கொத்தடிமைகளாக வேலை செய்ய விருப்பமில்லை. எனவே, மத்திய இந்தியாவில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் தோட்டத் தொழிலாளிகளாக அசாமிற்குக் கொண்டுவரப்பட்டனர். இப்படி அழைத்துவரப்பட்ட மக்கள் மட்டும் இன்றைய அசாமின் மக்கள்தொகையில் 15 முதல் 20 விழுக்காடு உள்ளனர். வெட்கம் என்னவென்றால், இந்த மக்கள் உள்ளூர் மக்களால் தரக்குறைவாக நடத்தப்படுவதுதான். முதலாளிகள் மட்டும் மாறியிருக்கிறார்கள். இவர்களின் நிலை இன்னும் அதே அடிமை நிலைதான்.
1890-களில் தேயிலை வியாபாரம் வளர்ந்த நிலையில், கிழக்கு வங்காளத்தில் மேற்கொண்டு தேயிலை பயிரிட இடமில்லை. அந்தப் பகுதியில், பிரம்மபுத்திரா நதியால் வளமூட்டப்பட்ட, ஆற்றின் போக்கினால் மாறிக்கொண்டே இருக்கும் நிலப்பரப்பை உடைய சார்ஸ் (chars) என்ற தீவுக்கூட்டங்கள் ஆங்கிலேயர்களின் கண்களை உறுத்தின. இத்தீவுகளில் இருக்கும் மரங்களை வெட்டிக் காடுகளை விவசாய நிலங்களாக மாற்றி விட்டால், அதன்மூலம் பிரிட்டிஷ் அரசுக்கு இன்னும் அதிக வருவாய் கிடைக்கும் என்று தீர்மானித்தனர். அதன்பொருட்டு, இத்தகைய நிலப்பரப்பில் உழவுத்தொழில் செய்வதில் மிகுந்த திறமைபெற்ற வங்காள முஸ்லிம் உழவர்களை ஆங்கிலேயர்கள் அசாமிற்கு அழைத்துச் சென்றார்கள். ஆங்கிலேயர்களுக்கு வேண்டியதெல்லாம் லாபம். காடுகளாவது பூர்வகுடிகளாவது. அவர்களைப் பொறுத்தவரையில், அசாம் என்பது ‘யாருக்கும் உரிமையற்ற’ ஒரு பகுதி. அங்கு யார், என்ன வேண்டுமானாலும் செய்யலாம். நிலப்பரப்பும் அதில் வாழும் மக்களும் ஒரு பொருட்டே அல்ல. இவ்வாறு அழைத்துவரப்பட்டவர்களை வைத்துக் காடுகளை அழித்தும், சதுப்பு நிலங்களை விளைநிலங்களாக மாற்றியும், 1930 வாக்கில் அந்தப் பகுதியின் பொருளாதார, நிலவியல் மற்றும் மக்கள்தொகை அமைப்பைத் தலைகீழாக மாற்றிவிட்டனர்.
முதலில், புதிதாக வந்தவர்கள் வரவேற்கப்பட்ட போதிலும், காலப்போக்கில் இன, மத, மொழி வேறுபாடுகளால் பதற்றம் உருவானது. இந்தப் பதற்றம் 1941-இல் நடைபெற்ற மக்கள்தொகை கணக்கீட்டால் சற்று தணிந்தது. குடிபெயர்ந்தவர்களும், தாங்களும் அசாமியர்களே என்று நம்பிக்கை கொள்ள ஆரம்பித்தார்கள். வங்க மொழி பேசும் இசுலாமியர்கள் ‘மியா’ என்கிற பெயரில் ஒருங்கிணைக்கப்பட்டு, அவர்களின் பேச்சு வழக்கு அசாமிய எழுத்துருக்களைக் கொண்டு இன்றளவும் எழுதப்படுவதால், அசாமிய மொழியையே தாய்மொழியாகவும் அலுவல் மொழியாகவும் கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.
அசாமின் வரைபடம் மாறிக்கொண்டே இருந்தது. 1905-இல் வங்கப் பிரிவினையின்போது, அசாம் மாநிலத்தை இசுலாமியர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட கிழக்கு வங்காளத்துடன் (இன்றைய பங்களாதேஷ்) இணைத்தனர் ஆங்கிலேயர்கள். தாக்கா அதன் தலைநகர். ஒருகாலத்தில் இடம்பெயர்ந்து அசாமில் குடியேறியவர்கள் இப்போது பெரும்பான்மையினரில் ஒரு அங்கமானார்கள்! ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, வங்காளம் ஒன்றிணைக்கப்பட்டதும் அசாம் மீண்டும் தனி மாகாணம் ஆனது. வங்காளிகள் மீண்டும் குடிபெயர்ந்தோர் ஆயினர். 1947 பிரிவினைக்குப் பிறகு, கிழக்கு வங்காளம் பாகிஸ்தானுடன் இணைக்கப்பட்டது. ஆனால் குடிபெயர்ந்து வந்திருந்த இசுலாமியர்கள் அசாமிலேயே இருக்க விரும்பினார்கள். அதே வேளையில் கிழக்கு வங்கத்திலிருந்து அகதிகளாகப் பல்லாயிரக்கணக்கான இந்து மற்றும் முஸ்லிம் மக்கள் அசாமில் தஞ்சமடைந்தார்கள். பின்னர் 1971-இல் நடந்த போரின்போதும் மற்றொரு அகதிகள் அலை அசாம் நோக்கிப் படையெடுத்தது. பங்களாதேஷ் உருவானது.
இவ்வாறு, அசாம் என்கிற பகுதி பர்மாவாகவும், பின்பு கிழக்கு வங்காளமாகவும், கிழக்கு பாகிஸ்தானாகவும், பின்னர் மீண்டும் அசாமாகாவும் பல அவதாரங்கள் எடுத்தது. நாடுகள் மாறின. கொடிகள் மாறின. நாட்டுப்பண் மாறியது. நகரங்கள் வளர்ந்தன. காடுகள் அழிந்தன. ‘வளர்ச்சி’ ஏற்பட்டது. அதில் பழங்குடியினர் காணாமல் போயினர். மக்களுக்கிடையேயான வேற்றுமைகள் அதிகரித்துக்கொண்டே இருந்தன.
வங்கதேச விடுதலையில் இந்திய அரசு பெருமை கொள்கிறது. அமெரிக்க, சீன ஆதரவு கொண்டிருந்த பாகிஸ்தானை அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அச்சமின்றி எதிர்க்கொண்டு, வங்கதேசத்தில் இனப்படுகொலையைத் தடுத்து வெற்றி பெற்றார். ஆனால் அந்த வெற்றி, அசாமிற்கும் அதன் அகதிகளுக்கும் அண்டை மாநிலங்களுக்கும் நீதியைப் பெற்றுத் தருவதில் முழு வெற்றி அடையவில்லை.
இந்தச் சூழ்நிலைதான் தேசிய குடிமக்கள் பதிவேடு ஒன்றின் அவசியத்தை வலியுறுத்தியது. இதில் முரண்நகை என்னவெனில், ‘தேசிய’ என்ற பதம் இங்கு இந்தியாவைக் குறிப்பதை விட அசாம் மாநிலத்தையே குறிக்கிறது. இந்தப் பதிவேட்டைப் புதுப்பிக்கும் முதல் முயற்சியானது, அசாமிய தேசிய மாணவர் இயக்கத்தின் செயல்பாடுகளால் 1951-இல் நடைபெற்றது. இதே காலகட்டத்தில், தீவிர, ஆயுதம் ஏந்திய, பிரிவினைவாதப் போராட்டங்களும் உயிர் பெற்றன. தனி அசாம் தேசியவாதிகள் ‘வெளிநாட்டினர்’ அனைவரது பெயர்களும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படும் வரையில் தேர்தலைப் புறக்கணிக்க முடிவுசெய்தனர். “அறி, அழி, அகற்று” (Detect, Delete, Deport) என்பதே அவர்களின் முழக்கமானது. விரைவில் வன்முறை வெடித்தது. 1979-இல் அசாம் பற்றி எரிந்தது. துவக்கத்தில் வங்காளிகளுக்கு எதிராக நடைபெற்ற இந்த இயக்கம், பின்னர் இந்து-முஸ்லிம் பரிமாணத்தை அடைந்தது. இதன் விளைவாக, 1983-இல் 6 மணி நேரத்தில் 2000 வங்காள முஸ்லிம்கள் கொல்லப்பட்ட நெல்லீ படுகொலை நடந்தது.
1985-இல் கிளர்ச்சி செய்யும் மாணவர் அமைப்புத் தலைவர்கள் அரசுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். அந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும் வென்று ஆட்சியைப் பிடித்தனர். ஒப்பந்தத்தின் படி, 1971-ஆம் ஆண்டு மார்ச் 24 அதாவது பாக்கிஸ்தான் ராணுவம் தாக்கத் துவங்கிய நாள் – அதன் பிறகு அசாமிற்குள் வந்தவர்கள் எல்லோரும் வெளியேற்றப்படுவார்கள். அதாவது 1971-க்குப் பிறகு குடிபெயர்ந்த ‘வந்தேறிகள்’ வெளியேற்றப்படுவார்கள்.
இதனைத் தொடர்ந்து, ‘வந்தேறிகள்’ எல்லைக் காவல் படையாலும், ‘சந்தேகத்துக்குரிய வாக்காளர்கள்’ தேர்தல் அதிகாரிகளாலும் கண்டறியப்பட்டு அன்றைய இந்திரா காந்தியின் அரசின் Illegal Migrants Determination by Tribunal Act (IMDT Act) சட்டப்படி விசாரிக்கப்பட்டனர். விசாரணையில் விதிமீறல்களைத் தவிர்க்கும் பொருட்டு, இந்தச் சட்டமானது, ஒருவரைச் சட்டவிரோதமாகக் குடியேறியவர் என்று நிரூபிக்கும் பொறுப்பைக் குற்றம் சாட்டுபவர்களிடம் ஒப்படைத்தது. இவ்வாறு இதுவரை சுமார் 4 லட்சம் ‘சந்தேகத்துக்குரிய’ வாக்காளர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களில் ஆயிரத்துக்கும் மேலானவர்கள் தடுப்புக் காவல் மையங்களில் வைக்கப்படிருக்கிறார்கள் – எந்தவித அடிப்படை உரிமையும் இன்றி.
2005-ஆம் ஆண்டில், இந்த IMDT சட்டம் செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. “அசாம் மாநிலம், வங்கதேச மக்களின் சட்டவிரோத குடியேற்றத்தால் ‘வெளிப் பகையாலும், உட்பூசல்களாலும்’ பாதிக்கப்பட்டுள்ளது உண்மையே” என்ற கருத்தைப் பதிவு செய்தது நீதிமன்றம். நிரூபிக்கும் பொறுப்பு, குற்றம் சாட்டியவரிடமிருந்து குற்றம் சாட்டப்பட்டவரிடம் தள்ளிவிடப்பட்டது. இதனால், குடிமக்களில் ஒவ்வொருவரும் தத்தமது குடியுரிமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டனர். இதுவே இன்றைய NRC திட்டத்துக்கு அடித்தளமிட்டது. அனைத்து அசாமிய மாணவர் இயக்கத்தின் தலைவராக இருந்த சர்பானந்த சோனாவால் என்பவர்தான் இந்த வழக்கைத் தொடுத்தவர். இவர் இப்போது ப.ஜ.க.வில் இணைந்து மாநில முதலமைச்சரும் ஆகிவிட்டார்.
2013-இல் அசாம் பப்ளிக் வர்க்ஸ் என்கிற அரசு சாரா இயக்கம் “சட்டவிரோத குடியேறிகளின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும்” என்று கோரி உச்சநீதி மன்றத்தை நாடியது. இந்த வழக்கு நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வுக்கு மாற்றப்பட்டது. இந்த நீதிபதி ஒரு அசாமியர்.
2014-இல் உச்ச நீதிமன்றம் “ஒரு ஆண்டுக்குள்ளாக, தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) புதுப்பிக்கப்பட வேண்டும்” என்று உத்தரவிட்டது. இதன்மூலம் கண்டறியப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட சுமார் 50 லட்சம் ‘ஊடுருவிகளை’ என்ன செய்வது என்று யாருக்கும் தெரியவில்லை. அவர்களை மீண்டும் வங்கதேசத்துக்கு நாடுகடத்துவதைப் பற்றியும் எந்தத் தெளிவும் இல்லை. அத்தனை பேரையும் தடுப்பு முகாம்களில் வைப்பதா? எவ்வளவு காலத்துக்கு? அவர்கள் குடியுரிமை பறிக்கப்படுமா? யாருக்கும் தெரியாது.
தொலைதூரங்களில் வசிக்கும் லட்சக்கணக்கான கிராம மக்கள் தாங்கள் வழிவழியாக 1971-க்கு முன்பிருந்தே அசாமில் குடியிருப்பதற்கான ஆதாரங்களைச் சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயம். உச்ச நீதிமன்றம் இட்ட கெடு முடிவதற்குள் இதைச் செய்து முடிப்பது குதிரைக்கொம்பாக இருந்தது. கல்வியறிவற்ற, ஏழை கிராமவாசிகள் இந்தக் கொடிய நிர்வாகச் சிக்கலில் மாட்டிக்கொண்டனர்.
ஏற்கனவே சொன்னது போல், அசாமின் தனித்துவமான நில அமைப்பு பிரம்மபுத்திரா நதியின் போக்கின்படி மாறிக்கொண்டே இருப்பது. இப்போது வளமான தீவாக இருக்கும் நிலப்பரப்பு எந்த நேரத்திலும் நதியின் கோர தாண்டவத்தினால் மூழ்கிவிடக் கூடியது. அதற்குப் பிராயச்சித்தமாக, அதுவரை நீருக்கடியில் இருந்த வேறொரு இடம் புதிய தீவாகப் பரிணமிக்கும். இவ்வாறான ‘சார்’ எனப்படும் தீவுக்கூட்டத்தில் சுமார் 2500 தீவுகள் இருக்கின்றன அசாமில். இந்த இடங்களுக்கு நீங்கள் செல்ல வேண்டுமானால் நெரிசலான படகு சவாரி செய்துதான் போக வேண்டும். நிரந்தரமற்ற இந்த நிலப்பரப்பில் ‘வீடுகள்’ தற்காலிகக் கொட்டகைகளே. பட்டா, சிட்டா என்பதற்கெல்லாம் அவ்வளவாக அர்த்தமே இல்லை. பள்ளிக்கூடங்கள் இல்லை. மருத்துவமனைகளும் இல்லை.
சென்ற மாதம் இந்தப் பகுதிகளுக்கு நான் சென்றிருந்தேன். பிரம்மபுத்திராவின் நீரலைகளைப் போலவே வறுமையும் இங்கே விளையாடிக்கொண்டிருக்கிறது. நவீனத்துவத்தின் ஒரே அடையாளமாக இருப்பது அந்த ஊர் மக்களின் ‘இருப்பிடச் சான்றிதழ்களைப்’ பாதுகாப்பாக வைத்திருக்கப் பயன்படும் நெகிழிப் பைகளே. காலத்தின் ஓட்டத்தாலும் பருவநிலையின் பிரதாபத்தாலும் ஓரங்கள் சிதிலமடைந்தும் எழுத்துக்கள் அழியத் தொடங்கியும் இருக்கும் அந்தச் சான்றிதழ்கள்தான் இவர்களையும் இவர்களது பிள்ளைகளையும் தடுப்பு முகாம்களுக்குச் செல்வதிலிருந்து காப்பாற்றும் என்ற நம்பிக்கையால் அவற்றை உயிராய்ப் பாதுகாத்து வருகிறார்கள். இப்படிப் பல்லாயிரக்கணக்கான மக்களை ராணுவத்தைக் கொண்டு பயமுறுத்தாமல், சான்றிதழ் கேட்டே பயமுறுத்துகிறது அரசு. அதிலும் இந்த அப்பாவி மக்களிடம் “legacy document,” “link paper,” “certified copy,” “re-verification,” “reference case,” “D-voter,” “declared foreigner,” “voter list,” “refugee certificate” என்று ஆங்கிலத்திலேயே கேட்டுக் கேட்டு இப்போது இந்தச் சொற்கள் எல்லாம் இவர்கள் தாய்மொழிச் சொற்களாகவே மாறிவிட்டன. இதில் சோகம் நிறைந்த சொல் “genuine citizen” என்பதே.
ஒவ்வொரு கிராமத்திலும், மக்கள் எவ்வாறு தங்களுக்குத் திடீரென்று ஓர் இரவில் ‘நாளை காலையிலேயே 300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்’ என்ற ஆணை அனுப்பப்பட்டது என்று விவரித்தார்கள். பயந்து போன அவர்கள், அவசர அவசரமாக, தங்களிடம் இருக்கும் எல்லாச் சான்றிதழ்களையும் எடுத்துப் பத்திரப்படுத்திக் கொண்டு, இரவோடு இரவாகச் சிறு படகுகளில் புறப்பட்டுக் காட்டாற்றைக் கடந்து, பேராசை மிக்க வாகன உரிமையாளர்களுக்குப் பணம் கொடுத்து, அபாயகரமான பயணத்தை மேற்கொண்டனர். இப்படி போனவர்களில் ஒரு குடும்பத்தினர் பயணம் செய்த வாகனம் சாலைப்பணி வாகனம் ஒன்றுடன் மோதியதில் அவர்கள் உடலெங்கும் தார் கொட்டிய அவலம் நிகழ்ந்தது. அவர்களை நான் மருத்துவமனையில் சந்தித்தேன். சட்டவிரோத குடியேறிகள் என்கிற கருப்புச்சாயம் அவர்கள் மீதிருந்து எப்போது அகலுமோ?
இத்தனை இடர்பாடுகளிலும், இந்த NRC புதுப்பித்தலை அசாமில் பலரும் வரவேற்கத்தான் செய்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம் உண்டு: அசாம் தேசியவாதிகளைப் பொறுத்தவரையில், இந்துக்களோ இசுலாமியர்களோ, அசாமில் குடிபுகுந்த வங்காளிகள் அனைவரும் வெளியேறினால் சரி. பூர்வகுடிகளுக்கோ, இத்தனை காலமாகத் தங்களுக்கு நடந்த இனத்துரோகத்துக்கும் வரலாற்றுப் பிழைகளால் தாங்கள் அடைந்துவந்த துயரங்களுக்கும் முடிவுகட்ட வேண்டும். அசாமில் தற்போது வசிக்கும் வங்காளிகளுக்கோ, அவர்கள் இந்துவோ இசுலாமியரோ, NRC-இல் தங்கள் பெயரும் இருக்க வேண்டும். தாங்களும் சட்டபூர்வமான குடிமக்களே என்று நிரூபிக்க இதுவே ஒரு நல்ல வாய்ப்பு. இந்து தேசியவாதிகளுக்கோ, லட்சக்கணக்கான இசுலாமியர்களின் பெயர்கள் இந்தப் பதிவேட்டிலிருந்து நீக்கப்பட வேண்டும். இப்படி ஒவ்வொருவருக்கும் இந்தப் பதிவேட்டை வரவேற்கத் தனித்தனி காரணங்கள் உள்ளன. கணக்கை முடிக்க வேண்டும். அவ்வளவுதான்.
ஒருவாறாக இறுதி பட்டியலும் ஆகஸ்ட் 31, 2019 அன்று வெளியானது. 19 லட்சம் மக்களின் பெயர்கள் அதில் இல்லை. இவர்களில் பெரும்பான்மையினர் பெண்களும் குழந்தைகளும். இந்தப் பெண்கள் மிகச்சிறு வயதில் திருமணம் செய்தவர்கள். தங்களது இன வழக்கப்படி, திருமணத்துக்குப் பிறகு பெயர் மாற்றம் செய்தவர்கள். ஆனால் இதற்கான “link documents” இவர்களிடம் இல்லை. எழுத்தறிவில்லாத பலரும் தங்களது பெயர்களில் இருந்த எழுத்துப்பிழைகளால் பெயர் நீக்கப்பட்டவர்கள். எடுத்துக்காட்டாக, H-a-s-a-n என்பது H-a-s-s-a-n என்றோ Joynul என்ற பெயர் Zainul என்றோ இருந்துவிட்டால் அவ்வளவுதான். கதை முடிந்தது. இன்னொரு அவலம், சான்றிதழ்கள் எல்லாமே தந்தைவழி வந்ததாக இருக்க வேண்டும். தாயின் சான்றிதழ்கள் செல்லாது. கணவரை இழந்தவர்கள், பிரிந்து வாழ்பவர்கள், நிலம் இல்லாதவர்கள் எல்லோரும் வெளியே. இத்தகைய பெண்களுக்கும் ஏழைகளுக்கும் எதிரான ஓரவஞ்சனைதான் NRC-யின் கொடுமைகளிலேயே மிகப்பெரிய கொடுமை. ஏழைகளில் பெரும்பாலானோர் இசுலாமியர், தலித்துகள் மற்றும் பழங்குடியினர் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
பெயர் விடுபட்ட 19 லட்சம் பேரும் நீதி பெறும் பொருட்டு, ‘வெளிநாட்டினர் தீர்ப்பாயங்கள் (Foreigners Tribunal) அமைக்கப்பட்டு வருகின்றன. இதில் நியமிக்கப்படுபவர்கள் கையில்தான் இந்த 19 லட்சம் மக்களின் வாழ்வும் சாவும் இருக்கிறது. இதில் வழக்கு நடத்த வேண்டுமெனில், இம்மக்கள் தாமே செலவு செய்து வழக்கறிஞரைக் கொண்டு வாதாட வேண்டும். இருக்க வக்கற்றவர்கள் வக்கீல் செலவுக்கு எங்கே போவார்கள்? பலர் தற்கொலை செய்துகொண்டார்கள்.
கோடிக்கணக்கில் செலவிட்டுத் திரட்டிய இந்தப் பட்டியல் வெளியாகியும் பலரும் அதிருப்தியில் இருக்கின்றனர். அதற்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம் உள்ளது. வங்காளிகளின் அதிருப்திக்குக் காரணம் இந்திய அரசியல் சட்டப்படி சகல உரிமை பெற்றவர்களாகத் தாங்கள் இருந்தும் இந்தப் பதிவேட்டில் தங்களது பெயர்கள் இல்லாமல் போனதுதான்; அசாமிய தேசியவாதிகளுக்கோ இன்னும் பல சட்டவிரோத குடியேறிகளின் பெயர்கள் இந்தப் பதிவேட்டில் நீடிக்கிறதே என்ற கவலை; இந்து தேசியவாதிகளுக்கோ வேறு கவலை – இந்த 19 லட்சம் பேரில் பாதிக்கும் மேலானவர்கள் இசுலாமியர்கள் அல்ல.
நீதிபதி கோகோய், NRC-இன் ஒருங்கிணைப்பாளர் ஒரு வாரத்துக்குள் அசாமை விட்டு வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டார். காரணம் எதுவும் குறிப்பிடவில்லை.
இப்போது புதிய NRC வேண்டும் என்ற கோரிக்கை துவங்கியுள்ளது.
இந்த மடத்தனத்தை எவ்வாறு புரிந்துகொள்வது? இதற்கான விடையைக் கவிதையில் தேடுகிறது ‘மியா’ கவிஞர்களின் குழுமம். மியா என்பது பல வட்டார மொழிகளின் தொகுப்பு மொழி. அம்மொழியில் ‘தாய்’ என்கிற தலைப்பில் ரெஹ்னா சுல்தானா என்கிற கவிஞரின் வரிகள் அதிக கவனத்தை ஈர்த்துள்ளன.
தாயே, சலித்துப் போய்விட்டது
என்னை உனக்குத்
திரும்பத் திரும்ப அறிமுகம் செய்து கொள்வதில்
Ma, ami tumar kachchey aamar porisoi diti diti biakul oya dzai
Mother, I’m so tired, tired of introducing myself to you
காவல்துறையிடம் இதுபற்றி பல புகார்கள் சென்றன, அசாமிய சமூகத்தை இந்தக் கவிஞர்கள் அவமதிக்கிறார்கள் என்று. ரெஹ்னா சுல்தானா தலைமறைவாகி விட்டார்.