லித்தியம் பேட்டரி ஆய்வில் கலக்கும் 100 வயது இளைஞர்


.

ஜான் குட்எனஃப் (John Goodenough). இன்று நாம் அலட்டிக் கொள்ளாமல் பயன்படுத்தும் கைபேசிகளிலும் மின்வாகனங்களிலும் உள்ள பேட்டரிகள் உருவாகப் பெரிதும் காரணமானவர். அவர் கண்டறிந்த லித்தியம் கோபால்ட் ஆக்ஸைடு (LiCoO2) மின்தகடுகள் தான் இன்றைக்கு வரைக்கும் மிகச் சிறந்த செயல்திறன் கொண்டவை. விலை குறைவான, இன்னும் பாதுகாப்பான மூலப்பொருள் வேண்டும் என்ற தேவை ஏற்பட்ட போது, லித்தியம் இரும்பு ஃபாஸ்பேட் (LiFePO4) என்ற சேர்மத்தை அளித்தார். இன்று வரை இந்த இரண்டு மூலப்பொருட்களைத் தான் பெரும்பாலான லித்தியம் பேட்டரிகளில் மானே தேனே போட்டு (LiCoO2-இல் மாங்கனீசும் நிக்கலும் பல்வேறு விகிதங்களில் சேர்த்தும், LiFePO4-இல் கார்பன் சேர்த்தும் துகள் அளவைக் குறைத்தும்) பயன்படுத்துகிறோம். அடுத்த தலைமுறையின் தேவைகளுக்கு ஏற்ற, இன்னும் பல மடங்கு அதிக செயல்திறன் கொண்ட பேட்டரிகளை உருவாக்கும் முயற்சியில் இன்னும் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அன்றாடம் ஆய்வகத்துக்குச் செல்கிறார். வயது 100 தான் ஆகிறது. சொல்ல மறந்து விட்டேன். 2019-இல் நோபல் பரிசும் வாங்கி விட்டார். இவை எல்லாவற்றையும் விட, தனது சக ஆய்வாளர்களையும் மாணவர்களையும் மதிப்பவர். எண்ணற்ற ஆராய்ச்சி மாணவர்களுக்கு முன்மாதிரியாக இருப்பவர். தன்னடக்கம் மிக்க பண்பாளர். வாழ்த்துவோம்.

லித்தியம்-அயனி பேட்டரியின் வரைபடத்தை வெண்பலகையில் வடிக்கிறார் ஜான் குட்எனஃப் 1

எல்லோரும் பணி ஓய்வு பெறும் 64 வயதில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்திலிருந்து டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்துக்கு மாறினார் குட்எனஃப். அலங்காரப்பதவிக்காக அல்ல. ஆராய்ச்சித் தலைவராக. அங்கு பேட்டரி மட்டுமல்லாது எரிபொருள் மின்கலம் (fuel cell), மீக்கடத்திகள் (superconductors), வினையூக்கிகள் (catalysts) என்று பல துறைகளிலும் தன் ஆய்வுகளைப் பரவலாக்கினார். கணிதத்தில் பட்டம் பெற்று, இரண்டாம் உலகப்போரில் வானிலையாளராகப் பணியாற்றி, பின்னர் இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்றவரான குட்எனஃப், இயற்பியல் மற்றும் வேதியியல் கோட்பாடுகளை ஒன்றிணைத்து இத்தகைய அறிவியல் வெற்றிகளை அடைந்தார். குட்எனஃப் அவர்களுடன் எதிர்மின் அயனிகளைக் கொண்ட சேர்மங்களில் (polyanionic materials) பணிபுரிந்தவரும், அவரது நோபல் பரிசு ஏற்புரையை வாசிக்கும் சிறப்பைப் பெற்றவருமான முனைவர் ஆறுமுகம் மந்திரம் அவர்கள் இந்த மாமனிதரின் பங்களிப்புகளைப் பற்றி விரிவானதொரு கட்டுரையை எழுதியிருக்கிறார்.2

ஜான் குட்எனஃப் மற்றும் ஆறுமுகம் மந்திரம் 2
ஜான் குட்எனஃப் அவர்களின் அறிவியல் பங்களிப்புகள் 2

சோதனைகள் இல்லாத சாதனைகளா?

ஆரம்பகால லித்தியம் பேட்டரிகளில் லித்தியம் மின்தகட்டின் வினைதிறனால் தீ பிடிக்கும் அபாயங்கள் இருந்தன. ஸ்டான்லி விட்டிங்ஹாம் (Stanley Wittingham) உருவாக்கிய இந்த பேட்டரிகளில் டைட்டானியம் டைசல்ஃபைடு நேர் மின்தகடாக இருந்தது. 2 வோல்ட் மின்சாரம் கிடைத்தது. பிறகு குட்எனஃப் இந்த பேட்டரியில் டைட்டானியம் டைசல்ஃபைடுக்குப் பதிலாக லித்தியம் கோபால்ட் ஆக்ஸைடு பயன்படுத்தினால் 4 வோல்ட் அளவிற்கு மேம்படுத்த முடியும் என்பதை நிரூபித்தார். அதாவது இரட்டிப்புச் செயல்திறன். ஆனால் லித்தியத்தின் வினைதிறன் இந்த பேட்டரிகளின் வணிகமயமாக்கலுக்குப் பெரும் தடையாகவே இருந்தது. ஜப்பானின் அகிரா யோஷினோ (Akira Yoshino) லித்தியத்துக்குப் பதிலாகக் கரிம மின்தகடுகளைப் பயன்படுத்தினால் அபாயமற்ற வகையில் லித்தியம் அயனிகளை அடிப்படையாகக் கொண்ட பேட்டரிகளை உருவாக்கலாம் என்பதைக் கண்டறிந்தார். 1991-இல் ஜப்பானின் சோனி நிறுவனம் இந்த வடிவமைப்பிலான பேட்டரிகளைச் சந்தைக்குக் கொண்டுவந்தது. பேட்டரி யுகம் பிறந்தது.

இதில், குட்எனஃப் அவர்களின் ஆராய்ச்சி உதவியாளராக இந்தியாவைச் சேர்ந்த அக்‌ஷயா பதி மற்றும் நிப்பான் நிறுவனத்தின் ஷிகெடோ ஒகடா (Shigeto Okada) ஆகியோர் பணியாற்றி வந்தனர். முக்கியமான ஆராய்ச்சிக் குறிப்புகளை ஒகடா தன் நிறுவனத்துக்கு ரகசியமாக அனுப்பி வைத்துவிட்டார். இந்த விசயம் குட்எனஃப்பிற்குத் தெரியும் முன்பே காலம் கடந்து விட்டது. நிப்பான் நிறுவனம் இந்தக் கண்டுபிடிப்புக்குக் காப்புரிமை (patent) பெற்று விட்டது.3 இதே கதை பின்னர் லித்தியம் இரும்பு பாஸ்பேட் கண்டுபிடிப்பிலும் தொடர்ந்தது. ஒரே வித்தியாசம்: முன்பு ஜப்பான். இப்போது சீனா. அறிவியல் கண்டுபிடிப்புகள் எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு அவற்றைக் காப்புரிமை பெற்று தக்க வைப்பதும் சந்தைப்படுத்துதலும் முக்கியம் என்பதற்கு இது சிறந்த பாடம்.

ஜான் குட்எனஃப் இளமைக்காலப் புகைப்படங்கள்: (இடது) உடன்பிறந்தவர்களுடன் நடுவில் இருப்பவர்; (வலது) பள்ளி கால்பந்து நண்பர்களுடன் வலமிருந்து இரண்டாமவர் 1

எல்லாவற்றுக்கும் மேலாக, ஜான் குட்எனஃப் அவர்களின் விடாமுயற்சி, ஒழுக்கம், அறம் தவறாத அறிவியல் கண்ணோட்டம், மனித நேயம் ஆகியனவே நாம் உணர்ந்து போற்ற வேண்டியன. அதனால் தான் விட்டிங்ஹாம் மற்றும் யோஷினோ ஆகியோருடன் அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது3; சந்தைப்படுத்தியவர்களுக்கு அல்ல. தாமதமாகத்தான் கொடுக்கப்பட்டது எனினும் ஒட்டுமொத்த உலகமும் கொண்டாட வேண்டிய நிகழ்வு அது. அதைவிடக் கொண்டாட வேண்டியது இந்த 100 வயது இளைஞரின் இடைவிடா அறிவியல் பயணம்.

மேற்கோள்கள்:

  1. தன் வரலாறு https://www.nobelprize.org/prizes/chemistry/2019/goodenough/biographical/
  2. ஆறுமுகம் மந்திரம் அவர்களின் கட்டுரை https://iopscience.iop.org/article/10.1149/1945-7111/ac59f7#jesac59f7f3
  3. ஸ்டீவ் லெவின் எழுதிய நூல் The Powerhouse: America, China, and the Great Battery War
  4. நோபெல் தளம் https://www.nobelprize.org/prizes/chemistry/2019/press-release/

லித்தியன் கந்தகமாறன் – 5 மடங்கு அதிக சேமிப்புத்திறன் கொண்ட பேட்டரிகள்


சென்ற பதிவில், நடைமுறையில் உள்ள லித்தியம்-அயனி பேட்டரிகளைக் காட்டிலும் 5 மடங்கு அதிக மின் தேக்குத்திறன் கொண்ட பேட்டரிகள் பற்றி பார்க்கலாம் என்று சொல்லியிருந்தேன். இந்த முறை கொஞ்சம் புதுமையாக, ஒரு பழைய கதையுடன் தொடங்கலாம்.

மிருகண்டர் என்ற ஒரு முனிவருக்கும் மருதவதி என்ற அவரது மனைவிக்கும் குழந்தைபேறு இல்லையாம். சிவபெருமானிடம் பிள்ளை வரம் வேண்டிக்கொண்டார்களாம். மனம் இளகிய சிவன், அவர்களுக்கு வழக்கம்போல் ஒரு விசித்திரமான, சோதிக்கும் வரத்தைத் தருகிறார்.

வாய்ப்பு #1: 100 வயது வரை வாழும் குழந்தை பிறக்கும்; ஆனால் முட்டாளாக வாழும்.

வாய்ப்பு #2: அறிவு மிக்க குழந்தை பிறக்கும். 16 வயதினிலே இறந்துவிடும். எது வேண்டும்? இது தான் அந்த வரத்தில் இருக்கும் சாபம்.

பேட்டரி ஆராய்ச்சியிலும் இதே போல ஒரு சிக்கலான ஒரு கேள்வி இருக்கிறது. அது என்னவென்றால், ஒரு வகையான பேட்டரியை ஆயிரக்கணக்கான முறை சார்ஜ் செய்து மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம். ஆனால் அதன் மின் தேக்குத்திறன் குறிப்பிட்ட அளவுக்குள்ளாகவே இருக்கும்; மெல்ல மெல்ல இந்த ஆற்றல் குறைந்து கொண்டே வரும். மற்றொரு வகையான பேட்டரி, முன்னதைக் காட்டிலும் 5 மடங்கு அதிக ஆற்றலைக் கொண்டது. ஆனால், 100 முறை மட்டுமே பயன்படும். எது வேண்டும்?

மேலே உள்ள படத்தில் தலைமுறை 4-இல் இடம்பெற்றுள்ள லித்தியம்-சல்ஃபர் வகை பேட்டரி தான் நம் கதையின் மார்கண்டேயன்.

லித்தியம்-கந்தகம் பேட்டரி எப்படி ஆற்றல் தருகிறது? இதில் என்ன சிறப்பு/குறைபாடு?

முதலில் செயல்பாடும் சிறப்புகளும்: லித்தியம்-அயனி பேட்டரியில் லித்தியம் அயனிகள் வாடகைக்குக் குடியிருப்போர் போல நேர் மின் தகட்டிற்கும் எதிர் மின் தகட்டிற்கும் குடிபெயர்ந்து கொண்டே இருக்கும் என்று ஏற்கனவே பார்த்தோம். இதனை இடைச்செறுகல் (intercalation) என்று சொல்கிறோம். லித்தியம்-கந்தகம் கொண்ட பேட்டரிகளில் லித்தியம் அயனிகள் கந்தக அயனிகளுடன் சேர்ந்துகொண்டு பல்சல்பைடுகளாக (polysulphides) Li2S8, Li2S6, Li2S4, Li2S2 என்று கொஞ்சம் கொஞ்சமாக மாறி இறுதியில் Li2S என்ற முழு சந்திரமுகியாகவே மாறிவிடுகின்றன. சார்ஜ் செய்யும்போது மீண்டும் Li மற்றும் S8 என்ற கங்காவாக உருப்பெறுகின்றன. இந்த முறையை conversion என்று சொல்கிறோம்.

டிஸ்சார்ஜ் செய்யும்போது ஒவ்வொரு கந்தக அணுவும் படிப்படியாக 16 லித்தியம் அணுக்களுடன் சேர்ந்து பாலிசல்ஃபைடுகளாக உருமாற்றம் அடைந்து Li2S ஆகிறது. பின்னர் சார்ஜ் செய்கையில் ஒரே தாவலில் லித்தியம் தனியாகவும் கந்தகம் தனியாகவும் பிரிந்து விடுகின்றன.

இதில் சிறப்பு என்னவென்றால், கந்தகம் என்பது மிக அதிகமாகவும் எளிதாகவும் கிடைக்கக்கூடிய பொருள். பெட்ரோலியத் துறையில் ஒரு கிளைப்பொருளாக (by-product) டன் கணக்கில் கிடைக்கக் கூடிய கந்தகம் லித்தியம்-அயனி பேட்டரி தயாரிக்கத் தேவைப்படும் மூலப்பொருட்களான கோபால்ட், நிக்கல் போன்றவற்றை விட ஆயிரம் மடங்கு மலிவாகவும் எளிதாகவும் கிடைக்கக்கூடியது. நச்சுத் தன்மையும் மிகக் குறைவு. மற்றொரு சிறப்பு, கார்பனுக்குப் பதிலாக லித்தியத்தையே பயன்படுத்துவதால், அதன் ஆற்றல் அடர்த்தியையும் மின்திறனையும் முழுமையாகப் பயன்படுத்த முடியும். அப்படியானால் இனி லித்தியம்-சல்ஃபர் பேட்டரிகளின் ஆதிக்கம் தானா என்கிறீர்களா? இனி குறைபாடுகளைப் பார்க்கலாம்: மார்க்கண்டேயனின் 16 ஆண்டு ஆயுள் போலவே லித்தியம் சல்ஃபர் பேட்டரிகள் நூறு முதல் நூற்றைம்பது முறை மட்டுமே மின்னேற்றம்/மின்னிறக்கம் (charge/discharge) சுழற்சிகளைத் தாங்கக்கூடியது. அதற்குமேல் பயன்படுத்தினால் பாலிசல்பைடு என்கிற ஃபாலிடாலைக் குடித்துத் தற்கொலை செய்து கொள்கின்றன. ஏனென்றால், Li2S8, Li2S6, Li2S4, Li2S2 ஆகியவற்றில் சில பாலிசல்ஃபைடுகள் சந்திரமுகியாகவே இருந்துவிடத் துடிக்கின்றன. முழு உருமாற்றம் தடைபடுகிறது. இறுதியில் பேட்டரி படுத்துவிடுகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, கந்தகம், அதற்கு மின் கடத்துத்திறன் அளிக்கும் கரிமம், மற்றும் மின்பகுளியைச் சீராக வைத்திருக்கும் லித்தியம் நைட்டிரேட் ஆகியவற்றை கொண்ட சேர்மம் இதில் இருப்பதால், சிறப்பானதொரு வெடிமருந்துக்கான ரெசிபி இந்த பேட்டரி. எனவே லித்தியம் சல்ஃபர் பேட்டரிகளை விமானம் மற்றும் கப்பல் போக்குவரத்தில் அனுமதிப்பதற்குச் சாத்தியமில்லை.

இதற்கு என்ன தீர்வு?

1. பாலிசல்ஃபைடுகளைக் கட்டுக்குள் வைத்திருக்கக் கூடிய வேதிப்பொருட்களைக் கண்டறிந்து பயன்படுத்துதல்

2. லித்தியம் மின் தகட்டின் மீது பாதுகாப்புப் பூச்சு அமைப்பது. இது பாலிசல்ஃபைடுகள் லித்தியத்தின் மேற்பரப்பை அரிப்பதைத் தடுக்கும்.

நாங்கள் 1000 முறை சார்ஜ்/டிஸ்சார்ஜ் செய்து விட்டோம். ஐந்து மடங்கு அதிக ஆற்றலை நிரூபித்து விட்டோம் என்று அடிக்கடி ஆராய்ச்சி உலகில் ராமர் பிள்ளைகள் தோன்றி மறைகின்றனர். உண்மை என்னவென்றால், வணிக ரீதியாக லித்தியம் சல்ஃபர் பேட்டரி தயாரித்துக் கொண்டிருந்த Oxis, Sion ஆகிய இரண்டே நிறுவனங்களில் Oxis திவாலாகி விட்டது. Sion தரப்பில் பேச்சு மூச்சே இல்லை.

தொடரும் ஆய்வுகளின் வெளிப்பாடாக என்றேனும் ஒருநாள் நூறாண்டு வாழும் மார்கண்டேய பேட்டரியைக் கண்டுபிடிப்போம் என்று நம்புவோமாக.

An image showing a bunch of old used mobile phone batteries

விண்கலத்தின் இறுதிச்சடங்கு


கடந்த இரண்டு பத்தாண்டுகளாக மொத்த உலக மக்கள் தொகையில் ஒருசிலர் பூமியில் காணப்படவில்லை. ஏனெனில், அவர்கள் நிலப்பரப்பில் இருந்து சுமார் 400 கிலோமீட்டர் உயரத்தில் மணிக்கு 27,500 கிலோமீட்டர் வேகத்தில் மிதந்து கொண்டிருக்கிறார்கள். ஆம், International Space Station என்கிற பன்னாட்டு விண்வெளி நிலையம்தான் அவர்களின் இருப்பிடம். 100 மீட்டர் நீளமுடைய இந்த மிதக்கும் ஆய்வு நிலையம் அமெரிக்கா, ஐரோப்பா, ரஷ்யா, ஜப்பான், கனடா ஆகிய நாடுகளின் பங்களிப்பால் சாத்தியமாயிற்று.

விண்ணில் மிதக்கும் ஆய்வகம் ISS

நுண்ணீர்ப்பு (microgravity), விண் உயிரியல் (space biology), மனித உடல் இயங்கியல் (human physiology) மற்றும் அடிப்படை இயற்பியல் குறித்த ஆய்வுகளுக்குப் பெரிதும் பயன்பட்டு வருகிறது ISS. மேலும், பிற கோள்களுக்கும் தொலைவில் உள்ள விண்ணிடங்களுக்கும் செல்வதற்கான ஆராய்ச்சியின் முதல் படியாகவும் இது திகழ்கிறது.

வயசு ஆகுதில்ல…

எல்லாவற்றுக்கும் முடிவு ஒன்று உண்டல்லவா? இந்த விண்வெளி நிலையமும் அதற்கு விதிவிலக்கல்ல. 2031-ஆம் ஆண்டு வாக்கில் இதற்குப் பிரியாவிடை அளிக்க முடிவு செய்திருக்கிறது நாசா. இவ்வளவு முக்கியமான ஆய்வு நிலையத்தை ஏன் அழிக்க வேண்டும் என்கிறீர்களா? வயது மூப்புதான் காரணம். 1990களில் அமைக்கப்பெற்ற இந்த மிதக்கும் ஆய்வகத்தின் பல்வேறு பாகங்கள் பல்வேறு காலகட்டங்களில் மாற்றவும் சரிசெய்யவும் பட்டுள்ளன. இருப்பினும், கடந்த 32 ஆண்டுகளாக இரவு பகலாக தொடர்ந்து 90 நிமிடங்களுக்கு ஒருமுறை உலகை வலம் வந்து கொண்டிருக்கும் ஒரு இயந்திரம் பல தேய்மானங்களையும் சேதாரங்களையும் சந்திக்க நேரிடுகிறது. வெப்பநிலை மாறுபாடுகளும் இதன் தாங்கும் திறனைச் சோதிக்கின்றன. தொடர்ந்து தன்பால் இழுக்கும் புவியின் ஈர்ப்பு விசையையும் ஒருபுறம் சமாளிக்க வேண்டியுள்ளது. பராமரிப்பு செலவும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. ஆகையால், 2030 வரை மட்டுமே இத்தனையையும் திறம்பட சமாளிக்க முடியும்.

எப்படி அழிப்பது?

இரண்டு வழிகள் உள்ளன.

  1. ஒன்றுமே செய்யாமல் விட்டுவிடுவது. புவியீர்ப்பு விசை மற்றவற்றை பார்த்துக் கொள்ளும். ஆனால் இது கட்டுப்பாடற்ற வழி.
  2. சிறு ராக்கெட்டுகளைப் பயன்படுத்தி ஐ.எஸ்.எஸ்-இன் வேகத்தையும் பாதையையும் படிப்படியாக மாற்றி, குறிப்பிட்ட இடத்தில் விழுமாறு செய்து இறுதிச் சடங்குகள் நடத்துவது. இது பொறுப்புமிக்க வழி.

வேகத்தை ஏற்றப் பயன்பட்ட ராக்கெட்டுகளே வேகத்தைக் குறைக்கவும் பயன்படுவது இங்கே நகைமுரண்; ஆனால் உண்மை.

ஆஸ்திரேலியா அருகில் தீப்பந்து

தீப்பொறிகளாய் வேகப்பந்து வீசுவதில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் வல்லவர்கள். உப்புக் காகிதத்தால் சுரண்டினால் தீப்பொறிகள் இன்னும் சிறப்பாகப் பறக்கும். சரி, அதை விட்டுவிட்டு நமது விண்வெளி நிலையத்துக்கு வருவோம். நாசாவின் திட்டப்படி, ISS பூமிக்கு திரும்புகையில் ஆஸ்திரேலியாவுக்கு அருகில் தீப்பிழம்பாய் மாறி, பின்னர் பசுபிக் பெருங்கடலில் விழும். இந்த நிகழ்வு, எரி நட்சத்திரம் போல் காட்சியளிக்கும்.

நீமோ முனை – விண்கல மயானம்

South Pacific Ocean Uninhabited Area (SPOUA) என்கிற ஆள் அரவமற்ற (ஆளற்ற என்பது சரி; அரவமற்றதா என்று உறுதியாகத் தெரியவில்லை) இடம்தான் இத்தகைய விண்கலங்களின் மயானம். நொடிக்கு 6 கிலோமீட்டர் வேகத்தில் வளிமண்டலத்தை அடையும் ஐ.எஸ்.எஸ். அங்கு 10,000 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலையில் பெரும்பாலும் எரிந்து சாம்பலாகி விடும். எஞ்சிய பகுதிகள் இந்தக் கடல் பகுதியில் விழும்.

விண்கல மயானம்

கடலோடு… இன்று ரசித்த கவிதை


களித்துப் போகிறாள் என் செல்லம்

தீரா அலைகளின் ஓயா ஓசையினால்

தீண்டித் தீண்டிச் செல்லும்

அலைக் கரங்களால் மகிழ்ந்து போகிறாள்

குளிர்ந்து தவழ்ந்து நடுங்கி …

கடலோடு…

நண்பர் லோகேஷ் எழுதிய இந்தக் கவிதை உங்கள் மனதையும் கவர்ந்திருக்கும் என்று நம்புகிறேன்.

லித்திய உலகம் – பகுதி 3 – பேட்டரி தலைமுறைகளும் தலையெழுத்தும்


ஒரு பேட்டரியின் தன்மைகளை மதிப்பிட மூன்று அளவுகோல்கள் உள்ளன:

  1. ஆற்றல் அடர்த்தி (energy density)
  2. திறன் அடர்த்தி (power density)
  3. மின் தேக்குத்திறன் (capacity)

ஆற்றல் அடர்த்தியில் லித்தியம் பேட்டரிகள் தான் சூப்பர் ஸ்டார் என்பதை ஏற்கனவே முதல் பாகத்தில் பார்த்தோம். மறந்து விட்டது என்றால், லித்தியம் தான் உலோகங்களிலேயே அடர்த்தி குறைவானது என்பதை நினைவில் கொள்ளவும். எடுத்துக்காட்டாக, ஒரு கிலோ இரும்புடன் ஒப்பிடும்போது ஒரு கிலோ லித்தியம் 11 மடங்கு அதிக ஆற்றலைச் சேமிக்க வல்லது (இரும்பைப் பயன்படுத்தினால் பேட்டரி இரும்பு கனம் கனக்கும் என்பது வேறு விசயம்)!

அடுத்ததாக, திறன் அடர்த்தி என்பது ஒரு பேட்டரி எவ்வளவு விரைவாக சார்ஜ் அல்லது டிஸ்சார்ஜ் செய்யப்படக் கூடியது என்பதைத் தீர்மானிக்கும். இதில், லித்தியம் பேட்டரி சூப்பர் ஸ்டாராக இல்லாவிட்டாலும் நடைமுறைக்குப் போதுமானதாக உள்ளது. “சார்ஜ் ஏற ஒரு மாமாங்கமே ஆகுது” என்று புலம்புபவர்கள் இன்னும் ஒருசில ‘தலைமுறைகள்’ புலம்பிக் கொண்டிருக்க வேண்டியதுதான். ஆம், பேட்டரிகளிலும் தலைமுறைகள் உண்டு. ஆய்வாளர்களும் தொழில்நுட்ப வல்லுனர்களும் வேதியியல் மற்றும் தொழில்நுட்ப அடிப்படையில் லித்தியம் பேட்டரிகளை 5 தலைமுறைகளாக வகுத்துள்ளனர். இதைப்பற்றி பின்னர் ஒரு பதிவில் விரிவாகப் பார்க்கலாம். இப்போது நாம் பயன்படுத்தும் பேட்டரிகள் இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்தவை என்பதை மட்டும் நினைவில் கொள்வோமாக.

மூன்றாவதும் முக்கியமானதுமான மின் தேக்குத்திறன் என்பது, ஒரு கிராம் எடையுள்ள செயற்பொருள் (active material) எவ்வளவு மின்சாரத்தைத் தன்னுள் தேக்கிவைத்துக் கொள்ளக்கூடியது என்பதைக் குறிக்கிறது. இதுவே அந்த பேட்டரி ஒரு முறை சார்ஜ் செய்தால் எத்தனை மணி நேரம் நம் செல்பேசியியை இயங்கச் செய்யும் என்பதை முடிவு செய்ய உதவும். தற்போது உள்ள தொழில்நுட்பத்தால் தயாரிக்கப்படும் லித்தியம் அயனி (lithium-ion) பேட்டரிகள் அவற்றின் அதிகபட்ச செயல் மற்றும் மின் தேக்குத் திறன்களை எட்டி விட்டன என்றே சொல்ல வேண்டும். கோட்பாட்டு அளவில், நேர்மின் தகட்டில் (cathode) உள்ள ஒரு கிராம் செயற் பொருள் ஒரு மணி நேரத்தில் ஏறத்தாழ 300 மில்லி ஆம்பயர் (milli ampere) என்ற அளவில் மின்சாரத்தைச் தேக்கி வைக்கும் திறன் கொண்டது. ஆனால் நடைமுறையில் 150 மில்லி ஆம்பயர் மட்டுமே இதனால் சேமிக்க முடிகிறது.

ஏன் இந்த ஊழல் என்கிறீர்களா?

இரண்டு காரணங்கள். ஒன்று, என்னதான் லித்தியம்-அயனி பேட்டரி என்று பேர் எடுத்தாலும் சந்தையில் கிடைக்கும் பேட்டரிகளில் உள்ள எதிர் மின் தகடு லித்தியம் அல்ல. கிராஃபைட் (graphite) என்கிற படிம அமைப்பு கொண்ட கார்பன். இதன் படிமங்களின் இடைவெளிகளில்தான் ஒவ்வொரு முறை நாம் பேட்டரியை சார்ஜ் செய்யும் போது நேர்மின் தகட்டில் இருந்து வரும் லித்தியம் அயனிகள் தங்கி இளைப்பாறிவிட்டுச் செல்லும். பின்னர் சார்ஜ் ஆன பேட்டரியை நாம் பயன்படுத்தும் போது (அதாவது டிஸ்சார்ஜ் செய்யும் போது) இந்த லித்தியம் அயனிகள் மீண்டும் தமது தாய்வீடான நேர்மின் தகட்டை நாடிச் செல்லும். இவ்வாறு, லித்தியத்துக்குப் பதிலாக கார்பனைப் பயன்படுத்துவதால் லித்தியம்-அயனி பேட்டரிகளின் முழு செயல்திறனை நாம் பெற முடிவதில்லை. லித்தியத்தை எதிர்மின் தகடாகப் பயன்படுத்தி இதைச் சரி செய்யலாம். ஆனால் இந்த சொர்க்க நிலை அதிக நேரம் நிலைக்காது. பகுதி 2-இல் சொன்னது போல, லித்தியம் எல்லாவற்றுடனும் மிக எளிதில் வினைபுரியக் கூடியது, காற்றில் இருக்கும் ஈரப்பதத்துடன் கூட. எனவே, பேட்டரி திரவத்துடன் லித்தியம் வினைபுரிகையில் அதன் மேற்பரப்பில் மின்னோட்டத்தைத் தடுக்கவல்ல ஒரு மெல்லிய படிவம் உருவாகி, மிக வேகமாக வளர்ந்து, ஆணிகள் போன்று கூர்மையான டென்ட்ரைட்களாக (dendrites) விசுவரூபம் எடுத்து, நேர்மின் தகட்டைப் பதம்பார்த்து விடும். விளைவு: பேட்டரிக்கு இறுதி அஞ்சலி போஸ்டர் ஓட்ட வேண்டியதுதான். மேலும் நடைமுறையில் இத்தகைய பேட்டரி சேதமடைந்தாலோ நீரில் நனைந்தாலோ தீ விபத்து ஏற்பட்டு, மின்கலம் மின்மயானமாகி விடும் என்பதைத் தெரிவித்துக்கொண்டு…

இரண்டாவது காரணம், லித்தியம்-அயனி பேட்டரியின் முழுத்திறனை அடைய 5 வோல்ட் வரைக்கும் சார்ஜ் செய்ய வேண்டும். ஆனால் அவ்வளவு அதிக மின்னழுத்தத்தை மின்பகுளி (பேட்டரியில் உள்ள திரவம்) தாங்காது. 4.2 வோல்ட்டைக் கடந்தாலே தரிகிடதோம் தான். பிறகு எங்கே 5 வோல்ட் வரை செல்வது? எனவே, கிடைத்த வரை லாபம் என்றபடி, அதிகபட்சம் 4.2 வோல்ட் வரை பேட்டரியை சார்ஜ் செய்து திருப்தி அடைய வேண்டியது தான்.

An image showing a bunch of old used mobile phone batteries

செல்பேசி மற்றும் பிற சாதனங்களின் செயல்திறன் அதிகமாகிக் கொண்டே வருகையில் பேட்டரி துறை மட்டும் ஏன் மெதுவாக முன்னேறுகிறது என்பது நியாமான கேள்விதான். ஆனால் இதற்குப் பல நியாயமான பதில்களும் உள்ளன. இன்று நாம் பயன்படுத்தும் பேட்டரியைக் காட்டிலும் 5 மடங்கு அதிக மின் தேக்குத்திறன் கொண்ட பேட்டரிகள் ஆராய்ச்சி நிலையில் உள்ளன. அதைப்பற்றி அடுத்த பதிவில் காணலாம்.

குறுக்கெழுத்து 29 – சினிமா பாடல்கள்


திரைப்படப் பாடல்களின் முதல் சொற்களைக் கொண்டு இந்தப் புதிரை அமைத்திருக்கிறேன். 

பிரிண்ட் செய்து கட்டங்களை நிரப்பலாம். பிரிண்டர் இல்லாதவர்கள் ஒரு காகிதத்தில் 14 x 15 கட்டங்களை வரைந்து விடைகளை அதில் எழுதலாம்.

விடைகளைப் பின்னூட்டத்திலோ (comments பகுதியில்) அல்லது vijayshankar.twwi@gmail.com என்ற முகவரிக்கு இமெயில் செய்தோ அனுப்பலாம்.

 

இடமிருந்து வலம்:

1. என் உள்ளம் மயங்கும்படி இந்த ஓவியம் என்னென்னவோ சொல்லுதடி! (5, 4)

4 & மேலிருந்து கீழ் 6. கேரள எல்லையில் நுழைந்த தமிழ்க் குருவிக்கு ஒரே கொண்டாட்டந்தான் (4. 5)

9 & மேலிருந்து கீழ் 21. இந்த இளம் பருவத்தில் ஏதோ ஒரு காட்சி தோன்றுதடி (6, 4)

10 & மேலிருந்து கீழ் 17. விசில் அடிக்க வருவாயா பாட்டி? (3, 2)

12. அழகிய வேலனே, உன் ஒப்பனை… ம்… போய்விட்டது (4)

14. 2000 ரூபாய் தாளில் பாதி அளவிற்கு பா.ஜ.க.வின் சின்னம் (4, 3)

15. மேலிருந்து கீழ் 19-ஐ பார்க்கவும்

16 & 23. கீழடி நாகரிகத் தொட்டிலில் தர்மத்தின் தலைவன் (5, 4)

17. நண்பா! நண்பா! என்று அழைத்தால் ஒருமுறை மட்டும் தோள் கொடுக்க வருகிறான் (2)

20 & 25. விழியே! கண்ணதாசனின் கடைசி வரியே! (3, 2, 2)

22. பேரின்பம் தரும் பழந்தமிழ் இசைக்கருவியை வாசிக்கிறாள் மகள் (4, 2) 

23. இடமிருந்து வலம் 16-ஐ பார்க்கவும்

24 & மே. கீ. 2. காதலனே/காதலியே, நலமா? (3, 3)

25. இடமிருந்து வலம் 20-ஐ பார்க்கவும்

மேலிருந்து கீழ்:

1. ரோஜாவுக்குத்தான் எத்தனை எத்தனை விருப்பங்கள்! (3, 3, 2)

2. இ.வ.24-ஐ பார்க்கவும்

3. ஹாங்காங் லேடி டிகிரி படித்த குழப்பத்தில் ஹாஸ்யம் மறந்துபோய் ஆடிப் பாடுகிறாள் (4, 4)

5 & 13. ரோஜா பூத்திருக்கும் விலாசம் மோகனுக்குத் தெரிய வேண்டுமாம் (2, 4)

6. இடமிருந்து வலம் 4-ஐ பார்க்கவும்

7. குற்றமற்ற ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சமான மெய்யன்பே! (3)

8. செம்மலரே! உன்னைக் காண எவ்வளவு தொலைவு செல்ல வேண்டும் என்பது கங்கை அமரனுக்குத்தான் தெரியும் (7)

11. பெண்களை உவமைகளால் வர்ணித்து வர்ணித்துக் கவிச்சக்கரவர்த்தியே சறுக்கிவிட்டான்! (4, 5)

13. மேலிருந்து கீழ் 5-ஐ பார்க்கவும்

17. இடமிருந்து வலம் 10-ஐ பார்க்கவும்

18. அன்பானவனே! என் விழியை பம்பாயில் இழந்துவிட்டேன். (5)

19 & இடமிருந்து வலம் 15. தாழம்பூ தலையில் சூடி நடப்பவளே! (4, 5)

21. இடமிருந்து வலம் 9-ஐ பார்க்கவும்

விடைகளையும் கருத்துக்களையும் vijayshankar.twwi@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சலில் அனுப்பவும்.

குறுக்கெழுத்து 28 – சினிமா


திரைப்படங்களின் பெயர்களைக் கொண்டு ஒரு சிறு புதிர் அமைத்திட ரொம்ப நாள் ஆசை. விளைவு இது. இந்தத் திரைப்படங்களில் எவற்றை எல்லாம் பார்த்திருக்கிறீர்கள் என்றும் சொல்லவும். 

பிரிண்ட் செய்து கட்டங்களை நிரப்பலாம். பிரிண்டர் இல்லாதவர்கள் ஒரு காகிதத்தில் 11 x 11 கட்டங்களை வரைந்து விடைகளை அதில் எழுதலாம்.

விடைகளைப் பின்னூட்டத்திலோ (comments பகுதியில்) அல்லது vijayshankar.twwi@gmail.com என்ற முகவரிக்கு இமெயில் செய்தோ அனுப்பலாம்.

 

இடமிருந்து வலம்:

2. பெண் சிசுக்களைக் காத்திட உன் சிந்தனை வேண்டும் கருப்பு அன்னையே! (6)

4 & 10. மாறுவேடமும் ஆள்மாறாட்டமும் செய்து ஓடிக்கொண்டிருக்கையில் அன்பு செலுத்த வாய்ப்பு ஏது? (5, 5)

7. அழகு மலரும் அழைப்பு மணியும் உனக்காகத்தான். அணிந்திட வா மலரே… (2, 5)

9. இதைக் கட்ட நடுத்தரக் குடும்பம் பட்ட பாடு பாலுமகேந்திராவுக்குத் தெரியும் (2)

12. ராச பக்தி செய்த குழப்பத்தில் சிவாஜிக்கு நல்ல வரவேற்பு (5)

13. அன்றைய தினம் ஒரே திகில் (3, 2)

மேலிருந்து கீழ்:

1. உதிர்ந்த மலர்களே மகேந்திரனுக்கு மாலையாகி விட்டன (8)

2. டக்கான் ரக காரட் பொறியல் பிசைந்து தின்றதால் தலைக்கு மேல் ஆட்டம்தான் (9)

5 & 6. அண்ணனும் தம்பியும் ரொம்ப அதிசயம்தான் (4, 7)

8. சுதந்திரம் கிடைக்கத் திரும்பவும் தலையை விடு (4)

11. ஹேராயில் தரம் நடுவில் நான்கு தரம் குறைந்தபோதும் காந்தி என்ன சொல்லிவிடப் போகிறார்? (1,2)

வலமிருந்து இடம்:

3. காவேரியைத் தேடி கிருஷ்ணா கடந்து சென்ற மற்றொரு பெரிய ஆறு (4)

கீழிருந்து மேல்:

14. ஓர் இரவில் குற்றவாளி காவலாளி ஆனதைத் திரும்பவும் நினைத்துத் திகை (4)

விடைகளையும் கருத்துக்களையும் vijayshankar.twwi@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சலில் அனுப்பவும்.

 

இலக்யா குறுக்கெழுத்து 27 விடைகள்


பங்குபெற்ற அனைவருக்கும் நன்றியும் வாழ்த்துகளும். சரியான விடைகளை அனுப்பியவர்கள் ராமராவ் மற்றும் Varghesh Vergin. இரண்டாமவர் அனுப்பிய விடைகளையே இங்கே தந்திருக்கிறேன்.

மருந்து இருக்கிறதா?


ஜூலை 2020 கணையாழி இதழில் வெளிவந்துள்ள என் வரிகள்:

கதவு திறந்ததும்
கட்டித் தழுவிட
ஓடோடி வருகிறாய்.

சட்டென விலகிக் கொள்கிறேன்.
உன் அம்மா
உனை வாரிச் செல்கிறாள்.

நிம்மதிப் பெருமூச்சுடன்
நழுவுகிறேன்
குளிப்பதற்கு.

தேய்க்கிறேன் கழுவுகிறேன்
தேய்க்கிறேன் கழுவுகிறேன்

இன்னும் கொஞ்சம் சுடுநீர்
இன்னும் கொஞ்சம் சோப்பு

விரல் இடுக்கில்
நகக்கண்ணில்
எங்கேயும் இருக்கலாம் கிருமி.

சிலரைக் குணமாக்கி
வீட்டுக்கு அனுப்பினேன்.
ஒருசில உயிர்களை
இப்போதைக்கு இருக்கச் செய்தேன்

என்ன செய்தும்
மற்றவர்கள் மரித்துப் போனார்கள்.

இந்த இருப்புகளில் விருப்பும் இல்லை
இறப்புகளில் வெறுப்பும் இல்லை.

தேய்க்கிறேன் கழுவுகிறேன்
தேய்க்கிறேன் கழுவுகிறேன்

இன்னும் கொஞ்சம் சுடுநீர்
இன்னும் கொஞ்சம் சோப்பு

விரல் இடுக்கில்
நகக்கண்ணில்
எங்கேயும் இருக்கலாம் கிருமி.

இன்று வரைந்த ஓவியம்
காகிதப் பூ கத்திக் கப்பல்
சேலைகட்டி எடுத்த படம்
எல்லாமும் காட்டி

அப்பாவைக் கொஞ்ச வேண்டும்
எப்போது வருவாரென்று

தூக்கத்தைத் தூரப்போட்டு
காத்திருக்கும் என்னுயிரே

புன்னகைப் பூ உன்னைவிட
பெரியதெந்த செல்வமடி?

ஓடி வா என் மகளே
முத்தமழை பொழிய வந்தேன்.

விரல் இடுக்கில்
நகக்கண்ணில்
உதட்டோரம்
இன்னும் இருக்கலாம் கிருமி.

கட்டித் தழுவிட
ஓடோடி வருகிறாய்.

சட்டென விலகிக் கொள்கிறேன்.

தூங்கப் போஎன்று அதட்டிவிட்டு
இதயத்தைச் சாத்தி வைக்கிறேன்.

இழந்த இன்பங்களுக்கு
எங்கேயாவது
மருந்து இருக்கிறதா?

குறுக்கெழுத்து 27 – சிறுவர், சிறுமியர் சிறப்பு புதிர்


 

பள்ளி மாணவ, மாணவியர் வீட்டில்போர் அடித்துஅமர்ந்திருப்பீர்கள். குறுக்கெழுத்துப் போட்டியில் ஆர்வம் இருப்பவர்கள் இதை முயற்சிக்கலாம். 6-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை படிப்பவர்களுக்கு எளிதாக இருக்கும். மற்றவர்களும் முயற்சி செய்யலாம்.

பிரிண்ட் செய்து கட்டங்களை நிரப்பலாம். பிரிண்டர் இல்லாதவர்கள் ஒரு காகிதத்தில் 9 x 9 கட்டங்களை வரைந்து விடைகளை அதில் எழுதலாம்.

விடைகளைப் பின்னூட்டத்திலோ (comments பகுதியில்) அல்லது vijayshankar.twwi@gmail.com என்ற முகவரிக்கு இமெயில் செய்தோ அனுப்பலாம்.

xwrd_27

இடமிருந்து வலம்:

1. தேசிய பறவை வண்டி ஏறி வருகிறது (3, 4)

4. கடற்கரையில் ஒன்றின் பின் ஒன்றாக வந்துகொண்டே இருக்கிறது இந்த channel (5)

6. அழகு குறைந்தபோதும் அறிவழகன் மூளைக்காரன் (3)

7. குழு அமைத்து உடுத்திக்கொள் (2)

9. சோப்பு கொண்டு அடிக்கடி இப்படிச் செய்தல் கிருமிகளை நீக்கும் (1,5)

11. சிலம்பு தேய்ந்து சிலம்பரசன் ஆகிவிட்டது (3)

13. பொருளின் மதிப்பு (2)

14. படத்தில் இருக்கும் பூச்சியின் பெயர் (3)

Dragon_fly

மேலிருந்து கீழ்:

1. ஊட்டியை இப்படியும் பெருமையாகச் சொல்வார்கள் (5,3)

2. வெயிலா மழையா புயலா என்று நமக்கு இப்படிச் சொல்வார்கள் (3, 4)

3. துணியையும் காகிதத்தையும் வெட்டப் பயன்படும் (7)

5. மாமிசம் உண்ணாதவர்களை இப்படியும் சொல்லலாம் (3)

8. தமிழில் 247 இருக்கிறது (4)

10. இளைய சகோதரன் (3)

12. உலகம் (2)

 

விடைகளையும் கருத்துக்களையும் vijayshankar.twwi@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சலில் அனுப்பவும்.

 

‘என் சரித்திரம்’ – தமிழ்த் தாத்தா டாக்டர் உ. வே. சாமிநாத ஐயர்


 

தமிழ் மக்களும் தமிழ் மீது ஆர்வம் உள்ளவர்கள் அனைவரும் படிக்க வேண்டிய புத்தகங்கள் என்று ஒரு பட்டியலிட்டால், அதில் தமிழ்த் தாத்தா .வே.சா. அவர்களின்என் சரித்திரம்நூல் முதல் மூன்றில் ஒன்றாக இருக்கும். சுயசரிதை பட்டியலில் அநேகமாக முதலாவதாக இருக்கும்.

பள்ளிப் பாடப்புத்தகத்தில் தமிழ்த் தாத்தாவைப் பற்றி எப்போதோ படித்ததாக நினைவு. ஒருசில தேர்வுகளில் இரண்டு மதிப்பெண் கேள்விக்கு விடையாக அவரது வாழ்க்கைக் குறிப்பு வரைந்ததே அவரைப் பற்றி நான் நினைத்துப் பார்த்த தருணங்கள். அவர் என்ன படித்தார், எங்கே படித்தார், பழைய ஏட்டுச்சுவடிகளைத் தேடி அலைந்து அவர் சேகரிக்க என்ன காரணம் என்றெல்லாம் யோசித்ததே கிடையாது. பிறகு எங்கே தமிழுக்கு அவர் ஆற்றிய அருந்தொண்டைப் பற்றியெல்லாம் எண்ணி வியப்பது?

IMG_0475

 

சமீபத்தில் ஆர்.வீ. தமது பதிவில் தமிழ்த் தாத்தாவின்என் சரித்திரம்நூலைப் பரிந்துரை செய்திருந்தார். மனதில் எங்கோ ஒரு ஓரத்தில் இருந்த ஆர்வம் பெருகி இந்நூலைப் படித்துவிடுவது என்று முடிவு செய்தேன். மற்றவர்களைக் குறைகூறித் தங்கள் வாழ்க்கைச் சரித்திரத்தை எழுதுபவர்கள் மத்தியில் குறைவற்ற சரித்திர வாழ்க்கை வாழ்ந்த ஒரு மேதையின் சரித்திரத்தைப் படிப்பது, அவருடனே பயணிப்பது போன்ற பிரமிப்பைத் தந்தது.

இந்தப் புத்தகத்தைப் படிக்க விரும்புபவர்களுக்குஸ்பாய்லர்களைத் தராமல் ஒருசில குறிப்புகளை மட்டும் இங்கு தருகிறேன் (சில ஸ்பாய்லர்களைத் தவிர்க்க முடியவில்லை). விரிவாகப் பேச வேண்டுமெனில் தொலைபேசியிலோ கொரோனா பயம் இல்லாத சமயங்களில் நேரிலோ வந்தீர்களானால் மணிக்கணக்கில் நாள்கணக்கில் பேசலாம்.

நான் வியந்தவை:

ஆசிரிய பக்தி

இவரது ஆசிரியர் மீனாட்சிசுந்தரம் பிள்ளை. 19-ஆம் நூற்றாண்டின் இணையற்ற தமிழறிஞர். படித்தால் இவரிடம்தான் தமிழ் படிக்க வேண்டும் என்று தவமிருந்து, அந்த நல்வாய்ப்பும் அமையப்பெற்றதால் ஆசிரியரிடம் மிகுந்த மரியாதை பக்தி கொண்டிருக்கிறார். ஆசிரியப்பிரான்என்றே அவரைக் குறிப்பிடுகிறார். தமது ஆசிரியரின் தமிழறிவு மட்டுமின்றி, மாணவர்களுக்கு உதவும் நல்லியல்பும் .வே.சா. அவர்களைக் கவர்ந்ததே இதற்கு காரணம். நூலில் ஓரிடத்தில், தமிழ் மொழியின் சொல்லழகு போன்ற மீனாட்சியின் இயல்பும் அந்தச் சொல்லின் பொருளான சிவனாகிய சுந்தரதின் இயல்பும் ஒருசேர அமையப்பெற்ற மீனாட்சிசுந்தரம் பிள்ளை என்று அவரைப் புகழ்கிறார். இருவருக்கும் இடையே ஒரு நல்லகெமிஸ்ட்ரிஇருந்திருக்கிறது. பிள்ளை அவர்கள் இறக்கும் தருவாயில் இவரது மனநிலையும், கடைசி மூச்சின்போது இவர் வாயால் தேவாரம் பாடக் கேட்டு அவர் கண்ணீர் மல்கியதும் உணர்வுப்பூர்வமானது. இவற்றைப் படிக்கும்போது, நமக்கு இப்படி ஒரு ஆசிரியர் அமையவில்லையே என்ற ஏக்கம் வருகிறது. .வே.சா. போன்ற மாணவராக நாம் இல்லையே என்ற நினைவு வந்ததும்வார்த்தை முட்டுது‘.

 

மதிப்புக் கூட்டல் (value addition)

பிள்ளை அவர்களின் பிரதான சீடராக இவர் திகழக் காரணம் இவரது தமிழார்வமும் அயராத உழைப்பும்தான் என்றாலும், இவற்றோடு இன்னுமொரு கலை இவரது கைவசம் இருந்ததே இவருக்குப் பெரிதும் கைகொடுத்தது. அது இவரது இசைப்பயிற்சி. எல்லோரும் படிப்பது போலவே செய்யுள்களைப் படிக்காமல், அவற்றின் அமைப்புக்கு ஏற்ற ராகத்துடன் இவர் படித்தமை கேட்போர் உள்ளதைக் கவர்ந்திருக்கிறது. செய்யுள்களின் இலக்கிய நயத்தைப் பாராட்டும் திறனோடு அவற்றின் இலக்கண விதிமுறைகளும் இவருக்கு அத்துப்படி. எனவே செய்யுள் இயற்றுவதும் கைவந்த கலை. நல்ல ரசனையும் சேர்ந்துகொண்டது. எல்லோருக்கும் இப்படி அமைவதில்லை. தாம் பதிப்பித்த நூல்களில் மற்றவர்களைப் போல் மூலத்தையும் உரையையும் மட்டும் பதிப்பிக்காமல், நூல் குறிப்பு, ஆசிரியர் குறிப்பு, அரும்பத உரை, மேற்கோள்கள், உதாரணங்கள் என்று பல அம்சங்களைச் சேர்த்து வழங்கியமை இவரது மதிப்புக்கூட்டலுக்கு இன்னொரு சான்று.

 

சரியான நேரத்தில், சரியான இடத்தில், சரியான நபர்

இதை அதிர்ஷ்டம் என்றும் சொல்வார்கள். இவருக்கு அது நிறையவே இருந்திருக்கிறது. பிராமணராக இருந்ததும் இவருக்குப் பல இடங்களில் அனுகூலமாக இருந்திருக்கிறது என்று நினைக்கிறேன். திருவாவடுதுறை ஆதீனத்தின் சார்பாக சென்னை சென்ற போது கிடைத்த வாய்ப்புகளும் தொடர்புகளும் இதற்கு எடுத்துக்காட்டு. ஆசிரியரின் மறைவுக்குப் பிறகு ஆதீனத் தலைவர் சுப்பிரமணிய தேசிகர் இவரை ஆதரித்து, பிள்ளை அவர்களின் இடத்தில் இவரை வைக்கிறார். தமிழ் வளர்ச்சியில் இந்த ஆதீனத்தின் பங்கு அளப்பரியது. பல அரிய சுவடிகளை இங்கே பாதுகாப்பாக வைத்திருந்தனர். இவரது ஆராய்ச்சிக்கு அவை பெரிதும் பயன்பட்டுள்ளன. டாக்டர். .வே.சா.வின் வாழ்வின் திருப்புமுனை என்றால், அவர் சேலம் ராமசாமி முதலியார் என்பவரைச் சந்தித்தத்தைச் சொல்லலாம்.

முதலியார்: யாரிடம் பாடம் கேட்டிருக்கிறீர்கள்?

உ.வே.சா.: மகா வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களிடம் பாடம் கேட்டேன்.

முதலியார் (அலட்சியமாக): என்ன என்ன பாடம் கேட்டிருக்கிறீர்கள்?

உ.வே.சா.: குடந்தை அந்தாதி, மறைசையந்தாதி, புகலூரந்தாதி, …. (அந்தாதிகளில் இருபது, கலம்பகங்களில் இருபது, கோவைகளில் பதினைந்து, பிள்ளைத்தமிழில் முப்பது, உலாக்களில் இருபது, தூதுகள், என்று அடுக்கிக்கொண்டே போகிறார்.)

முதலியார் (இடைமறித்து): இதெல்லாம் படித்து என்ன பிரயோசனம்?

உ.வே.சா.: திருவிளையாடற் புராணம், கந்த புராணம், பெரிய புராணம், ….

முதலியார் இன்னும் அசரவில்லை.

உ.வே.சா.: நைடதம், பிரபுலிங்க லீலை, சிவஞான போதம்….. கம்பராமாயணம் இரண்டு மூன்று முறை படித்திருக்கிறேன்.

முதலியார்: சரி அவ்வளவுதானே?

உ.வே.சா. நொந்துபோய் நிற்கிறார்.

முதலியார்: இந்தப் பிற்காலத்துப் புஸ்தகங்களை எல்லாம் படித்தது சரிதான். பழைய நூல்களில் ஏதாவது படித்ததுண்டா?

உ.வே.சா.: நான் சொன்னவற்றில் எவ்வளவோ பழைய நூல்கள் உள்ளனவே?

முதலியார்: அவைகளுக்கெல்லாம் மூலமான நூல்களை படித்திருக்கிறீர்களா?

.வே.சா.: தாங்கள் எந்த நூல்களைச் சொல்கிறீர்கள் என்று தெரியவில்லையே!

முதலியார்: சீவகசிந்தாமணி படித்திருக்கிறீர்களா? மணிமேகலை படித்திருக்கிறீர்களா? சிலப்பதிகாரம்?

இந்தக் கடைசி கேள்விதான் .வே.சா. அவர்களின் வாழ்வைப் புரட்டிப் போடுகிறது. ஏனெனில் அச்சமயத்தில் இந்நூல்களை இவரது ஆசிரியர்கூடப் படித்ததில்லை. இதன்பொருட்டு இவர் எடுத்த முயற்சிகளாலேயே நமக்குச் சங்க நூல்களைப் பற்றியும் தமிழின் இலக்கியத் தொன்மை பற்றியும் இன்றைய புரிதலில் ஒருவித மறுமலர்ச்சி ஏற்பட்டது என்பது தனி வரலாறு.

 

ஆங்கிலம் தெரியாது!

இவ்வளவு பெரிய ஆராய்ச்சியைச் செய்து ஒரு துறையின் நிலையையே மேம்படுத்தியிருக்கும் தமிழ்த் தாத்தா ஆங்கிலம் கற்கவில்லை. வடமொழியும் கற்கவில்லை! தான் பணியாற்றிய கல்லூரியில் விழாவொன்றில் ஷேஸ்பியரின்இளவேனில் கனவுநாடகத்தைத் தமிழில் எழுதியிருக்கிறார், இன்னொருவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பிறகு. பல வடமொழி நூல்களைப் பிறர் மொழிபெயர்த்துச் சொல்ல, அவற்றைத் தமிழ் மூலத்துடன் ஒப்பிட்டு, பனையோலைச் சுவடி சேதமாகியோ தொலைந்து போனதாலோ விடுபட்ட பகுதிகளை ஆராய்ந்து பதிப்பித்திருக்கிறார். அன்றைய ஆங்கிலேய அரசாங்கம் சமஸ்கிருதத்தில் நிபுணத்துவம் பெற்றவர்களுக்கே அளித்து வந்தமகாமகோபாத்யாயஎன்கிற உயரிய பட்டத்தைத் தமிழ் மட்டுமே கற்றிருந்த இவர் பெற்றமை தமிழுக்குப் பெருமை சேர்ப்பதாகும் இந்தப் பட்டம் பெற்றவர்களின் பட்டியல் இங்கே. வருடத்திற்கு 100 ரூபாய் தந்தார்களாம்).

 

சிறந்த ஆராய்ச்சியாளர் & ஆசிரியர்

திண்ணைப் பள்ளிக்கூடத்திலும், தனி ஆசிரியரிடமும் பயின்ற இவர் பின்னர் கல்லூரியில் தமிழாசிரியர் ஆனதே இவரது திறமையும் பெருமையும் சொல்லும். ஒரு தேர்ந்த ஆராய்ச்சியாளரின் பக்குவத்துடன், உணர்வுபூர்வமாக மட்டும் அணுகாமல், அறிவுபூர்வமாகவும் ஆராய்ந்து, அந்தத் துறையில் தேர்ந்த அனுபவசாலிகளிடம் கலந்துரையாடி, பிழைகள் இருப்பின் அடுத்த பதிப்பில் சரிசெய்யும் பக்குவத்துடன் பணியாற்றியிருக்கிறார். திருக்குறளையும் நாலடியாரையும் மொழிபெயர்த்த ஜி.யூ. போப், மதுரையில் நான்காம் தமிழ்ச் சங்கம் அமைத்த பாண்டித்துரை தேவர், தமிழ்த் தாய் வாழ்த்து எழுதிய மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை, மறைமலையடிகளார், . . சிதம்பரனார், ஃப்ரான்ஸ் நாட்டின் இந்திய மொழி ஆராய்ச்சியாளர் ஜூலியன் வின்சன் போன்றோருடன் தொடர்பில் இருந்திருக்கிறார். தன் ஆசிரியரைப் போலவே இவரும் தமது மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டவர். ஆசிரியர் பணியில் கிடைத்த வருமானத்தையும் (மாதம் 50 ரூபாய்) தமிழார்வம் கொண்ட புரவலர்கள் தந்த பணத்தையும் கொண்டே தாம் கண்டெடுத்து ஆராய்ந்த பல தமிழ் நூல்களைப் பதிப்பித்திருக்கிறார்

 

மணவாழ்க்கை?

தனது பாட்டனார் பிறப்பு முதல் தன் ஜாதகம் வரை பகிர்ந்துகொண்ட .வே.சா. என்ன காரணத்தாலோ தமது மண வாழ்வைப்பற்றியும் தமது மனைவியின் பங்கு பற்றியும் அதிகம் எழுதவில்லை. மகன் பிறந்ததை ஒரு இடத்தில குறிப்பிடுகிறார். அவ்வளவுதான். ஒருவேளை தமது துணைவியாரைப் பற்றி இறுதியில் தெரிவிக்கலாம் என்று எண்ணியிருந்திருப்பாரோ என்னவோ. அதற்குள் இயற்கை எய்திவிட்டார். தமிழ்த் தேடலை வாழ்வெனக் கொண்ட தமிழ்த் தாத்தா தன்னைப் பற்றி இன்னும் அறிய மக்களும் தேடட்டும் என்று நினைத்துவிட்டார் போலும்! இந்நூலின் தொடர்ச்சியாக இவரது மாணவரான கி. வா. ஜகந்நாதன் எழுதியஎன் ஆசிரியப்பிரான் நூலில் மேலும் சில விவரங்களைத் தெரிந்துகொள்ள முடிகிறது.

 

என்ன அவசரம்?

பல சாதனைகளைச் செய்தவர். இத்தகையவர் இன்னும் சில ஆண்டுகளாவது இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. இன்றைய தொழில்நுட்பங்கள் அப்போது இருந்திருந்தால் சுவடிகளைத் தேடி இவரது அலைச்சல் வெகுவாகக் குறைந்திருக்கும். ‘வளையாபதிபிரதி இருக்கிறது என்று யாரேனும் சொன்னால் உடனே இவர் கிளம்பிப் போய்ப் பார்த்தால், அது வேறு ஏதாவதாக இருக்குமாம். அப்போது திறன்பேசி இருந்திருந்தால் ஸ்கேன் செய்து அனுப்புங்கள் என்று சொல்லி, உறுதி செய்துவிட்டுக் கிளம்பியிருப்பார். இந்த மாதிரி அலைச்சல்களும் மன உளைச்சல்களும் அவருக்கு இல்லாமல் இருந்திருக்கும். அதேபோல், இன்றைய மருத்துவ வசதிகளும் போக்குவரத்து வசதிகளும் அப்போது இருந்திருந்தால் அவரது ஆரோக்கியம் இன்னும் நல்ல முறையில் இருந்திருக்கக்கூடும். என்ன செய்வது?

 

ஹிந்தியா தமிழா?

இவரது மாணவர்களில் ஒருவரும், அப்போதைய மாகாண அரசின் அமைச்சருமான சுப்பராயலு என்பவர் இவரிடம் வந்துஇன்றைய நிலையில் ஹிந்தி படித்தால் மாணவர்களுக்கு நல்லது. இதை நீங்கள் சொன்னால் பலரும் ஏற்றுக்கொள்வார்கள்என்று சொல்லியிருக்கிறார். அதற்கு நம் தாத்தா அவர்கள், ஹிந்தி படிப்பது நல்லதுதான். அனால் அதைக் கட்டாயப்படுத்தக் கூடாது என்று சொல்லியிருக்கிறார். இவரே உண்மையான திராவிடர். தமிழர்.

இறுதி மூச்சு வரை தமிழ் தமிழ் என்றே வாழ்ந்திருக்கிறார். உலகப் போர் பதற்றத்தின்போது சென்னையிலிருந்து திருக்கழுக்குன்றம் சென்றவர் தமது நூல்களையும் சுவடிகளையும் அங்கே கொண்டுவரும்படி சொல்லியிருக்கிறார். பத்து மாட்டு வண்டிகளில் அவை கொண்டுவரப்பட்ட பின்புதான் நிம்மதி அடைந்திருக்கிறார்.

அருங்காட்சியகமாக இருக்க வேண்டியதியாகராச விலாசம்என்ற இவரது இல்லம் இடிக்கப்பட்டுவிட்டது என்கிற செய்தி அதிர்ச்சியளித்தது. நமது டிசைன் அப்படி.

சில நேரங்களில், இவர் தனி ஒருவராக இருந்து பழைய தமிழ் நூல்களைக் கண்டுபிடித்துத் தந்ததாக ஒரு செயற்கையான பிம்பம் கட்டி அமைக்கப்படுகிறதோ என்ற சந்தேகமும்கூட வருகிறது. இருப்பினும், ஆறுமுக நாவலர், சி.வை. தாமோதரம் பிள்ளை, மற்றும் .வே.சா. ஆகியோரே பல்லவர் காலத்திற்கும் முந்தைய இலக்கியங்களைத் தேடிப் பிடித்துப் பதிப்பித்து, தமிழ் இலக்கிய வரலாற்றை கி.மு. காலத்திற்கும் முந்தையது என்று நிறுவினார்கள் என்பதை மறுக்க முடியாது. அதுவரையிலும், இந்திய மொழிகளில் சமஸ்கிருதம் மட்டுமே செம்மொழி என்று இந்திய மற்றும் உலக மொழி அறிஞர்களெல்லாம் எண்ணிக்கொண்டிருந்த வேளையில், இவர்களது ஒப்பற்ற உழைப்பால்தான் சமஸ்கிருதத்தின் சார்போ தாக்கமோ இல்லாமல் தனித்தே ஒரு மொழிதமிழ் என்ற அந்த மொழி – இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான இலக்கிய வரலாறும் வளமும் பெற்று இன்னும் பேச்சு மற்றும் எழுத்து வழக்கில் உயிர்ப்புடன் இருக்கும் ஒரு செம்மொழியாகத் திகழ்ந்து வந்திருக்கிறது என்ற உண்மை தெரியவந்தது. ஆய்வுலகத்துக்கு இது ஒரு பேரதிர்ச்சி. தமிழுலகத்துக்கோ பெரியதொரு இன்ப அதிர்ச்சி. நாம் எல்லோரும் பெருமப்பட வேண்டிய ஒரு மறுமலர்ச்சி (Renaissance) இது.

தற்போதைய கீழடி அகழாய்வில் கிடைக்கப்பெற்றுள்ள பொருட்களையும் செய்திகளையும் கொண்டு பார்க்கும்போது பல உடைந்த துண்டுகள் ஒன்றுசேர்ந்து பெரும் புதிர் ஒன்று விடுவிக்கப்படுவது போல் உள்ளது.

ஓலைச்சுவடியையோ எழுத்தாணியையோ நான் இதுவரை பார்த்ததில்லை. சுவடிகள் எழுதும் முறை பற்றி இந்நூலில் தமிழ்த் தாத்தா சொல்லியிருக்கிறார். இணையத்தில் தேடியபோது, உலகின் பல்வேறு பகுதிகளிலும் இந்த முறை இருந்திருக்கிறது என்றும் அவற்றைப் பற்றி இன்றும் பல நாடுகளில் சிறந்த ஆராய்ச்சிப் பணிகள் செய்யப்பட்டு வருகின்றன என்றும் அறிந்து கொண்டேன். அவற்றைப் பற்றி மற்றொரு பதிவில் சொல்கிறேன்.

இணைப்புகள்:

1. விக்கியில் இந்நூலைப் படிக்க

2. உ.வே.சா. அவர்கள் சென்னையில் வாழ்ந்த இல்லம் இடிக்கப்பட்ட செய்தி

3. சென்னையில் அவர் பெயரில் அமைக்கப்பட்ட நூல் நிலையத்தின் நிலை (2013-ஆம் ஆண்டில்)

4. அன்றைய தமிழ்ப் புலவர்களின்/ஆசிரியர்களின் நிலை 

 

கொரோனா குறள்கள்


வள்ளுவரிடமிருந்து ஓலையொன்று வந்திருக்கிறது. அவர் தந்த அதிகாரம்:

கொரோனா களைதல்

1. கைகளைக் கழுவுக கசடற கழுவாக்கால்
கைகழுவிச் செல்லும் உலகு
2. தொடுமுறை தவிர்த்து வணக்கம் உரைப்போர்
விடுமுறை விடுவார் நோய்க்கு
3. நுண்ணுயிர்க் கிருமி பேராயுதம் போலே
மண்ணுயிர்க் கழிவைத் தரும்
4. பெற்றவர் பிறந்தவர் உற்றவர் ஆகினும்
சற்றவர் தூரம் நன்று
5. வீட்டிலும் தெருவிலும் ஊரிலும் தூய்மை
நாட்டிலும் நோய் நீக்கும்
6. தும்மலும் சளியும் வருகையில் வேண்டும்
நம்மிடம் கைக் குட்டை
7. காய்ச்சல் இருமல் மூச்சுத் திணறல்
நோய்த் தொற்று அறிகுறியாம்
8. வதந்தியும் பதற்றமும் நோயினும் விரைவில்
சுதந்திரம் பறித்து விடும்
9. மருத்துவர் செவிலியர் துப்புர வாளர்
திருத்தொழில் போற்றிடு வோம்
10. ஒன்றென யாவரும் உழைத்திட நோயை
வென்றிட லாம் வாரீர்

அசாமும் NRC-யும் – அருந்ததி ராய் எழுதிய கட்டுரையின் தமிழ் மொழிபெயர்ப்பு


இன்றைய சமூக சிந்தனையாளர்களில் தவிர்க்க முடியாதவர் அருந்ததி ராய். அவரது The God of Small Things புதினத்தில் நமது சமூகத்தில் நிலவும் சாதியியல் உள்ளிட்ட பல இயல்புகளையும் படம்பிடித்துக் காட்டியிருப்பார். காஷ்மீர் பற்றிய அவரது கருத்துகள் சர்ச்சைக்குரியவை; ஆனால் சிந்திக்கத் தக்கவை என்றே நினைக்கிறேன். கடந்த நவம்பர் 12, 2019 அன்று நியூ யார்க்கில் அவர் ஆற்றிய “இந்தியா: ஒரு முடிவின் நிமித்தங்கள்” (“India: Intimations of an Ending”) என்ற தலைப்பிலான உரை The Nation தளத்தில் இடம்பெற்றுள்ளது. இதில் NRC என்கிற தேசிய குடிமக்கள் பதிவேட்டின் வரலாறு மற்றும் விளைவு பற்றியும் விவரித்துள்ளார். பெரிய கட்டுரை. இதில் அசாம் பற்றிய பகுதியை மட்டும் என்னால் முடிந்த வரை மொழிபெயர்த்துள்ளேன். காஷ்மீருடன் ஒப்பிடுகையில் அசாம் பற்றிய நமது புரிதல் குறைவு என்றே உணர்கிறேன்.

தற்சமயம் பெரிதும் விவாதிக்கப்பட்டு வரும் NRC வெறும் இந்து-முஸ்லிம் தகராறு என்பது போல் சித்தரிக்கப்பட்டு வருகிறது. எதற்காக இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது என்பதைப் பற்றி நாம் அறிந்திடாமல் எந்தப் பக்கத்துக்கும் ஆதரவாகவோ எதிராகவோ வாதாடுவதில் பயனில்லை என்றே கருதுகிறேன். இதன் மூலம் அசாமின் வரலாற்றை ஓரளவுக்கு நான் அறிந்து கொண்டேன்.

இந்திய இறையாண்மையைக் காக்கக் கம்பு சுற்றிக் கொண்டு வருபவர்கள் இது மொழிபெயர்ப்பு என்பதை முதலில் அறிவதுடன் முழுவதையும் படித்துவிட்டு, முடிந்தால் மூலத்தையும் படித்துவிட்டு வருவது நலம்.

கட்டுரை இதோ:

அசாம் ஒரு எல்லைப்புற மாநிலம். அதற்கென்று தனித்துவமான வரலாறு உண்டு. அந்த வரலாறெங்கும் பல்வேறு தரப்பினரின் உரிமைகோரல்கள், மக்களின் இடப்பெயர்வுகள், போர்கள், படையெடுப்புகள், மாறிக்கொண்டே இருக்கும் எல்லைகள், பிரிட்டிஷ் காலனியாக்கம் என்று பல வடுக்கள். எழுபது ஆண்டுகள் தேர்தல் மக்களாட்சியாலும் இந்த வடுக்களைப் போக்க முடியவில்லை.

தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) என்பதன் தேவை அசாமின் இந்தத் தனித்துவமான வரலாற்றால் முக்கியத்துவம் பெறுகிறது. 1826-இல் ஆங்கிலேயர்களிடம் தோற்ற பர்மா (இப்போதைய மியான்மார்), அசாம் என்கிற பகுதியைப் பிரிட்டிஷாரிடம் தாரைவார்த்தது. அப்போது அசாம் என்பது அடர்ந்த காடுகளையும், குறைவான மக்கள்தொகையையும் கொண்டிருந்தது. போடோ, கச்சாரி, மிஷிங், லாலுங், அஹோமிய இந்துக்கள், அஹோமிய முஸ்லிம்கள் என்று நூற்றுக்கணக்கான இனக்குழுக்கள் இப்பகுதியில் வாழ்ந்து வந்தனர். ஒவ்வொரு குழுவினரும் தமக்கே உரிய மொழி அல்லது வட்டார வழக்கு, பண்பாடு ஆகியவற்றைக் கொண்டிருந்தனர். ஆதலால், ஒட்டும்மொத்த இந்தியாவைப் போலவே, பல்வேறு தரப்பினரும் வாழும் பகுதியாக இருந்து வந்தது அசாம். இந்த ஏற்பாட்டைச் சற்றே மாற்றினாலும்கூட வன்முறை வெடிக்கும் நிலை இருந்தது.  இந்நிலையில், 1837-இல் இத்தகைய வன்முறைக்கு வித்திடப்பட்டது. அசாமின் புதிய முதலாலிகளான ஆங்கிலேயர்கள், வங்காள மொழியை (Bengali) அப்பகுதியின் அலுவல் மொழியாக்கினார்கள். அதாவது, எல்லா நிர்வாக மற்றும் அரசுப் பதவிகளும் படித்த, வங்க மொழி பேசும், உயர்நிலை இந்துக்களுக்குச் சென்றன. 1870-இல் அசாமிய மொழிக்கும் அலுவல் மொழி அந்தஸ்து கொடுக்கப்பட்ட போதிலும், அசாமியர்களுக்கும் வங்காளிகளுக்கும் இடையேயான அதிகாரப் போட்டி இன்னும் கடுமையானதாகவே மாறியது. 150 ஆண்டுகள் கழிந்தும் இந்தப் பகை இன்றளவும் தொடர்கிறது.

19-ஆம் நூற்றாண்டின் மத்தியில், அசாமின் நிலவளமும் பருவநிலையும் தேயிலைச் சாகுபடிக்கு உகந்ததாக இருப்பதை ஆங்கிலேயர்கள் அறிந்தனர். அசாமிய பூர்வகுடிகளுக்கோ இந்தத் தேயிலைத் தோட்டங்களில் கொத்தடிமைகளாக வேலை செய்ய விருப்பமில்லை. எனவே, மத்திய இந்தியாவில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் தோட்டத் தொழிலாளிகளாக அசாமிற்குக் கொண்டுவரப்பட்டனர். இப்படி அழைத்துவரப்பட்ட மக்கள் மட்டும் இன்றைய அசாமின் மக்கள்தொகையில் 15 முதல் 20 விழுக்காடு உள்ளனர். வெட்கம் என்னவென்றால், இந்த மக்கள் உள்ளூர் மக்களால் தரக்குறைவாக நடத்தப்படுவதுதான். முதலாளிகள் மட்டும் மாறியிருக்கிறார்கள். இவர்களின் நிலை இன்னும் அதே அடிமை நிலைதான்.

1890-களில் தேயிலை வியாபாரம் வளர்ந்த நிலையில், கிழக்கு வங்காளத்தில் மேற்கொண்டு தேயிலை பயிரிட இடமில்லை. அந்தப் பகுதியில், பிரம்மபுத்திரா நதியால் வளமூட்டப்பட்ட, ஆற்றின் போக்கினால் மாறிக்கொண்டே இருக்கும் நிலப்பரப்பை உடைய சார்ஸ் (chars) என்ற தீவுக்கூட்டங்கள் ஆங்கிலேயர்களின் கண்களை உறுத்தின. இத்தீவுகளில் இருக்கும் மரங்களை வெட்டிக் காடுகளை விவசாய நிலங்களாக மாற்றி விட்டால், அதன்மூலம் பிரிட்டிஷ் அரசுக்கு இன்னும் அதிக வருவாய் கிடைக்கும் என்று தீர்மானித்தனர். அதன்பொருட்டு, இத்தகைய நிலப்பரப்பில் உழவுத்தொழில் செய்வதில் மிகுந்த திறமைபெற்ற வங்காள முஸ்லிம் உழவர்களை ஆங்கிலேயர்கள் அசாமிற்கு அழைத்துச் சென்றார்கள். ஆங்கிலேயர்களுக்கு வேண்டியதெல்லாம் லாபம். காடுகளாவது பூர்வகுடிகளாவது. அவர்களைப் பொறுத்தவரையில், அசாம் என்பது ‘யாருக்கும் உரிமையற்ற’ ஒரு பகுதி. அங்கு யார், என்ன வேண்டுமானாலும் செய்யலாம். நிலப்பரப்பும் அதில் வாழும் மக்களும் ஒரு பொருட்டே அல்ல. இவ்வாறு அழைத்துவரப்பட்டவர்களை வைத்துக் காடுகளை அழித்தும், சதுப்பு நிலங்களை விளைநிலங்களாக மாற்றியும், 1930 வாக்கில் அந்தப் பகுதியின் பொருளாதார, நிலவியல் மற்றும் மக்கள்தொகை அமைப்பைத் தலைகீழாக மாற்றிவிட்டனர்.

முதலில், புதிதாக வந்தவர்கள் வரவேற்கப்பட்ட போதிலும், காலப்போக்கில் இன, மத, மொழி வேறுபாடுகளால் பதற்றம் உருவானது. இந்தப் பதற்றம் 1941-இல் நடைபெற்ற மக்கள்தொகை கணக்கீட்டால் சற்று தணிந்தது. குடிபெயர்ந்தவர்களும், தாங்களும் அசாமியர்களே என்று நம்பிக்கை கொள்ள ஆரம்பித்தார்கள். வங்க மொழி பேசும் இசுலாமியர்கள் ‘மியா’ என்கிற பெயரில் ஒருங்கிணைக்கப்பட்டு, அவர்களின் பேச்சு வழக்கு அசாமிய எழுத்துருக்களைக் கொண்டு இன்றளவும் எழுதப்படுவதால், அசாமிய மொழியையே தாய்மொழியாகவும் அலுவல் மொழியாகவும் கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.

அசாமின் வரைபடம் மாறிக்கொண்டே இருந்தது. 1905-இல் வங்கப் பிரிவினையின்போது, அசாம் மாநிலத்தை இசுலாமியர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட கிழக்கு வங்காளத்துடன் (இன்றைய பங்களாதேஷ்) இணைத்தனர் ஆங்கிலேயர்கள். தாக்கா அதன் தலைநகர். ஒருகாலத்தில் இடம்பெயர்ந்து அசாமில் குடியேறியவர்கள் இப்போது பெரும்பான்மையினரில் ஒரு அங்கமானார்கள்! ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, வங்காளம் ஒன்றிணைக்கப்பட்டதும் அசாம் மீண்டும் தனி மாகாணம் ஆனது. வங்காளிகள் மீண்டும் குடிபெயர்ந்தோர் ஆயினர். 1947 பிரிவினைக்குப் பிறகு, கிழக்கு வங்காளம் பாகிஸ்தானுடன் இணைக்கப்பட்டது. ஆனால் குடிபெயர்ந்து வந்திருந்த இசுலாமியர்கள் அசாமிலேயே இருக்க விரும்பினார்கள். அதே வேளையில் கிழக்கு வங்கத்திலிருந்து அகதிகளாகப் பல்லாயிரக்கணக்கான இந்து மற்றும் முஸ்லிம் மக்கள் அசாமில் தஞ்சமடைந்தார்கள். பின்னர் 1971-இல் நடந்த போரின்போதும் மற்றொரு அகதிகள் அலை அசாம் நோக்கிப் படையெடுத்தது. பங்களாதேஷ் உருவானது.

இவ்வாறு, அசாம் என்கிற பகுதி பர்மாவாகவும், பின்பு கிழக்கு வங்காளமாகவும், கிழக்கு பாகிஸ்தானாகவும், பின்னர் மீண்டும் அசாமாகாவும் பல அவதாரங்கள் எடுத்தது. நாடுகள் மாறின. கொடிகள் மாறின. நாட்டுப்பண் மாறியது. நகரங்கள் வளர்ந்தன. காடுகள் அழிந்தன. ‘வளர்ச்சி’ ஏற்பட்டது. அதில் பழங்குடியினர் காணாமல் போயினர். மக்களுக்கிடையேயான வேற்றுமைகள் அதிகரித்துக்கொண்டே இருந்தன.

வங்கதேச விடுதலையில் இந்திய அரசு பெருமை கொள்கிறது. அமெரிக்க, சீன ஆதரவு கொண்டிருந்த பாகிஸ்தானை அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அச்சமின்றி எதிர்க்கொண்டு, வங்கதேசத்தில் இனப்படுகொலையைத் தடுத்து வெற்றி பெற்றார். ஆனால் அந்த வெற்றி, அசாமிற்கும் அதன் அகதிகளுக்கும் அண்டை மாநிலங்களுக்கும் நீதியைப் பெற்றுத் தருவதில் முழு வெற்றி அடையவில்லை.

இந்தச் சூழ்நிலைதான் தேசிய குடிமக்கள் பதிவேடு ஒன்றின் அவசியத்தை வலியுறுத்தியது. இதில் முரண்நகை என்னவெனில், ‘தேசிய’ என்ற பதம் இங்கு இந்தியாவைக் குறிப்பதை விட அசாம் மாநிலத்தையே குறிக்கிறது. இந்தப் பதிவேட்டைப் புதுப்பிக்கும் முதல் முயற்சியானது, அசாமிய தேசிய மாணவர் இயக்கத்தின் செயல்பாடுகளால் 1951-இல் நடைபெற்றது. இதே காலகட்டத்தில், தீவிர, ஆயுதம் ஏந்திய, பிரிவினைவாதப் போராட்டங்களும் உயிர் பெற்றன. தனி அசாம் தேசியவாதிகள் ‘வெளிநாட்டினர்’ அனைவரது பெயர்களும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படும் வரையில் தேர்தலைப் புறக்கணிக்க முடிவுசெய்தனர். “அறி, அழி, அகற்று” (Detect, Delete, Deport) என்பதே அவர்களின் முழக்கமானது. விரைவில் வன்முறை வெடித்தது. 1979-இல் அசாம் பற்றி எரிந்தது. துவக்கத்தில் வங்காளிகளுக்கு எதிராக நடைபெற்ற இந்த இயக்கம், பின்னர் இந்து-முஸ்லிம் பரிமாணத்தை அடைந்தது. இதன் விளைவாக, 1983-இல் 6 மணி நேரத்தில் 2000 வங்காள முஸ்லிம்கள் கொல்லப்பட்ட நெல்லீ படுகொலை நடந்தது.

1985-இல் கிளர்ச்சி செய்யும் மாணவர் அமைப்புத் தலைவர்கள் அரசுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். அந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும் வென்று ஆட்சியைப் பிடித்தனர். ஒப்பந்தத்தின் படி, 1971-ஆம் ஆண்டு மார்ச் 24  அதாவது பாக்கிஸ்தான் ராணுவம் தாக்கத் துவங்கிய நாள் – அதன் பிறகு அசாமிற்குள் வந்தவர்கள் எல்லோரும் வெளியேற்றப்படுவார்கள். அதாவது 1971-க்குப் பிறகு குடிபெயர்ந்த ‘வந்தேறிகள்’ வெளியேற்றப்படுவார்கள்.

இதனைத் தொடர்ந்து, ‘வந்தேறிகள்’ எல்லைக் காவல் படையாலும், ‘சந்தேகத்துக்குரிய வாக்காளர்கள்’ தேர்தல் அதிகாரிகளாலும் கண்டறியப்பட்டு அன்றைய இந்திரா காந்தியின் அரசின் Illegal Migrants Determination by Tribunal Act (IMDT Act) சட்டப்படி விசாரிக்கப்பட்டனர். விசாரணையில் விதிமீறல்களைத் தவிர்க்கும் பொருட்டு, இந்தச் சட்டமானது, ஒருவரைச் சட்டவிரோதமாகக் குடியேறியவர் என்று நிரூபிக்கும் பொறுப்பைக் குற்றம் சாட்டுபவர்களிடம் ஒப்படைத்தது. இவ்வாறு இதுவரை சுமார் 4 லட்சம் ‘சந்தேகத்துக்குரிய’ வாக்காளர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களில் ஆயிரத்துக்கும் மேலானவர்கள் தடுப்புக் காவல் மையங்களில் வைக்கப்படிருக்கிறார்கள் – எந்தவித அடிப்படை உரிமையும் இன்றி.

2005-ஆம் ஆண்டில், இந்த IMDT சட்டம் செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. “அசாம் மாநிலம், வங்கதேச மக்களின் சட்டவிரோத குடியேற்றத்தால் ‘வெளிப் பகையாலும், உட்பூசல்களாலும்’ பாதிக்கப்பட்டுள்ளது உண்மையே” என்ற கருத்தைப் பதிவு செய்தது நீதிமன்றம். நிரூபிக்கும் பொறுப்பு, குற்றம் சாட்டியவரிடமிருந்து குற்றம் சாட்டப்பட்டவரிடம் தள்ளிவிடப்பட்டது. இதனால், குடிமக்களில் ஒவ்வொருவரும் தத்தமது குடியுரிமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டனர். இதுவே இன்றைய NRC திட்டத்துக்கு அடித்தளமிட்டது. அனைத்து அசாமிய மாணவர் இயக்கத்தின் தலைவராக இருந்த சர்பானந்த சோனாவால் என்பவர்தான் இந்த வழக்கைத் தொடுத்தவர். இவர் இப்போது ப.ஜ.க.வில் இணைந்து மாநில முதலமைச்சரும் ஆகிவிட்டார்.

2013-இல் அசாம் பப்ளிக் வர்க்ஸ் என்கிற அரசு சாரா இயக்கம் “சட்டவிரோத குடியேறிகளின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும்” என்று கோரி உச்சநீதி மன்றத்தை நாடியது. இந்த வழக்கு நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வுக்கு மாற்றப்பட்டது. இந்த நீதிபதி ஒரு அசாமியர்.

2014-இல் உச்ச நீதிமன்றம் “ஒரு ஆண்டுக்குள்ளாக, தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) புதுப்பிக்கப்பட வேண்டும்” என்று உத்தரவிட்டது. இதன்மூலம் கண்டறியப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட சுமார் 50 லட்சம் ‘ஊடுருவிகளை’ என்ன செய்வது என்று யாருக்கும் தெரியவில்லை. அவர்களை மீண்டும் வங்கதேசத்துக்கு நாடுகடத்துவதைப் பற்றியும் எந்தத் தெளிவும் இல்லை. அத்தனை பேரையும் தடுப்பு முகாம்களில் வைப்பதா? எவ்வளவு காலத்துக்கு? அவர்கள் குடியுரிமை பறிக்கப்படுமா? யாருக்கும் தெரியாது.

தொலைதூரங்களில் வசிக்கும் லட்சக்கணக்கான கிராம மக்கள் தாங்கள் வழிவழியாக 1971-க்கு முன்பிருந்தே அசாமில் குடியிருப்பதற்கான ஆதாரங்களைச் சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயம். உச்ச நீதிமன்றம் இட்ட கெடு முடிவதற்குள் இதைச் செய்து முடிப்பது குதிரைக்கொம்பாக இருந்தது. கல்வியறிவற்ற, ஏழை கிராமவாசிகள் இந்தக் கொடிய நிர்வாகச் சிக்கலில் மாட்டிக்கொண்டனர்.

ஏற்கனவே சொன்னது போல், அசாமின் தனித்துவமான நில அமைப்பு பிரம்மபுத்திரா நதியின் போக்கின்படி மாறிக்கொண்டே இருப்பது. இப்போது வளமான தீவாக இருக்கும் நிலப்பரப்பு எந்த நேரத்திலும் நதியின் கோர தாண்டவத்தினால் மூழ்கிவிடக் கூடியது. அதற்குப் பிராயச்சித்தமாக, அதுவரை நீருக்கடியில் இருந்த வேறொரு இடம் புதிய தீவாகப் பரிணமிக்கும். இவ்வாறான ‘சார்’ எனப்படும் தீவுக்கூட்டத்தில் சுமார் 2500 தீவுகள் இருக்கின்றன அசாமில். இந்த இடங்களுக்கு நீங்கள் செல்ல வேண்டுமானால் நெரிசலான படகு சவாரி செய்துதான் போக வேண்டும். நிரந்தரமற்ற இந்த நிலப்பரப்பில் ‘வீடுகள்’ தற்காலிகக் கொட்டகைகளே. பட்டா, சிட்டா என்பதற்கெல்லாம் அவ்வளவாக அர்த்தமே இல்லை. பள்ளிக்கூடங்கள் இல்லை. மருத்துவமனைகளும் இல்லை.

சென்ற மாதம் இந்தப் பகுதிகளுக்கு நான் சென்றிருந்தேன். பிரம்மபுத்திராவின் நீரலைகளைப் போலவே வறுமையும் இங்கே விளையாடிக்கொண்டிருக்கிறது. நவீனத்துவத்தின் ஒரே அடையாளமாக இருப்பது அந்த ஊர் மக்களின் ‘இருப்பிடச் சான்றிதழ்களைப்’ பாதுகாப்பாக வைத்திருக்கப் பயன்படும் நெகிழிப் பைகளே. காலத்தின் ஓட்டத்தாலும் பருவநிலையின் பிரதாபத்தாலும் ஓரங்கள் சிதிலமடைந்தும் எழுத்துக்கள் அழியத் தொடங்கியும் இருக்கும் அந்தச் சான்றிதழ்கள்தான் இவர்களையும் இவர்களது பிள்ளைகளையும் தடுப்பு முகாம்களுக்குச் செல்வதிலிருந்து காப்பாற்றும் என்ற நம்பிக்கையால் அவற்றை உயிராய்ப் பாதுகாத்து வருகிறார்கள். இப்படிப் பல்லாயிரக்கணக்கான மக்களை ராணுவத்தைக் கொண்டு பயமுறுத்தாமல், சான்றிதழ் கேட்டே பயமுறுத்துகிறது அரசு. அதிலும் இந்த அப்பாவி மக்களிடம் “legacy document,” “link paper,” “certified copy,” “re-verification,” “reference case,” “D-voter,” “declared foreigner,” “voter list,” “refugee certificate” என்று ஆங்கிலத்திலேயே கேட்டுக் கேட்டு இப்போது இந்தச் சொற்கள் எல்லாம் இவர்கள் தாய்மொழிச் சொற்களாகவே மாறிவிட்டன. இதில் சோகம் நிறைந்த சொல் “genuine citizen” என்பதே.

ஒவ்வொரு கிராமத்திலும், மக்கள் எவ்வாறு தங்களுக்குத் திடீரென்று ஓர் இரவில் ‘நாளை காலையிலேயே 300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்’ என்ற ஆணை அனுப்பப்பட்டது என்று விவரித்தார்கள். பயந்து போன அவர்கள், அவசர அவசரமாக, தங்களிடம் இருக்கும் எல்லாச் சான்றிதழ்களையும் எடுத்துப் பத்திரப்படுத்திக் கொண்டு, இரவோடு இரவாகச் சிறு படகுகளில் புறப்பட்டுக் காட்டாற்றைக் கடந்து,  பேராசை மிக்க வாகன உரிமையாளர்களுக்குப் பணம் கொடுத்து, அபாயகரமான பயணத்தை மேற்கொண்டனர். இப்படி போனவர்களில் ஒரு குடும்பத்தினர் பயணம் செய்த வாகனம் சாலைப்பணி வாகனம் ஒன்றுடன் மோதியதில் அவர்கள் உடலெங்கும் தார் கொட்டிய அவலம் நிகழ்ந்தது. அவர்களை நான் மருத்துவமனையில் சந்தித்தேன். சட்டவிரோத குடியேறிகள் என்கிற கருப்புச்சாயம் அவர்கள் மீதிருந்து எப்போது அகலுமோ?

இத்தனை இடர்பாடுகளிலும், இந்த NRC புதுப்பித்தலை அசாமில் பலரும் வரவேற்கத்தான் செய்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம் உண்டு: அசாம் தேசியவாதிகளைப் பொறுத்தவரையில், இந்துக்களோ இசுலாமியர்களோ, அசாமில் குடிபுகுந்த வங்காளிகள் அனைவரும் வெளியேறினால் சரி. பூர்வகுடிகளுக்கோ, இத்தனை காலமாகத் தங்களுக்கு நடந்த இனத்துரோகத்துக்கும் வரலாற்றுப் பிழைகளால் தாங்கள் அடைந்துவந்த துயரங்களுக்கும் முடிவுகட்ட வேண்டும். அசாமில் தற்போது வசிக்கும் வங்காளிகளுக்கோ, அவர்கள் இந்துவோ இசுலாமியரோ, NRC-இல் தங்கள் பெயரும் இருக்க வேண்டும். தாங்களும் சட்டபூர்வமான குடிமக்களே என்று நிரூபிக்க இதுவே ஒரு நல்ல வாய்ப்பு. இந்து தேசியவாதிகளுக்கோ, லட்சக்கணக்கான இசுலாமியர்களின் பெயர்கள் இந்தப் பதிவேட்டிலிருந்து நீக்கப்பட வேண்டும். இப்படி ஒவ்வொருவருக்கும் இந்தப் பதிவேட்டை வரவேற்கத் தனித்தனி காரணங்கள் உள்ளன. கணக்கை முடிக்க வேண்டும். அவ்வளவுதான்.

ஒருவாறாக இறுதி பட்டியலும் ஆகஸ்ட் 31, 2019 அன்று வெளியானது. 19 லட்சம் மக்களின் பெயர்கள் அதில் இல்லை. இவர்களில் பெரும்பான்மையினர் பெண்களும் குழந்தைகளும். இந்தப் பெண்கள் மிகச்சிறு வயதில் திருமணம் செய்தவர்கள். தங்களது இன வழக்கப்படி, திருமணத்துக்குப் பிறகு பெயர் மாற்றம் செய்தவர்கள். ஆனால் இதற்கான “link documents” இவர்களிடம் இல்லை. எழுத்தறிவில்லாத பலரும் தங்களது பெயர்களில் இருந்த எழுத்துப்பிழைகளால்  பெயர் நீக்கப்பட்டவர்கள். எடுத்துக்காட்டாக, H-a-s-a-n என்பது H-a-s-s-a-n என்றோ Joynul என்ற பெயர் Zainul என்றோ இருந்துவிட்டால் அவ்வளவுதான். கதை முடிந்தது. இன்னொரு அவலம், சான்றிதழ்கள் எல்லாமே தந்தைவழி வந்ததாக இருக்க வேண்டும். தாயின் சான்றிதழ்கள் செல்லாது. கணவரை இழந்தவர்கள், பிரிந்து வாழ்பவர்கள், நிலம் இல்லாதவர்கள் எல்லோரும் வெளியே. இத்தகைய பெண்களுக்கும் ஏழைகளுக்கும் எதிரான ஓரவஞ்சனைதான் NRC-யின் கொடுமைகளிலேயே மிகப்பெரிய கொடுமை. ஏழைகளில் பெரும்பாலானோர் இசுலாமியர், தலித்துகள் மற்றும் பழங்குடியினர் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

பெயர் விடுபட்ட 19 லட்சம் பேரும் நீதி பெறும் பொருட்டு, ‘வெளிநாட்டினர் தீர்ப்பாயங்கள் (Foreigners Tribunal) அமைக்கப்பட்டு வருகின்றன. இதில் நியமிக்கப்படுபவர்கள் கையில்தான் இந்த 19 லட்சம் மக்களின் வாழ்வும் சாவும் இருக்கிறது. இதில் வழக்கு நடத்த வேண்டுமெனில், இம்மக்கள் தாமே செலவு செய்து வழக்கறிஞரைக் கொண்டு வாதாட வேண்டும். இருக்க வக்கற்றவர்கள்  வக்கீல் செலவுக்கு எங்கே போவார்கள்? பலர் தற்கொலை செய்துகொண்டார்கள்.

கோடிக்கணக்கில் செலவிட்டுத் திரட்டிய இந்தப் பட்டியல் வெளியாகியும் பலரும் அதிருப்தியில் இருக்கின்றனர். அதற்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம் உள்ளது. வங்காளிகளின் அதிருப்திக்குக் காரணம் இந்திய அரசியல் சட்டப்படி சகல உரிமை பெற்றவர்களாகத் தாங்கள் இருந்தும் இந்தப் பதிவேட்டில் தங்களது பெயர்கள் இல்லாமல் போனதுதான்; அசாமிய தேசியவாதிகளுக்கோ இன்னும் பல சட்டவிரோத குடியேறிகளின் பெயர்கள் இந்தப் பதிவேட்டில் நீடிக்கிறதே என்ற கவலை; இந்து தேசியவாதிகளுக்கோ வேறு கவலை – இந்த 19 லட்சம் பேரில் பாதிக்கும் மேலானவர்கள் இசுலாமியர்கள் அல்ல.

நீதிபதி கோகோய், NRC-இன் ஒருங்கிணைப்பாளர் ஒரு வாரத்துக்குள் அசாமை விட்டு வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டார். காரணம் எதுவும் குறிப்பிடவில்லை.

இப்போது புதிய NRC வேண்டும் என்ற கோரிக்கை துவங்கியுள்ளது.

இந்த மடத்தனத்தை எவ்வாறு புரிந்துகொள்வது? இதற்கான விடையைக் கவிதையில் தேடுகிறது ‘மியா’ கவிஞர்களின் குழுமம். மியா என்பது பல வட்டார மொழிகளின் தொகுப்பு மொழி. அம்மொழியில்  ‘தாய்’ என்கிற தலைப்பில் ரெஹ்னா சுல்தானா என்கிற கவிஞரின் வரிகள் அதிக கவனத்தை ஈர்த்துள்ளன.

தாயே, சலித்துப் போய்விட்டது

என்னை உனக்குத்

திரும்பத் திரும்ப அறிமுகம் செய்து கொள்வதில்

Ma, ami tumar kachchey aamar porisoi diti diti biakul oya dzai
Mother, I’m so tired, tired of introducing myself to you

காவல்துறையிடம் இதுபற்றி பல புகார்கள் சென்றன, அசாமிய சமூகத்தை இந்தக் கவிஞர்கள் அவமதிக்கிறார்கள் என்று. ரெஹ்னா சுல்தானா தலைமறைவாகி விட்டார்.

குவாண்டம் டார்வினிசம் (Quantum Darwinism) – பகுதி 1


இயற்கை விதிகளைக் கொண்டு இயற்பியலை

1. செவ்வியல் இயற்பியல் (Classical Physics)

2. குவைய இயற்பியல் (Quantum Physics)

என்று இரண்டாகப் பிரிக்கலாம். செவ்வியல் கோட்பாடுகள் எளிமையானவை (மேலோட்டமாக). நாம் தினசரி கண்கூடாகக் காணும் நிகழ்வுகளை விளக்கப் போதுமானவை. எடுத்துக்காட்டாக, நியூட்டன் தலையில் விழுந்ததாகச் சொல்லப்படும் ஆப்பிள், புவியின் ஈர்ப்பு விசையால்தான் விழுந்தது என்று நாம் அறிவோம். தோனியும் கிறிஸ் கெய்லும் என்னதான் முக்கி முக்கி அடித்தாலும் மேலே சென்ற பந்து திரும்ப வருவதற்குக் காரணமும் இந்த ஈர்ப்பு விசைதான். பந்து அடிக்கப்பட்ட விசை (Force), அதன் திசைவேகம் (Velocity), இவற்றால் அந்தப் பந்து பெற்ற உந்தம் (momentum), பேட்ஸ்மேனின் நிலையிலிருந்து பந்து பயணிக்கும் கோணம், உயரம், இவற்றை எல்லாம் வைத்து ஒருசில எளிய சமன்பாடுகளைப் பயன்படுத்தி அந்தப் பந்தின் பாதையை ஆராய்ந்து ஒரு பயணக் கட்டுரையே எழுதிவிடலாம். இதேபோல், வானவில்லின் நிறங்களும் அவற்றின் அலைநீலத்துக்கு ஏற்றபடி ஊதா முதல் சிவப்பு வரை VIBGYOR என்கிற வரிசையில் தொடர்ச்சியாகக் காட்சியளிக்கின்றன. இவை அனைத்திலும் ஒருவித ‘தொடர்ச்சி’ இருப்பதை நாம் கவனிக்கலாம்.

இப்போது குவாண்டம் இயற்பியலுக்கு வருவோம். இதில் எல்லா நிகழ்வுகளும் ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்கு மாறிடும் சின்னச் சின்ன ‘தாவல்’களாக இருக்கின்றன. இவற்றைக் குவாண்டம் தாவல்கள் (quantum leaps) என்கிறார்கள். நிலை 1, நிலை 2, நிலை 3…. இப்படித்தான் இந்தத் தாவல்கள் இருக்கின்றன. நிலை 1.3, நிலை 2.1 என்பன போன்ற நிலைகள் இதில் இல்லை. எடுத்துக்காட்டாக, ஒரு அணுவில் இருக்கும் எலெக்ட்ரான்கள் ஒரு ஆற்றல் மட்டத்தில் (energy level) இருந்து மற்றொரு ஆற்றல் மட்டத்திற்குத் தாவிச் செல்லுவதால் உமிழப்படும் ஒளியை ஒரு நிறமாலைமானியைக் (spectrometer) கொண்டு பார்த்தோமேயானால், அந்தந்த ஆற்றல் மட்டத்துக்கு ஏற்ப பல்வேறு நிறங்களினால் ஆன பட்டைகள் தோன்றும். இந்த ஒளிப்பட்டைகளுக்கு இடையே வெறும் இருண்ட பகுதிகளே இருக்கும். இது ஏனெனில், இந்த எலெக்ட்ரான்கள் குவைய இயற்பியல் விதிகளுக்கு உட்பட்டு ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்குத் தாவுகின்றன. இந்தத் தாவலில் ‘இடைப்பட்ட நிலை’ என்று ஒன்று கிடையாது. இதுதான் குவைய உலக நீதி!

சுருக்கமாகச் சொன்னால், செவ்வியல் இயற்பியல் ஒரு சாய்தளம். குவைய இயற்பியல் ஒரு படிக்கட்டு. சாய்தளத்தில் நம் வசதிக்கேற்ப நடந்தோ, சறுக்கியோ, உருண்டோ, தாவியோ போகலாம். படிக்கட்டில் அவரவர் தாவும் திறனுக்கேற்ப அடிக்கு ஒரு படியோ இரண்டு படிகளோ என்கிற ரீதியில் நம் பயணம் ‘படி’ என்கிற குவாண்டம் அளவுகோளுக்குக் கட்டுப்பட்டு நிகழ்கிறது.

படம் 1. செவ்வியல் vs. குவையவியல்

செவ்வியல் இயற்பியல் விளைவுகளைப் பெரும்பாலும் நாம் பேரியல் (macroscopic) நிகழ்வுகளாகப் பார்க்கிறோம். ஊஞ்சலாட்டம், ராக்கெட் ஏவுதல், மரத்தில் இருந்து கீழே விழும் பூக்கள், பழங்கள் மற்றும் இலைகள், நம்மை அறைபவரிடம் இன்னொரு கன்னத்தைக் காட்டுதல் அல்லது அவரது இரு கன்னங்களிலும் அறைதல், பும்ராவின் புயல்வேக யார்க்கர் – இவற்றையெல்லாம் செவ்வியல் விதிகளைக் கொண்டு விளக்கிவிடலாம்.

குவாண்டம் நாடகமோ விசித்திரமானது. நாம் வெறும் கண்களால் காணமுடியாத மிகச்சிறிய அணுக்களும் அவற்றின் உட்பொருள்களும் தான் அதன் முக்கியமான கதாபாத்திரங்கள். ஒரு அணுக்கருவைச் (nucleus) சுற்றிக் கொண்டிருக்கும் எலெக்ட்ரான் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் எங்கே இருக்கிறது என்பதையோ எவ்வளவு உந்தத்துடன் பயணிக்கிறது என்பதையோ துல்லியமாகச் சொல்ல முடியாது.

படம் 2-இல் ஒரு தனித்துகளின் அலைக்கோவையைக் (wave function) காண்கிறோம். இந்தத் துகளை நாம் ‘காணும்’ போது, துவக்கத்தில் ஒரு புள்ளியில் இருக்கும் அதன் நிலை காலம் செல்லச்செல்ல விரிந்து கொண்டே போகிறது.

Uncertainty_principle

படம் 2. ஒரு துகளின் அலைக்கோவை பரிணாம மாற்றம் அடைகிறது

இந்தத் துகளின் உந்தமும் குறிப்பிட்ட ஒரு மதிப்புடையதாக இல்லை. மாறாக, அந்த அலைக்கோவையின் ஒளிவட்டம் விரிந்துகொண்டே செல்வதால் படிப்படியாக மாறிக்கொண்டே இருக்கிறது. எனவே, நாம் எடுத்துக்கொண்ட இந்தத் துகளின் இருப்பிடத்தையும் (position) அதன் உந்தத்தையும் (momentum) ஒரே தருணத்தில் நம்மால் கணக்கிடவே முடியாது. வேண்டுமானால் ஒன்றை மட்டும் ஒரு நேரத்தில் கணக்கிடலாம். இருப்பிடத்தைச் சொல்லும் அதே கணத்தில் உந்தம் மாறியிருக்கும். இத்தகைய ஒரு மதிப்பீட்டு இயலாமையை ஹைசன்பெர்க் நிலையில்லாக் கோட்பாடு (Heisenberg’s Uncertainty Principle) என்கிறோம். கல்லூரி நாட்களில் இதனை வியந்து என் மதுரைக்கார நண்பனின் வழியில் சொல்ல வேண்டுமானால்,

“அஃகா, பாத்தாலே மாறிடும்ங்கறான்”.

அல்லது ‘கயிற்றரவு’ சிறுகதையில் புதுமைப்பித்தன் வியப்பதுபோல்,

ஒரு பொம்மலாட்டம்! பொம்மலாட்டம் என்று எப்படி நிச்சயமாகச் சொல்ல முடியும்? சூத்திரக் கயிறு இழுக்கிறதா அல்லது சூத்திரதாரன் உண்டா? நிச்சயமாக எப்படி இருக்கிறது அல்லது இல்லை என்று இரண்டில் ஒன்று சொல்லிவிட முடியும்?… வருகிற வாசல், போகிற திசை இரண்டுந்தான் தெரிகிறது…

என்று தத்துவார்த்தமாக இதனை ஆராயலாம். எப்படிப் பார்த்தாலும், குவைய உலகத்தில் ஒரே நேரத்தில் ஒன்றிற்கும் மேற்பட்ட குணாதிசயங்களை நம்மால் அளவிட முடியாது என்பதே உண்மை. இங்கே நாம் கணக்கிடும் எல்லாமே புள்ளியியல் அடிப்படையில் சராசரிகளே. அறுதியான ஒரு எண்ணைக் கொண்டு எதனையும் நாம் அளந்திட முடியாது. எடுத்துக்காட்டாக, ஒரு சிந்தனைச் சோதனை. பூனைகளை நேசிப்பவன் நான். இருப்பினும், இயற்பியலில் பிரபலமான சிந்தனைச் சோதனைகளில் Schrödinger’s cat என்கிற thought experiment தலையாய ஒன்று.

Schrodingers_cat.svg

படம் 3. ஒரு அறைக்குள் ஒரு குடுவையில் விசம் இருக்கிறது. ஒரு கதிரியக்கப் பொருளும் இருக்கிறது. அங்கே எப்படியோ ஒரு பூனையும் நுழைந்து விட்டது (இது பூனைகளை வெறுக்கும் யாரோ ஒரு இயற்பியலாளரின் வேலையாகத்தான் இருக்க வேண்டும்). இந்த அபாயமான அறையில் பொருத்தப்பட்டிருக்கும் கெய்கர் கதிர்வீச்சு அளவுமானியில் ஏதேனும் ஒரு அணுச்சிதறல் பதிவானால்கூட விசம் இருக்கும் குடுவை உடைந்துவிடும். பூனை பூவுலக வாழ்வை இழந்துவிடும்.

மேலோட்டமாகப் பார்த்தால் சிறுபிள்ளைத்தனமாக இருக்கும் இந்த ஆராய்ச்சி (நல்ல வேளை, இது சிந்தனை ஆராய்ச்சிதான். இல்லையெனில் எத்தனை பூனைகள் இறந்திருக்கும்!) இயற்பியலில் ஒரு மிக முக்கியமான கேள்வியை வைக்கிறது. சிறிது நேரம் கழித்து நாம் உள்ளே பார்த்தால் இரண்டில் ஒன்று நிகழ்ந்திருக்கும்.
1. பூனை இறந்திருக்கும்.
2. பூனை பிழைத்திருக்கும்.

அறிவியலில் ஒரே ஒருமுறை ஒரு ஆய்வைச் செய்துவிட்டு முடிவைச் சொல்லிவிட முடியாது. திரும்பத் திரும்பச் செய்துபார்த்து, சந்தேகமில்லாமல் நிரூபிக்க வேண்டும். இப்படி மீண்டும் மீண்டும் ஒரே சோதனையைச் செய்யும்போது சராசரியாக நூற்றுக்கு 50 தடவை பூனை உயிருடன் இருந்திருக்கும். 50 துரதிருஷ்டசாலி பூனைகள் இறந்துபோயிருக்கும். அப்படியானால் இந்த ஆய்வின் முடிவை நாம் எப்படி எடுத்துக்கொள்வது? ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், பூனை உயிர்வாழ்ந்து இருப்பது எவ்வளவு சாத்தியமோ, அதே அளவுக்கு அந்தப் பூனை இறந்து கிடப்பதும் சாத்தியமே. இப்படி இந்த இரண்டு நிலைகளுமே சரிசமமாக சாத்தியப்பட்டு ஒன்றின் மேல் மற்றொன்று ‘ஓவர்லேப்’ ஆகியிருப்பதால், இதனை ‘மேற்பொருந்தல்’ (superposition of states) என்கிறோம். இவ்வாறு, நாம் பார்க்கும் தருணத்தையும் புள்ளியியல் நிகழ்தகவையும் பொறுத்தே இரண்டு நிகழ்வுகளில் ஒன்றை நாம் பார்க்கிறோம். அதற்காக, மற்றொரு நிலை இல்லவே இல்லை என்று நம்மால் உறுதியாக நிரூபிக்க முடியாது. இது இயற்பியலின் இன்றியமையாத முரண்பாடு (paradox).

சரி! இந்த குவாண்டம் நிலை எப்போது, எப்படி செவ்வியல் பண்பை எட்டுகிறது? இந்த இரு உலகங்களுக்கும் இடையில் ஒரு மெல்லிய கோடு இருக்க வேண்டுமல்லவா? அதை எப்படி நாம் தெரிந்து கொள்வது?

இதற்கான விடைகளில் ஒன்றுதான் குவைய டார்வினிசம் (Quantum Darwinism) என்ற கருத்தியல்.

அதைப்பற்றி அடுத்த பகுதியில் காண்போம். அதுவரை பூனைகளை நேசிப்போம்.

2084: கால மயக்கம் – சிறுகதை


கதை எழுதுவது எளிதாகத் தோன்றினாலும் எழுத ஆரம்பித்த பிறகு தான் தெரியும் அதில் எத்தனை சிக்கல்கள் இருக்கின்றன என்று. புதுமைப்பித்தனின் ‘கடவுளும் கந்தசாமி பிள்ளையும்’ படிக்கும் போது “இவ்வளவு எளிதா!” என்று தோன்றும். ‘கயிற்றரவு’ அல்லது ‘கபாடபுரம்’ படிக்கும் போது “இதில் இத்தனை நுணுக்கங்கள் இருக்கின்றனவா” என்று தோன்றும்.

என் மனம் கவர்ந்த எழுத்துக்களில் ஜார்ஜ் ஆர்வெல் எழுதிய ‘1984’ மற்றும் ‘Animal Farm’ ஆகியன அடங்கும். அதே போல, H. G. Wells எழுதிய Time Machine என்ற அறிவியல் புனைவு கதையும் பிடிக்கும்.

இத்தகைய புலிகளைப் பார்த்து நானும் போட்டுக் கொண்ட சூடுதான் ‘2084: கால மயக்கம்’ என்ற பிறழுலக புனைவுச் சிறுகதை.

நண்பர்கள் பலரது மத, அரசியல் கருத்துகளுக்கு இது எதிரானதாக இருக்கலாம். இன்னும் சிலருக்கு ஆனந்தம் தருவதாகக் கூட இருக்கலாம். முற்றிலும் படிக்கவே லாயக்கற்றதாக இருக்காது என்று நம்புகிறேன்.

இப்போது Kindle eBook வடிவில் கிடைக்கிறது. 15 நிமிடங்களில் படித்து விடலாம். படித்தால் உங்கள் மதிப்பீடு (rating) மற்றும் கருத்துக்களையும் Kindle app மூலம் பகிரவும்.

அரைத்த மாவையே அரைப்பதாகத் தோன்றினாலும் கதை மாவுக்கடையில் அடி வாங்கி மாவுக்கட்டு போடும் அளவுக்கு இருக்காது என்று நினைக்கிறேன்.

பதிவிறக்க:

http://ta.wikipedia.org/wiki/தஞ்சைப்_பிரகதீசுவரர்_கோயில்#/media/File:Sadhaya_Vizha,_Thanjai_periya_kovil.jpg

தமிழ் குறுக்கெழுத்து 26 – பொன்னியின் செல்வன்


தமிழில் வரலாற்றுப் புதினங்கள் பல இருக்கலாம். அவற்றுள் ஒரு புதினமே வரலாறு படைத்திருக்கிறது என்றால் அது அமரர் கல்கி வடித்த பொன்னியின் செல்வன் மட்டுமே. விற்பனையில் ஆகட்டும், வாசகர் வரவேற்பில் ஆகட்டும், எழுத்து நடை, கதைக்களம், என்று எல்லாவற்றிலுமே பொன்னியின் செல்வன் தான் சூப்பர் ஸ்டார். 1950-களில் வெளிவந்த இந்த நெடுந்தொடர் இன்றும் (2019) பேசப்படுவதும் போற்றப்படுவதும் இதற்கு சாட்சி. கதைமாந்தர் ஒவ்வொருவரும் சாகா வரம் பெற்று விட்டனர். புதிர்கள் நிறைந்த பொன்னியின் செல்வனை வைத்து ஒரு குறுக்கெழுத்துப் புதிர் செய்தால் ‘நேயர்களுக்கு’ பிடிக்காமல் போகுமா என்ன?

ஏற்கனவே நான் அமைத்திருந்த ஒரு புதிரை இங்கே காணலாம்.

சென்ற முறையைவிட சற்று எளிதாகவே அமைத்திருக்கிறேன். இதுவரை பொன்னியின் செல்வன் படிக்காதவர்கள் ஆழ்வார்க்கடியான் போல நண்பர்களிடமும் கூகுளிடமும் ஒட்டுக்கேட்டு விடைகளைக் கண்டுபிடிக்கலாம். விடைகளைக் கண்டுபிடித்து விட்டு ஊமையரசி போல் இருந்து விடாமல் வந்தியத்தேவனிடம் ஒரு மின்னோலையை vijayshankar.twwi@gmail.com என்ற முகவரிக்கு அல்லது இந்தப் புதிரின் கீழே பின்னூட்டத்தில் கொடுத்தனுப்புங்கள்.

உள் நிரப்பும் கட்டங்களைச் சோதனை முறையில் சேர்த்திருக்கிறேன். சரியான எழுத்தை உள்ளிட்டால் கட்டம் பச்சை நிறத்திற்கு மாறும். தவறான உள்ளீடு கட்டத்தைச் சிவப்பாக்கி விடும். உள்ளிட்ட எழுத்தை அழிப்பதற்கு கட்டத்தில் இரண்டு முறை சொடுக்கி பின்பு delete செய்யவும்.

‘இதெல்லாம் ஆகற வேலையா?’ என்பவர்கள் கீழே வழக்கம் போன்ற கட்டங்களைப் பார்த்தோ பிரதி எடுத்தோ விடைகள் அளிக்கலாம்.

இடமிருந்து வலம்

1. திருமேனியில் 64 போர்க் காயங்கள் கொண்டவர் (8)

3. வந்தியத்தேவன் மனதில் சோழ இளவரசியை அமரச் செய் (4)

5. அருள்மொழியும் தியாகமும், ஆழ்வார்க்கடியானும் ஆபத்தும், வந்தியத்தேவனும் விளையாட்டுத் துணிச்சலும், குந்தவையும் வானதியும், அதேபோல் வானதியும் _________ (6)

7. வந்தியத்தேவனின் முகத்துக்குப் பூங்குழலியின் உவமை; ரவிதாசனின் ரகசிய ஒலி (3)

8. தனது பாட்டனாரின் தந்தை நினைவாகக் குந்தவை நடத்தி வந்த மருத்துவமனை (6)

9. ஒரு வகையில் செம்பியன் மாதேவி அருள்மொழிவர்மனுக்கு இந்த உறவுமுறை (3)

12. வந்தியத்தேவனுக்கு கிடைத்த ‘மாய மோதிரத்தில்’ இருந்த முத்திரை (2, 5)

17. சக்கரவர்த்தியைச் சந்தித்த வந்தியத்தேவன் அவருக்கும் ராஜ்ஜியத்துக்கும் ஆபத்து என்பதை இவ்வாறு கத்தினான் (4)

18. பிணி நீக்குபவர் மைந்தன் (5)

20. பழுவேட்டரையரின் இயற்பெயர் (4, 4)

21. சிவனைப் பற்றி திருமலை அவதூறாகப் பேசியதால் இவர் அடைந்த கோபம் தணிய ஆங்கில வெண்ணெய் தான் சரி (4)

22. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயிலில் இங்கே தான் எல்லாம் தொடங்குகிறது, ஆடித் திருநாளன்று (2, 4, 2)

xwrd_PS2

மேலிருந்து கீழ்

2.  மேலே புலி, அடியில் கிரீடம். கிரீடத்துக்கு அடியில் ஒரு பலிபீடம், கழுத்து அறுபட்ட ஒரு தலை, ஒரு பெரிய பலிக் கத்தி. இவற்றை செந்நிறத்திலான தங்கள் கொடியில் கொண்டவர்கள் இவர்கள் (8)

3. குந்தவையின் ஆஸ்தான சோதிடர் இருந்த ஊர் (4)

4. கடும் காவலையும் மீறி ஆதித்தனின் ஓலையை அரசரிடம் தர வந்தியத்தேவன் துணிந்து நுழைந்த இடம் (3, 3)

6. வந்தியத்தேவன் வாளை விழுங்கி, பின்னர் அவனை அசடுவழியச் செய்த போலி விலங்கு (3)

10. திகிலையும் வியப்பையும் தந்து வந்தியத்தேவன்-கந்தமாறன் நட்பை அதல பாதாளத்துக்குத் தள்ளிய இடம் (4)

11. அருள்மொழிவர்மன் இலங்கையில் ஏற்ற மாறுவேடம் (6)

13. என்னதான் மாமிசம் உண்ணாதவனாக இருந்தாலும் ஆழ்வார்க்கடியானுக்கு இது மட்டும் பிடிப்பதில்லை (3)

14. கொள்ளிடம் அருகே அரச மரத்தடியில் மீன் சமிக்ஜை செய்து காட்டியவன் (7)

15. ஆழ்வார்க்கடியான் என்கிற திருமலை மீது நம்பிக்கை வைத்து (3)

16. காலாமுகர்களின் முன்னோர்கள் (7)

19. நோயாளியாகவும் ஒருவித கைதியாகவும் படுத்திருக்கும் அழகிய ____ சோழர் (4)

கீழிருந்து மேல்

7. திருமலையப்பன் இவருக்கு அடியான் (4)

துன்பத்துப் பால் – வினையே ஆடவர்க்கு உயிரே – குறுந்தொகை பாடல்


 

தொழில் நிமித்தமாய் வெளியூர் சென்ற தலைவனிடமிருந்து ஒரு செய்தியும் வரவில்லை. போனவன் தன்னை விட்டு அப்படியே போய் விட்டானா என்று தலைவிக்கு மிகுந்த சந்தேகம். அவனை நினைத்து நினைத்து சோகக் கடலில் தத்தளிக்கிறாள்.

கணக்குப் புத்தகத்தில் மூழ்கியிருந்த தோழி,

“என்னடி, எதையோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறாய்? உடம்பு சரியில்லையா?” என்று கேட்டாள்.

“உடம்பு சரியாய் இருந்தால் என்ன, இல்லாவிட்டால் தான் என்ன?”

“ஓ! அவனை நினைத்து ஏங்குகிறாயா? வேலைக்காகத் தானே போயிருக்கிறான்? வந்து விடுவானடி, கவலைப் படாதே!”

“அது தான் கவலையே. போகும் போது ‘வேலை தான் முக்கியம்’ என்று சொல்லி விட்டுப் போனான். அப்போது எனக்குப் புரியவில்லை, அவனுக்கு நான் அவ்வளவு முக்கியம் இல்லை என்று.”

“வேலை முக்கியம் என்றான். சரி தான். அதன் பின், ‘உன் உயிர் நான் தான்’ என்றும் சொன்னான் அல்லவா?”

“ஏனடி அதை எல்லாம் இப்போது ஞாபகப் படுத்துகிறாய்? ‘இல்லின் கண் உறையும் மகளிர்க்கு, ஆடவர் உயிர்’ என்று கவிதை வேறு எழுதித் தந்தான். அவன் விவரமாகத் தான் இருந்திருக்கிறான். என் உயிராக இருந்தவன் போய் விட்டான். இங்கே நடைபிணமாக நான் இருக்கிறேன். எல்லாம் என் விதி.”

“இப்போது தான் distributive law of sets படித்துக் கொண்டிருந்தேன். பங்கீட்டு விதி என்று வைத்துக் கொள்ளேன். இந்த விதி உன் விதிக்கு ரொம்பவே பொருந்துகிறது.”

“நீ வேறு கண்ட விதியை எல்லாம் சொல்லி என்னைக் குழப்பாதே. ஏற்கனவே நான் போட்டிருந்த எல்லாக் கணக்கும் பொய்யாகி விட்டது.”

“அப்படி எல்லாம் சொல்லாதே. ஒரு சின்னப் படம் வரைந்து உனக்கு இதைப் பற்றி சொல்ல முயற்சிக்கிறேன்” என்று கூறி, தன் டேப்லெட்டில் மளமளவென்று ஏதோ வரைந்து விட்டு, எழுதியபடியே பேசத் தொடங்கினாள்.

“இந்தப் படத்தைப் பார். இதில் நீ தான் A. தலைவன் B. அவன் செய்யப் போயிருக்கும் வேலை C என்று வைத்துக் கொள்வோம். சமன்பாட்டின் இடது பக்கத்தில் பார்த்தால் A ஆகிய நீ தனித்து நிற்கிறாய். தலைவன் வேலையில் மூழ்கியிருக்கிறான். ஆனால், வலது பக்கத்தில் பார்! நீயும் அவனும் ஒன்றாக இருக்கிறீர்கள்.”

vinaye

“போடி! என்னைச் சமாதானப் படுத்த ஏதேதோ சொல்லுகிறாய். இது நீயே கண்டுபிடித்த கணக்கு போலும்!”

“இல்லையடி, உண்மையிலேயே இது ஒரு கணித விதி தான். வினையே ஆடவர்க்கு உயிர் என்றானல்லவா? அதைத்தான் இங்கே (B ⋂ C) என்று எழுதி இருக்கிறன். தனிமையிலும் அவனை நினைத்து இருக்கிறாய் அல்லவா, எனவே A ஆகிய நீ தனித்திருந்தாலும் நினைவால் அவனுடன் இருப்பதால் A U (B ⋂ C) என்று எழுதினேன். புரிந்ததா?”

“ம்”

“இப்போது வலதுபுறம் பார். A என்ற காதலி நீயும் B என்ற காதலன் அவனும் (A U B) என்று சேர்ந்து இருக்கிறீர்கள். அதற்குக் காரணம் ‘மகளிர்க்கு ஆடவர் உயிர்’ என்றான் அல்லவா. அப்படியானால் உன் உயிரான அவன், உடலாகிய நீ இல்லாமல் ஏது? வினை தான் அவன் உயிர் என்றாலும் அது வாழ உடல் நீ வேண்டும் அல்லவா? அதனால் நிச்சயம் அவன் வருவான். அதைத்தான் இங்கே (A U C) என்று எழுதி இருக்கிறேன். என்ன, கணக்கு சரியாக வருகிறதா?”

“என்னவோ சொல்கிறாய். கணக்கு சரியாக வருகிறதோ இல்லையோ, உன் பேச்சில் நம்பிக்கை வரத்தான் செய்கிறது. அவன் வருவான் என்று நம்புவோமாக!”

“பேசிக் கொண்டே நீ என்னடி வரைந்து வைத்திருக்கிறாய்? வென் சித்திரம் போல் தெரிகிறது! விசித்திரமானவள் தான் நீ!”

distrib1

distrib2

“நீ சொல்லிக் கொண்டிருந்த பங்கீட்டு விதியை வென் சித்திரமாக வரைந்திருக்கிறேன். கணக்கு சரியாகத் தான் வருகிறது”.

“அது சரி, காதலன் உன்னைச் சந்திக்க வருவதில் எவ்வளவு நேரம் தாமதமாக வருகிறான் என்பதை தினமும் Excel-இல் அட்டவணை போட்டவள் தானே நீ! வாழ்க உன் காதல்!

 

பாடல் இதோ:

வினையே யாடவர்க் குயிரே வாணுதல் 

மனையுறை மகளிர்க் காடவ ருயிரென 

நமக்குரைத் தோருந் தாமே 

அழாஅ றோழி யழுங்குவர் செலவே.

குறுந்தொகை 135.
பாடியவர்: பாலைபாடிய பெருங்கடுங்கோ.

விளக்கம்: வினையே – தொழில் தான்.

ஆடவர்க்கு உயிர் – ஆண்மக்களுக்கு உயிர் ஆகும்.

வாணுதல் – ஒளிபொருந்திய நெற்றியையுடைய

மனையுறை மகளிர்க்கு – இல்லின் கண் உறையும் மகளிர்க்கு

ஆடவர் உயிர் என – கணவன்மாரே உயிர் ஆவரென்று

நமக்கு உரைத்தோரும் தாமே – நமக்கு எடுத்துக் கூறியவரும் அத்தலைவரே

அழாஅல் – அழாதே

செலவு அழுங்குவர் – திரும்பி வருவார்.

இன்னும் சில இனிய குறுந்தொகை பாடல்கள் இங்கே.

இலக்யா குறுக்கெழுத்து 25


 

விடைகளைப் பின்னூட்டத்திலோ அல்லது vijayshankar.twwi@gmail.com என்ற மின் அஞ்சலுக்கோ அனுப்பவும்.

இலக்யா குறுக்கெழுத்து 24-க்கான விடைகள் இங்கே.

உள் நிரப்பும் கட்டங்களைச் சோதனை முறையில் சேர்த்திருக்கிறேன். சரியான எழுத்தை உள்ளிட்டால் கட்டம் பச்சை நிறத்திற்கு மாறும். தவறான உள்ளீடு கட்டத்தைச் சிவப்பாக்கி விடும். இதில் எண்களைச் சேர்க்கும் அளவுக்கு நான் இன்னும் தேறாததால் குறிப்பு உள்ள கட்டங்களைச் சொடுக்கினால் குறிப்புகள் தெரியும்படி செய்துள்ளேன். உள்ளிட்ட எழுத்தை அழிப்பதற்கு கட்டத்தில் இரண்டு முறை சொடுக்கி பின்பு delete செய்யவும்.

‘இதெல்லாம் ஆகற வேலையா?’ என்பவர்கள் கீழே வழக்கம் போன்ற கட்டங்களைப் பார்த்தோ பிரதி எடுத்தோ விடைகள் அளிக்கலாம். புதிய கட்டம் பற்றி உங்கள் கருத்துகளைத் தெரியப்படுத்தவும்.

இடமிருந்து வலம்

1. காததை கல் கொண்டு மாற்றி அன்பு காவியமாய்ச் சொல் (3, 2)

6. வைட்டமின்-ஏ அளித்தால் அந்திப் பொழுதின் இருள் நீங்கலாம் (5)

7. நீங்களும் நானும் பார்க்க (2,2)

11. சிறுவயதுப் பட்டாம்பூச்சி உதறித் தள்ளிய போர்வை (4)

13. கோவில் வம்சத்திற்குள் இப்படி ஒரு மரம் (4)

16. தற்பெருமையால் கெட்டுப் போனாலும் பாதுகாப்புடன் வீசுகிறது காற்று (5)

17. ஒரு வீசம் கைமா கிளறிடு அன்னையே! (1, 4)

 

வலமிருந்து இடம்

10. பழங்காலத் தமிழ் முகம் (4)

மேலிருந்து கீழ்

2. கலங்கலாகத் தனது சாயம் ஆன போதும் பண்புடன் பழகும் குணம் (5)

3. ஒன்பது மாதம் ஓடிப் போனது தெரியாத கணவர் தம் மாதை இப்படியா குழப்புவது? (1, 3)

4. குடும்ப நலம் பற்றிய அரசாங்கத்தின் கோணம் (5)

5. நாட்டுப் பண் புதிய இசையில் ஒலித்தாலும் அதற்குள் மூழ்கிடும் நாட்டுப் பற்றாளரின் தன்மை (3)

7. முழுநீளக் கதை சொல்லும் கருநீலப் பழம் (3)

8. தண்ணீர் குடத்தில் கல் போடுவதற்கா கம்மென்று இருந்தது இந்தக் காக்கை? (3)

9. முதலுதவிக்கா தேடி அலையாதே என்கிறாய்? (5)

12. பணம் பல பெட்டிகளில் இருப்பது உறுதி (2,3)

14. வலம் வருகையில் நெருக்கமானவர் (3, 1)

15. மடை மாற்றிய மேதகு முதல்வருக்கு இரண்டு கொம்பு மட்டும் தான் இல்லை (3)

 

xwrd25

மூவேந்தரும் ஓரிடத்தில் – புறநானூற்றுப் புதையல் 2


 

சேர, சோழ, பாண்டியர் என்ற மூன்று தமிழ் வேந்தர்களும் தமிழர் வரலாற்றில் ஒரு சில ஆட்சிக் காலங்களைத் தவிர எப்போதும் தமக்குள் போரிட்டு வந்தனர் என்பதை நாம் அறிவோம்.

இரண்டாம் கரிகாலன் (கி.மு. 60 முதல் கி.மு. 10 வரை), ராஜராஜ சோழன் (கி.பி. 985 முதல் கி.பி. 1014 வரை) ஆகியோர் நிர்மாணித்த சோழப் பேரரசு மற்ற இரு நாட்டையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தது. அதேபோல், கி.பி. 1280-இல் சடாவர்மன் சுந்தரபாண்டியன் அமைத்த பாண்டியப் பேரரசில் சோழ நாடு அடங்கி விட்டது. மற்ற காலங்களில் எல்லாம் மூன்று வேந்தர்களும் அவரவரது எல்லைகளுக்கு உள்ளேயே ஆண்டு வந்தனர். அவ்வப்போது மற்ற நாடுகளின் மீது படையெடுத்து, தமக்கு இருந்த படை வலிமையைப் பொறுத்து மற்ற இருவரிடம் வெற்றியோ தோல்வியோ அடைந்து வந்தனர்.

இவ்வாறு, எதிரும் புதிருமாகவே இருந்து வந்த இந்த மூன்று மன்னர்களின் வரலாற்றில் ஒரு அரிய நிகழ்வைப் பதிவு செய்துள்ளார் ஒளவையார்.

Flags_of_Three_Crowned_Kings

சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும், சேரமான் மாரி வெண்கோவும், பாண்டியன் கானப்பேர் தந்த உக்கிரப் பெருவழுதியும் ஒரே இடத்தில் நட்புடன் கூடி இருக்கின்றனர். ‘இராசசூயம் வேட்ட’ சோழ மன்னன் பெருநற்கிள்ளி ஒரு யாகம் நடத்துகிறான். அந்த நிகழ்ச்சியில், விருந்தாளிகளாகச் சேரனும் பாண்டியனும் வந்திருக்கின்றனர். இதைக் கண்ட ஒளவையார், பெரும் மகிழ்ச்சி அடைந்து மூன்று மன்னர்களையும் வாழ்த்திப் பாடுகிறார். இந்த நிகழ்வு புறநானூற்றின் 367-ஆவது பாடலாக அமைந்துள்ளது.

நாகத் தன்ன பாகார் மண்டிலம்
தமவே யாயினும் தம்மொடு செல்லா;

வெற்றோர் ஆயினும் நோற்றோர்க்கு ஒழியும்;

ஏற்ற பார்ப்பார்க்கு ஈர்ங்கை நிறையப்
பூவும் பொன்னும் புனல்படச் சொரிந்து,

பாசிழை மகளிர் பொலங்கலத்து ஏந்திய
நாரறி தேறல் மாந்தி, மகிழ் சிறந்து,

இரவலர்க்கு அருங்கலம் அருகாது வீசி,
வாழ்தல் வேண்டும், இவண் வரைந்த வைகல்;

வாழச் செய்த நல்வினை அல்லது,
ஆழுங் காலைப் புணைபிறிது இல்லை;

ஒன்று புரிந்து அடங்கிய இருபிறப் பாளர்
முத்தீப் புரையக் காண்தக இருந்த
கொற்ற வெண்குடக் கொடித்தேர் வேந்திர்;

யான் அறி அளவையோ இவ்வே; வானத்து
வயங்கித் தோன்றும் மீனினும், இம்மெனப்
பரந்து இயங்கும் மாமழை உறையினும்,
உயர்ந்து மேந்தோன்றிப் பொலிக, நும் நாளே!

- புறநானூறு 367
ஒளவையார்
 

விளக்கம்:

“தேவலோகம் போன்ற நாடாக இருந்தாலும், வேந்தன் இறக்கும் போது அவனுடன் அந்த நாடு செல்வதில்லை. அடுத்து வரும் வலியவன் கைக்கு மாறிவிடும்.

இரந்து வரும் அந்தணர்க்குக் கைநிறைய பூவும் பொன்னும் வழங்கி, பொன் கலத்தில் நாரால் வடிகட்டிய கள்ளினை அருந்தி, ஏழைகளுக்கு இல்லையென்று சொல்லாமல் உதவி செய்து, மகிழ்ச்சியுடனும் சிறப்புடனும் நீங்கள் வாழ்க. உங்கள் இறப்பிற்குப் பிறகு வேறு எதுவும் உங்களுடன் வரப் போவதில்லை. நீங்கள் செய்த நல்ல செயல்களால் மட்டுமே நீங்கள் மக்கள் மனங்களில் வாழ்வீர்கள்.

இரு பிறப்பு (தாய்வழி பிறப்பு, பின்னர் ஞானப் பிறப்பு ஆகியன) கொண்ட அந்தணர் வளர்க்கும் மூன்று வகை வேள்வித் தீயைப் போல (ஆகவனீயம், தட்சிணாக்கினி, காருகபத்தியம் என்பவை) நீங்கள் மூன்று பேரும் காட்சி அளிக்கின்றீர்கள்! வெண்கொற்றக் குடையையும் கொடி கட்டிய தேர்களையும் உடைய வேந்தர்களே, நான் அறிந்த வாழ்க்கை நெறி இதுவே. வானில் இருக்கும் விண்மீன்களையும் பூமியில் பொழியும் மாமழையையும் விட உங்களது வாழ்நாட்கள் சிறந்து விளங்குவன ஆகுக!”

காலம்: இந்த நிகழ்ச்சி கரிகால் வளவனின் காலத்திற்குப் பிறகும் சிலப்பதிகாரம் எழுதப்பட்ட காலத்திற்கு முன்பாகவும் நிகழ்ந்திருக்க வேண்டும். அதாவது கி.மு. முதல் நூற்றாண்டுக்கும் கி.பி. இரண்டாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில்.

பாடலில் நாம் அறியும் மற்றொரு செய்தி: சங்க காலத்திலேயே தமிழ் மன்னர்கள் தமது ஆட்சி நிலைக்க வேள்விகள் செய்துள்ளனர். அதற்கு கைம்மாறாக, அந்தணர்க்கு நிலமும் பொன்னும் வழங்கி இருக்கின்றனர். இன்றைக்கும் (2019-இல்) கூட தலைமைச் செயலகத்தில் நள்ளிரவு யாகங்கள் நடப்பதாகக் கேள்வி. நடக்கட்டும்.

 

இலக்யா குறுக்கெழுத்து 24


 

விடைகளைப் பின்னூட்டத்திலோ அல்லது vijayshankar.twwi@gmail.com என்ற மின் அஞ்சலுக்கோ அனுப்பவும்.

இலக்யா குறுக்கெழுத்து 23-க்கான விடைகள் இங்கே.

உள் நிரப்பும் கட்டங்களைச் சோதனை முறையில் சேர்த்திருக்கிறேன். சரியான எழுத்தை உள்ளிட்டால் கட்டம் பச்சை நிறத்திற்கு மாறும். தவறான உள்ளீடு கட்டத்தைச் சிவப்பாக்கி விடும். இதில் எண்களைச் சேர்க்கும் அளவுக்கு நான் இன்னும் தேறாததால் குறிப்பு உள்ள கட்டங்களைச் சொடுக்கினால் குறிப்புகள் தெரியும்படி செய்துள்ளேன். உள்ளிட்ட எழுத்தை அழிப்பதற்கு கட்டத்தில் இரண்டு முறை சொடுக்கி பின்பு delete செய்யவும்.

 

‘இதெல்லாம் ஆகற வேலையா?’ என்பவர்கள் கீழே வழக்கம் போன்ற கட்டங்களைப் பார்த்தோ பிரதி எடுத்தோ விடைகள் அளிக்கலாம். புதிய கட்டம் பற்றி உங்கள் கருத்துகளைத் தெரியப்படுத்தவும்.

இடமிருந்து வலம்

2. தைரியநாதசாமியிடம் போய் அரைகுறையாக மல்லுக்கட்டுவது தான் உங்கள் துணிவா? (3)

5. திரு. மதிமாறன் பாதி வரைக்கும் முழு பெண்ணாகத் தான் இருந்தார் (4)

6. நண்பா! சனம் பிழைக்க நீர் பாய்ச்சினால் தானே பயிர் விளையும்! (4)

7. வந்தியத்தேவனின் ஆருயிர் நண்பன் _____ மாறன் (3)

8. நெடுநல்வாடையை நாள்காட்டியில் தேடினால் நீண்ட காலம் தேவைப்படும் (4)

10. மரமாய் நின்று பரவு (2,2)

11. பல்குத்த உதவும் சிறுபொருள் (4)

13. போகி தொடங்கி, பொங்கலும் முடிந்தாயிற்று. காலம் எவ்வளவு விரைவாகச் செல்கிறது! (4)

17. _____ முத்தல்லவோ! (4)

18. சுற்றுச்சூழல் சீர் கெட உள்ளுக்குள் இன்னுமா சடையணிந்து வர வேண்டும்? (4)

20. பணமே, அவர் செய்த உதவிக்குக் கைம்மாறாக நீயே இங்கிருந்து அங்கு செல் (1,2)

வலமிருந்து இடம்

16. ராமனின் தோழன் (3)

மேலிருந்து கீழ்

1. காய்ந்த மீனுக்காக உட்பொருள் முதற்கொண்டு ஏங்கு (4)

2. ஒரு தெருவில் ஓடும் மதுபானம் பல தெருக்களை உருவாக்கி விட்டது (4)

3. பெரும் பாவம் செய்தவளே குழப்பத்தில் பாதமாகி விட்டாள் (4)

4. குற்றால அருவிகளில் எல்லாவற்றினும் உயரத்தில் உள்ள அருவி (4)

8. சுருங்கச் சொன்னால் நீண்டது (3)

9. குருதிக் குழாய் (3)

12. புகை பிடிப்பதற்குள் என்ன ஒரு மென்சிரிப்பு (4)

13. போ, குமாரு… கடைசி எழுத்து தப்பு! (4)

கீழிருந்து மேல்

14. சின்னஞ்சிறு கிளிப்பிள்ளை (3)

15. வரவு செலவில் ஒரு பகுதி முகம் துடைக்கவே போய் விடுகிறது (3)

19. உள்ளம் உருகாத் திருவாளர்கள் மத்தியில் நேரம் வரும் வரை பொறுமையுடன் இரு (4)

21. நடமாடும் திறனை அடைய நிகழ வேண்டியது (2,2)

இலக்யா குறுக்கெழுத்து 24

பனை நுங்கு சீசனும் படை வெல்லும் சோழனும் – புறநானூற்றுப் புதையல் 1


ஒரு நாட்டின் படை எவ்வளவு பெரியது என்பதை எப்படி சொல்வது? வெகுமக்களிடம் கேட்டால், ‘கடல் போல் பெரியது’ என்று சொல்வார்கள். நாட்டுப் பற்றாளர்களிடம் கேட்டால், எதிரி நாட்டின் படையுடன் ஒப்பிட்டு (உயர்த்திச்) சொல்வார்கள். எதையும் நோண்டிப் படித்துப் பார்ப்பவர்களிடம் கேட்டால், இத்தனை ஆயிரம் படைவீரர்கள், இத்தனை பிரிவுகள், இத்தனை ஆயுதங்கள் என்று பட்டியல் இட்டுப் புள்ளிவிவரம் சொல்வார்கள்.

அதுவே ஒரு நல்ல கவிஞரிடம் கேட்டால்?

சுவைமிக்க உவமை, உவமானங்களுடன் இனிய பாடல் தருவார்கள். அப்படி ஒரு பாடல் தான் புறநானூற்றில் 255-ஆவது பாடல். நலங்கிள்ளி என்ற சோழ மன்னனின் (இரண்டாம் கரிகாலன் என்ற மாமன்னனின் புதல்வன்) படைபலத்தை இந்தப் பாடலில் விவரிக்கிறார் ஆலத்தூர்கிழார் என்ற அரும்புலவர்.

தலையோர் நுங்கின் றீஞ்சேறு மிசைய
இடையோர் பழத்தின் பைங்கனி மாந்தக்
கடையோர், விடுவாய்ப் பிசிரொடு சுடுகிழங்கு நுகர
நிலமலர் வையத்து வலமுறை வளைஇ

விளக்கம்:

தலையோர் நுங்கின் றீஞ்சேறு மிசைய – முன் செல்வோர் நுங்கின் இனிய சுவையை நுகர,
இடையோர் பழத்தின் பைங்கனி மாந்தக் – இடையில் சென்றோர் பனம்பழத்தினை நுகர,
கடையோர், விடுவாய்ப் பிசிரொடு சுடுகிழங்கு நுகர – இறுதியில் செல்வோர், வாய் அகன்ற வாயை உடைய பிசிறுதான் சுடப்பட்ட கிழங்கினை நுகர,
நிலமலர் வையத்து வலமுறை வளைஇ – இப்படி ஒழுங்குடன் வலம்வந்து சூழ்ந்து.

சோழனின் காலாட்படை மூன்று பிரிவுகள் கொண்டதாம்.
1. தூசிப்படை
2. இடையணிப்படை
3. இறுதியணிப்படை

இதில் முதலாவதான தூசிப்படை வீரர்கள் பனை நுங்கை உண்பார்கள். இடையணிப்படை வீரர்கள், பனம்பழம் சாப்பிடுவார்கள். இறுதியணிப் படை வீரர்களோ சுடப்பட்ட பனங்கிழங்கைத் தின்பார்கள்.

purananuru1

ஏன் இந்தப் பாகுபாடு?

அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. முதல் படை போர்க்களம் புகும் பொழுது பனை நுங்கு காய்ந்திருக்கும் காலம். பெரும்பாலும் இவர்களே நுங்குடன் சேர்த்து எதிரிப் படையையும் தீர்த்து விடுவார்கள். வேலை முடியவில்லை என்றால் தான் இரண்டாம் படை அனுப்பப்படும். இந்த இடைப்பட்ட காலத்தில் நுங்கு பழமாகி இருக்கும். எனவே, இரண்டாம் படை வீரர்கள் பனம்பழத்தை நுகர்ந்தார்கள். இரண்டாம் படையும் தவறினால், இறுதியணிப்படை நுழையும். இதற்குள்ளாக, பனம்பழம் பனங்கிழங்காக மாறியிருக்கும். வெற்றியுடன் சேர்த்து இந்தக் கிழங்குகளை மூன்றாம் படையினர் சுவைத்தார்கள்.

படைகளை ஒரே நேரத்தில் ஓரிடத்தில் குவித்து வீணாக்காமல் தேவைக்கேற்ப பயன்படுத்திய நலங்கிள்ளி போர்த்திறத்திலும் மதிநுட்பத்திலும் ‘கில்லி’ என்பதை இதை விடச் சிறப்பாக யாராலும் சொல்ல முடியாது அல்லவா?

இவ்வாறு, பனை மரத்தின் காலச் சுழற்சியைக் கொண்டே நலங்கிள்ளியின் படை மிகுதியையும் (scale), அது ஒழுங்குடன் கடந்து செல்லும் கால நீட்சியையும் அழகாகப் பாடியுள்ளார் ஆலத்தூர்கிழார். சங்க நூல்களில் இத்தகைய அருமையான புதையல்கள் இன்னும் எத்தனை எத்தனை உள்ளனவோ!

இலக்யா குறுக்கெழுத்து 23


விடைகளைப் பின்னூட்டத்திலோ அல்லது vijayshankar.twwi@gmail.com என்ற மின் அஞ்சலுக்கோ அனுப்பவும்.

புதிர் 22-க்கான விடைகள் இங்கே.

இடமிருந்து வலம்

5. விறகு விற்கும் கடைக்குள் எட்டிப் பார்த்தால் வேறென்ன கிடைக்கும்? (3)
6. இதயத்தின் தசைகளுக்கு மசை போட்டால் உயரத்தை அடையலாம் (4)
7. சிம்புவின் நடனத்தில் லயித்த கண்ணகி காலணி (4)
8. விசை செலுத்து, வேறுருவம் கொள். இதுவே கட்டளை! (6)
9. குதிரை திக்குமுக்காடுகிறதே என்று கவலை கொள் (4)
10. பசுமை தாங்கிடும் காடுகளுக்கு உள்ளே இருக்கிறாள் நம் மாசுக்களின் நஞ்சைக் குறைக்கும் பொறுப்பாளி (5)

xwrd23

 

மேலிருந்து கீழ்

1. அதுக்குள் கமகம வாசனை வர உள்ளமது பெயரளவில் இசுலாத்தை நாடுகிறது (4)
2. சோ ராமசாமிக்கு ஆங்கிலப் பசை தந்த வாட்டம் (3)
3. இறுதியாக ஒருமுறை சிதறிக் கிடக்கும் கடை சிறிது தூர இடைவெளியில் ஒழுங்குபெற ஒருவனை அனுப்புகிறேன் (3,2)
4. பச்சோந்திகளின் சிறப்பம்சம் (3,3,3)
8. பயமறியாத் திராவிடர் உடைமை (4)
9. அந்த பகீர் தகவலைக் கொஞ்சம் நாசூக்காக வலைதள நண்பர்களுக்குச் சொல் (3)

முகிலினி


வரலாற்று நிகழ்வுகளை எல்லா தரப்பின் நியாயங்களையும் அறிந்து, நிகழ்வுகளின் களம், காலம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு, ‘செத்துப் போனவர்களின் ஜாதகமாக’ இல்லாமல் உயிர்ப்புடன் அவற்றைப் படிப்பவர்களுக்குச் சொல்ல வேண்டும். புனைவு கதை எழுதுவதும் அதே அளவு கடினமானதே. கதைக் களத்தில் ஃபிலிம் காட்டிவிட்டு கதையிலோ கதைமாந்தரின் வடிவமைப்பிலோ கோட்டை விட்டுவிடக் கூடாது. அப்படியானால் வரலாற்றுப் புனைவுக் கதை எழுதுவது என்பது எவ்வளவு கடினம் என்று சொல்ல வேண்டியதே இல்லை.

அப்படிப்பட்ட வித்தையை ‘முகிலினி’ என்கிற தனது வரலாற்றுப் புதினத்தில் சிறப்பாகச் செய்து காட்டியிருக்கிறார் திரு. இரா. முருகவேள் அவர்கள். சுமார் அறுபது ஆண்டு கால வரலாற்றை, கனவுகள், எதிர்பார்ப்புகள், ஏமாற்றங்கள், உரிமை மீறல்கள், உரிமை மீட்புப் போராட்டங்கள், பொருளாதார வளர்ச்சிக்கும் அடிப்படை வாழ்வாதாரத்துக்குமான மோதல்கள், வணிகப் பேராசைகள், சாதி வேற்றுமைகள், மாற்றங்கள், மாற்றங்களுக்கான தேவைகள், வெற்றிகள், தோல்விகள் என பல பரிமாணங்களையும் சுவாரசியம் குறையாமல் சொல்ல அவர் எவ்வளவு கள ஆய்வும் கடும் உழைப்பும் செய்திருக்க வேண்டும் என்று நினைக்கும் போதே மலைப்பாக இருக்கிறது.

சவுத் இந்தியா விஸ்கோஸ் கம்பெனியின் வரலாற்றை மையமாக வைத்து எழுதப் பட்டது எனினும், இரண்டாம் உலகப் போர், இந்திய சுதந்திரம், பவானிசாகர் அணை கட்டப்பட்ட வரலாறு, புரூக்பாண்ட் கம்பெனி இருந்த இடம் புரூக்ஃபீல்டு பிளாசாவாக மாறியுள்ளது வரையிலான கோவையின் வளர்ச்சி என்று பல தளங்களில் நம்மைப் பயணிக்க வைக்கிறார்.

இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையால் மில்கள் இங்கிருக்க, பருத்தி எல்லாம் அங்கிருக்க, இரு நாடுகளும் ஒரே நாளில் பெரும் பொருளாதார தேக்கம் அடைந்து விட்ட பின்னணியில், பருத்தி இல்லாமலே செயற்கை இழையில் இருந்து ரேயான் (ray – சூரிய ஒளியைப் போன்ற பிரகாசம் உடைய; on – cotton போலவே ஆடைகளாக மாற்றக் கூடியது) ஆடைகளைத் தயாரிக்கும் திட்டத்தை கோவையைச் சேர்ந்த கஸ்தூரிசாமி நாயுடு செயல் படுத்துகிறார். பவானி சாகர் அணையே 70 லட்சம் ரூபாய் செலவில் கட்டி முடிக்கப் பட்ட நிலையில் 3 கோடி ரூபாய் செலவில் விஸ்கோஸ் ஆலை கட்டப் பட்டது என்றால் அதன் அளவையும் பிரம்மாண்டத்தையும் நாம் உணரலாம்.

இத்தாலியில் இருந்து மரக்கூழால் செய்யப்பட்ட அட்டைகளை வாங்கி, காஸ்டிக் சோடாவில், கார்பன் டை சல்பைடு, கந்தக அமிலம் போன்ற வேதிப்பொருட்களைப் பயன்படுத்தி விஸ்கோஸ் என்ற கூழாக மாற்றி அதிலிருந்து ரேயான் இழை தயாரிப்பதே திட்டம். பெரும்பாலான மக்கள் ஒரு படி அரிசி வாங்கவும் கதியற்றவர்களாய் இருந்த அன்றைய சூழலில் வேலைவாய்ப்பும் பொருளாதார வளர்ச்சியும் தலையாய தேவைகளாக இருந்தன. எனவே, சுற்றுச்சூழல் பற்றி எல்லாம் அன்றைக்கு அறிவோ அக்கறையோ பெரிதாக இருந்திருக்க வாய்ப்பு இல்லை. ஆற்றிலிருந்து எளிதில் நீரை எடுக்கவும், ஆலையின் கழிவு நீரை ஆற்றில் விடவும் ஏற்ற வகையில் பவானி ஆற்றுக்கு அருகே சிறுமுகையில் விஸ்கோஸ் ஆலை அமைக்கப் பட்டது.

ஆயிரக்கணக்கான மக்கள் வேலை வாய்ப்பு பெற்றனர். அதுவும் நல்ல சம்பளத்தில். எல்லாம் நன்றாக போய்க் கொண்டிருந்த பொது, இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் முடிவில் அரசு கருவூலம் காலியாகி விட்டிருந்தது. இறக்குமதிகளைக் குறைக்கும் பொருட்டு விஸ்கோஸ் ஆலை நிர்வாகத்தை இந்தியாவிலேயே தனக்கான மூலப் பொருட்களைத் தயாரித்துக் கொள்ள அனுமதி அளித்தது மத்திய அரசு. இதற்காக நீலகிரியில் 40,000 ஏக்கர் யூகலிப்டஸ் மரக்காடுகளில் இருந்து மரங்கள் அடிமாட்டு விலைக்குத் தாரைவார்க்கப் பட்டன. 200 சதவீதம் லாபம் ஈட்டியது விஸ்கோஸ் கம்பெனி. இதற்கிடையில், கம்பெனி பங்குகள் கைமாறி, நிர்வாகம் வடநாட்டவர்கள் வசம் செல்கிறது. உற்பத்தியை அசுர வேகத்தில் அதிகரிக்க ஆற்றையே நாசம் செய்து விடுகிறார்கள்.

சுற்றுச் சூழலுக்காக மக்கள் போராடுகின்றனர். பவானி ஆறு மீட்கப் பட்டதா? அதற்கான போராட்டங்கள் எப்படி இருந்தன? அவற்றின் தாக்கம் என்ன? இந்தக் கேள்விகளுக்கு விடை சொல்லும் அதே நேரத்தில் இன்று காணாமல் போய் விட்ட நொய்யல் ஆற்றின் வரலாற்றையும் நாம் தெரிந்து கொள்ள முடிகிறது.

பவானி என்பது வடமொழி பெயர். முகில்களிலிருந்து பாய்ந்தோடி வருபவள் இவள். முகில்களைப் போன்றவள். இவள் முகிலினி என்று ராஜுவின் வாயிலாகப் பெயர் சூட்டுகிறார் முருகவேள். தனது கதைமாந்தரை அவர்களின் சிறு/இளம் வயது காலத்தில் அவன்/அவள் என்று குறிப்பிட்டுவிட்டு, அவர்கள் முதுமை அடைந்ததும் அவர் என்று குறிப்பிடும் உத்தி நன்றாக உள்ளது.

தி.மு.க.வின் வளர்ச்சியும், கம்யூனிசத்தின் தொய்வும் அலசப் பட்டுள்ளன. “நம்மாளு ஒண்ணு லண்டனுக்கு போய் உலகத்துல இருக்கற எல்லாத்தையும் படிச்சவனா இருக்கான். இல்லாட்டி எழுதப்படிக்கவே தெரியாத தற்குறியா இருக்கான். ரெண்டுக்கும் நடுவுல இருக்கற பள்ளிகூடம், காலேஜ் பசங்க எல்லாத்தையும் அண்ணாத்தொர ஆளுங்க வளச்சுட்டாங்க” என்ற உரையாடலின் மூலம் இதற்கான காரணத்தை விளங்க வைக்கிறார் ஆசிரியர். அதே போல காந்தியவாதிகள் காங்கிரஸ் காட்சியைக் கோட்டை விட்டதையும் குறிப்பிடுகிறார்.

இந்தி எதிர்ப்பு போராட்டமும் பஞ்சாலைத் தொழிலாளர் போராட்டங்களும் தத்ரூபமாக விவரிக்கப்பட்டுள்ளன.

சாதிய அடிப்படையிலான ஏற்றத் தாழ்வுகள், நீதிமன்ற வழக்குகளில் சட்ட நடைமுறைகள், வாதாடும் நுணுக்கங்கள், சூழல் அறிவியல் தகவல்கள், வனத்துறை vs. பழங்குடியினர் உறவுகள், முதலாளித்துவ கொள்கைகளை, தொழிலாளர் சங்க செயல்பாடுகள், இன்றும் தொடரும் நவீன கொத்தடிமைத்தனம் என்று பல துறைகளைப் பற்றிய செய்திகளை முகிலினி மூலமாகத் தெரிந்து கொள்ள முடிகிறது.

எளிய எழுத்து நடை படிக்கும் சுமையை வெகுவாகக் குறைத்து விடுகிறது (அதுவும் ஆமை வேகத்தில் படிக்கும் எனக்கே). எடுத்துக் காட்டாக, விஸ்கோஸ் ஆலை பயன்படுத்திய வேதியியல் முறைகளையும் பொருட்களையும் விவரிக்கும் போது அலெக்சாண்டர் டூமாஸ் கதைகளில் வருவது போல் எல்லா வேதிமப் பொருட்களின் தன்மைகள், பயன்படுத்தப் பட்ட அளவுகள் என்று எல்லாவற்றையும் சொல்லாமல் கதைக்குத் தேவையானவற்றை மட்டும் விவரிக்கிறார். சட்டத் துறை, இயற்கை வேளாண்மை பற்றிய காட்சிகளிலும் அவ்வாறே எல்லோருக்கும் புரியும் படியாக எழுதியிருக்கிறார்.

நம்மாழ்வார் மற்றும் ஜக்கி வாசுதேவ் பற்றிய குறிப்புகளையும் தந்திருக்கிறார் (‘அசாதாரணமான ஞானக்கிறுக்கு ஒளிவீசும்’ கண்கள் கொண்ட இரண்டாமவர் ஆஸ்மான் சுவாமிகள் என்ற கதாபாத்திரத்தில் கலாய்க்கப் படுவது ரசிக்க வைக்கிறது).

சமூக நீதி, சூழல் பாதுகாப்பு போன்றவற்றை பிரச்சார மொழியில் சொல்லாமல் திருநாவுக்கரசு – கௌதம் இடையயேயான ‘உரையாடல் மற்றும் stuff’ கொண்டு சொன்னது அருமை.

இவ்வளவு பெரிய இந்தியாவில் மாடி வீட்டுத் தோட்டம் போட்டு காய்கறி உற்பத்தி செய்ய வேண்டிய தேவை என்ன என்ற கேள்வி நியாயமானதாகவே தோன்றுகிறது.

நீலகிரியில் பிறந்து வளர்ந்து, கோவையில் படித்து நான் சுற்றித் திரிந்த காடுகளையும் சாலைகளையும் மையமாகக் கொண்டதாலோ என்னவோ என்னால் எளிதில் இந்த நாவலுடன் தொடர்பு படுத்திக் கொள்ள முடிந்தது. இல்லை என்றாலும், அறிவியல்/மொழி/வரலாறு/சட்டம் என்று நீங்கள் என்ன படித்திருந்தாலும், சூழலியல், மொழியியல், வரலாறு, சமூக நீதி, இயற்கை வேளாண்மை என்று எதில் ஆர்வம் இருந்தாலும், உங்களுக்கும் இந்த நாவல் மிகவும் பிடிக்கும் என்று நம்புகிறேன்.

குறிப்பு: இந்த நூல் kindle வடிவிலும் கிடைக்கிறது.

துன்பத்துப் பால் – இன்னுமொரு இனிய குறுந்தொகை பாடல்


தமிழ் மக்கள் தங்கள் வாழ்வில் நிகழ்ந்த பல விதமான அனுபவங்களையும் உணர்வுகளையும் கதையாகவும், கவிதையாகவும் நாடகங்களாகவும் பலவாறு பதிவு செயதுள்ளனர்.

“இது என்ன பெரிய அதிசயமா? எல்லா மொழிக்காரனும் தான் இதை எல்லாம் செய்யறான். இங்கிலீஷ்காரன் எழுதாததா?” என்பதே இதற்குப் பலரது பதிலாக இருக்கும்.

ஆனால் ஒன்றை நாம் மறந்து விடுகிறோம். எல்லோரும் தான் எழுதினார்கள். நம்மை விடச் சிலர் நன்றாக எழுதினார்கள். சிலர் நன்றாக அவற்றைச் சேமித்தும் பரப்பியும் உலகப் புகழ் பெறச் செய்தார்கள். மறுப்பதற்கு இல்லை. ஆனால் அவர்கள் யாரும் நம் மக்களைப் போல உணர்வுகளை இடம், காலம், சூழல் போன்ற தரவுகளைக் கொண்டு துல்லியமாக வரையறை செய்யவில்லை.

எடுத்துக்காட்டாக, ஆங்கில இலக்கியத்தைப் பெரும்பாலும் Romance, Nature, History போன்ற ஒருசில பிரிவுகளில் அடக்கி விடலாம். கொஞ்சம் நோண்டிப் பார்த்தால் செய்யுள் (verse), விளக்கிக் கூறுதல் (narrative), நையாண்டி/வஞ்சப்புகழ்ச்சி (satirical), இரங்கற்பா (elegy), நாடகத் தன்மை (dramatic) என்பன போன்ற பிரிவுகளில் போட்டு அமுக்கி விடுவார்கள்.

இப்போது தமிழுக்கு வருவோம். முதலில் அகம், புறம் என்ற பிரிவுகள். கண்ணதாசன் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால் பகலெல்லாம் புறம், இரவெல்லாம் அகம்.

போரில் எதிரியைப் போட்டுத் தள்ளியது, போட்டுத் தள்ளியவரின் பெருமை போற்றி ஃப்ளெக்ஸ் போர்டு வைப்பது, ஏழைகளுக்கு உதவியது, முல்லைக்கு காரும் மயிலுக்கு ஜமுக்காளமும் தந்தது (முல்லையும் மயிலும் பெண்களாக இல்லாத பட்சத்தில்) இவை எல்லாம் புறம்.

பக்கத்து ஊர் பெண்ணைப் பார்த்துப் பல் இளித்தது, தூது அனுப்பியது/சென்றது, காதலன் & காதலி இடையேயான ஊடல், கூடல், பிரிதல் (break-up), பிரிவாற்றாமல் இருத்தல், இது போன்ற ‘லவ் மேட்டர்’ எல்லாம் அகம்.

இந்த அகப்பொருளில் யாருடைய காதலைப் பற்றி வேண்டுமானாலும் பாடலாம். ஆனால் அவர்களின் பெயரோ முகவரியோ மற்ற தனிப்பட்ட விவரங்களோ சொல்லக் கூடாது. தனி நபர் அந்தரங்கம் (Privacy) மிக முக்கியம். தினத்தந்தியில் வருவது போல் ‘அம்பிகா நகரில் வசிப்பவர் மாரிமுத்து (வயது 52). இவரது மகன் குமார் (வயது 26). இவர் தனது பக்கத்துக்கு வீட்டில் வசித்து வந்த மாணிக்கம் (54) என்பவரது மகள் செல்வியை (வயது 23) காதலித்து வந்ததார். இருவரும் அரசு கலைக்கல்லூரியில் படித்து வந்தனர் (தனியார் கல்லூரி என்றால் மட்டும் பெயர் போடாமல் அகப்பொருள் காப்பார்கள்). இவர்கள் அடிக்கடி வெளியூர் சென்று உல்லாசமாக இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இவர்களின் பெற்றோருக்கு இந்த விசயம் தெரிந்த போது பாரதியார் நகரில் வசித்து வரும் பெண்ணின் தாய்மாமன் சுரேஷ் (43)….” என்கிற ரீதியில் எழுதக் கூடாது. இது அகமாகவும் இல்லாமல் புறமாகவும் இல்லாமல் அசிங்கமாகவே பார்க்கப்படும்.

அவ்வளவு ஏன், ‘நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே’ என்று கூறிய நக்கீரரே எழுதிய நெடுநல்வாடை என்ற நூல் பெரும்பாலும் அகம் பற்றியே பேசுவது. ஆனால் ஒரே ஒரு இடத்தில் மட்டும் வேம்பு என்ற அடையாளம் பாண்டிய மன்னனைக் குறித்ததால் இந்த முழு நூலும் புறப்பொருள் நூல் அலமாரியில் வைக்கப் பட்டுவிட்டது. எனவே, பாடப்படுபவர்களின் அடையாளம் தெரியாதபடி கண்ணியமாக அவர்களது privacy-ஐ மதிப்பதே அகம். காதலன் தலைவன்; காதலி தலைவி. அவ்வளவு தான். மற்ற கதாபாத்திரங்கள் பெரும்பாலும் செவிலி மற்றும் தோழி. பாங்கன் (தோழன்) சில நேரத்தில் வருவதுண்டு. கிளுகிளுப்பூட்ட பரத்தை (விலைமகள்) கதாபாத்திரமும் உண்டு.

இது தவிர, ஊட்டி போன்ற மலைப்பகுதிகளில் குளிர்காலக் காதல்கள் (குறிஞ்சி), அடர்ந்த காடுகளில் அமைந்திருக்கும் ரிசார்ட் காதல்கள் (முல்லை), பண்ணை வீட்டுக் காதல்கள் (மருதம்), கடற்கரைக் காதல்கள் (நெய்தல்), இவை எல்லாம் ‘அத்துக்’ கொண்டால் “ஊட்டிக்கு தனியா தான் போக வேணும் போல” என்கிற விரக்தியில் மலைக்கும் காட்டுக்கு இடையே பாழாகிப் புலம்பும் காதல் (பாலை) என்று 5 வகையான திணைகள், அவற்றுக்கு உரிய கருப்பொருட்கள் என்று பல உட்பிரிவுகள் இருக்கின்றன.

இப்போதைக்கு, மலைப்பகுதியில் வசிக்கும் ஒரு பெண் பசலை நோயால் தான் அடைந்து விட்ட மாற்றங்களைச் சொல்லி “எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்” என்று விளக்கும் ஒரு குறிஞ்சித் திணையில் அமைந்த பாடலைப் பார்ப்போம். அது என்ன பசலை? கேன்சரை விடக் கொடிய நோயா என்று கேட்பவர்கள் இங்கே ஒரு எட்டு போய் பார்த்து விட்டு வரவும்.

மாசறக் கழீஇய யானை போலப்
பெரும்பெய லுழந்த விரும்பிணர்த் துறுகல்
பைத லொருதலைச் சேக்கு நாடன்
நோய்தந் தனனே தோழி
பசலை யார்ந்தன குவளையங் கண்ணே.

குறுந்தொகை பாடல் 13
எழுதியவர்: கபிலர்

இந்தப் பாடலுக்கு எனக்குப் புரிந்த வரை விளக்கம்:
மாசறக் கழீஇய யானை போல – தன் மீது படிந்திருந்த தூசு முழுவதும் போகும்படி சுத்தமாகக் கழுவப்பட்ட யானையைப் போல
பெரும்பெய லுழந்த விரும்பிணர்த் துறுகல் – துறுகள் என்பது வட்ட வடிவிலான ஒரு கல். பெருமழையில் கழுவப்பட்ட வட்ட வடிவிலான ஒரு பாறையானது
பைத லொருதலைச் சேக்கு நாடன் – பசுமை நிறைந்த ஒரு பகுதியில் இருக்கும் மலை நாட்டைச் சேர்ந்த காதலன்
நோய்தந் தனனே தோழி – (பசலை என்ற) நோய் ஒன்றைத் தந்து விட்டான், என் தோழியே!
பசலை யார்ந்தன குவளையங் கண்ணே – பசலை நிறத்தை அடைந்து விட்டன அழகிய குவளை மலர்களை போல இருந்த என் கண்கள்

kuvalai

குவளை © SanctuaryX [CC BY-SA 4.0 (https://creativecommons.org/licenses/by-sa/4.0)%5D

காத்திருப்பு

அதாவது, சுத்தமாகக் கழுவிய யானைப் போல மழை நீரால் நன்கு கழுவப்பட்ட பாறை ஒன்று அமைந்திருக்கும் மலை நாட்டைச் சேர்ந்த என் காதலன் எங்கோ போய் விட்டான். அவனின் நினைவுகளால் என் தோற்றமும் பொலிவும் மாறிவிட்டது. பசலை என்ற இந்தக் கொடிய நோயால், முன்னர் அழகிய குவளை மலர்களை போன்று இருந்த என் கண்கள் இப்போது பசலை நிறம் பெற்று விட்டன.

ஐந்தே வரிகளில் யானை – பாறை, குவளை – கண்கள், நோய் – பிரிவு என்ற உவமைகளும் அவர்கள் வாழ்த நிலப்பரப்பு குறித்த தகவல்களும், உணர்வுகளால் மனித உடலில் ஏற்படும் மாற்றங்களின் தன்மையையும் இலக்கணம் மாறாமல், அக இலக்கிய நெறிக்கு உட்பட்டு உணர்வுகளை வெளிப்படுத்த இனிய தமிழில் எழுதப் பட்ட இந்தக் குறுந்தொகை பாடல் காதலியின் நிலையை நம் கண்முன் நிறுத்துகிறது அல்லவா?

இலக்யா குறுக்கெழுத்து 22


விடைகளைப் பின்னூட்டத்திலோ அல்லது vijayshankar.twwi@gmail.com என்ற மின் அஞ்சலுக்கோ அனுப்பவும்.

புதிர் 21-க்கான விடைகள் இங்கே.

இடமிருந்து வலம்

1. மருதுவின் பிணி நீக்கியவர் (6)
4. நாட்டின் வருவாயில் நாட்டம் கொண்டு தேவையானதை எடுத்து வைத்துக் கொள் (3)
5. சுதந்திரம் பெறப் போராடியதில் தம் திசு போன பின்னும் கைதி தசை கொண்டு சாமர்த்தியமாக காட்டிய சமிக்ஞை (4, 2)
8. ஒளி வீசி இரு (3)
11. மேதகு மோகனன் மேனன்களோடு ஓடு நீக்குதல் முறையோ? (3)
14. சலசலப்புக்கு அஞ்சாத பனங்காட்டு நரிக்கு இரட்டைக் கிளவியைப் பார்த்ததும் ஒரே குதூகலம் தான் (6)
15. இதை இத்தோடு விட்டுத் தொலைக்க (1, 3)
16. மற்போர் வீரன் (4)

xwrd22

மேலிருந்து கீழ்

1. மத்திய தளத்தில் ஒருவித பறையிசை (5)
2. காத்திருப்போர் முகவரி சைதாப்பேட்டையில் (3)
3. சிறு மின்சாதனப் பெட்டிக்குள் சின்னப் பெண் ஒருத்தி (3)
6. திடமாகு – உடலில் பெரும் ஆற்றல் வந்திட, மாங்கு மாங்கு என்று ஒற்று நீக்கி உறுதி பெறு (4)
7. காவலரைத் திரும்பிப் பார்த்துத் திகை (2)
9. சொத்தைப் பல் கடலதில் ஒன்று விட்டு ஒன்றைப் பிடுங்கியத்தை ஒருவாறு கலந்து நிறைய சொல் (2, 2, 2)
10. எடை பார்த்தால் நேசம் ஆயிரம் (5)
12. ஆசைப் பட்டவளை அடைய நினைத்து, கடைசியில் அகப்பட்டுக் கொண்டால் தீருமோ கவலை (2, 2)
13. பருந்துக்கும் யானைக்கும் நடுவில் கை வைத்தால் என்ன விரோதமா? (3)